tamilnadu

img

வடகிழக்கு பருவ மழைச் சேதம் : மாநிலத்தை சீரமைக்க ஒன்றிய அரசு நிதி வழங்கவேண்டும்

சென்னை, ஜன.6- வடகிழக்கு பருவ மழை ஏற்படுத்திய பெரும் சேதத்திலிருந்து தமிழ்நாட்டை மறு சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதி வழங்க ஒன்றிய அரசிடம் மாநில அரசு  வற்புறுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. தமிழக சட்டப்பேரவையில் வியாழனன்று(ஜன.6) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம். சின்னதுரை பேசியது வருமாறு:- கடந்த 7 மாத கால கொரோனா பெருந்தொற்று ஒழிப்பு, தடுப்பூசி போடப்பட்டது, உயிரிழப்பை தடுத்தது, பாதிப்படைந்த குடும்பத்திற்கு நிவாரணம் என நமது அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னைத் தமிழ்...

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், பட்டியலின - பழங்குடியின மக்கள் உரிமைக்கான ஆணையம், மருத்துவம், பொறியியல் பாடப் பிரிவுகள் தமிழில் மொழி பெயர்க்க துவக்கப்பட்டுள்ளது, மீண்டும் மஞ்சப்பை திட்டம், அன்னைத் தமிழ் அரியனை ஏறுவது, டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை என பல திட்டங்களை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்கிறது. வரலாறு காணாத வடகிழக்குப் பருவமழை சென்னை உட்பட தமிழகத்தில்பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. சாலைகள், பாலங்கள், நீர்நிலைகள், அரசு கட்டிடங்கள், பள்ளிக் கூடங்கள், அங்கன்வாடி கட்டிடம், காலனி வீடுகள் சிதலமடைந்து விட்டன. மறு சீரமைக்க ஒன்றிய அரசிடமிருந்து தேசிய பேரிடர் நிவாரண நிதியை பெறுவதற்கு வற்புறுத்த வேண்டும்.

ரூ.30,000 நிவாரணம்

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த நெல் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 6,038 இழப்பீடு வழங்கியது போதுமானதல்ல. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழிந்து போய் உள்ளதால் ஏக்கருக்கு ரூ. 30,000, வேலையிழந்த விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 10,000, காலனி வீடுகளை மறுசீரமைத்து கொடுக்கவும் முதலமைச்சர் தனது பதிலுரையில் அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. கோமாரி நோய் தாக்கம்... கிராமப்புற பொருளாதாரத்தில் உழவர்களின் வருவாயை பெருக்குவதிலும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது கல்நடை வளர்ப்பாகும். கோமாரி நோய் பாதிப்பால் கால்நடைகள் இறப்பு புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 6 மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. கோமாரி தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறந்திடுக

தமிழர் கலாச்சாரத்தை பறைசாற்றும் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றதாகும். அங்கு தான் தென் மாவட்டங்களிலேயே இயங்கும் ஒரே தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை கடந்த இரண்டாண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் வருமானம் இழந்துள்ளனர். இந்த ஆலையை இயக்கக் கோரி கடந்த 20 தினங்களுக்கும் மேலாக ஆலை வாயில் முன்பு விவசாயிகள், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் அவர்கள் ரூ. 15 கோடி நிதியுதவி அளித்து இந்த ஆலையை இயக்கவும், இந்தாண்டே கரும்பு அரவையை துவக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறுக்கப்படும் தொழிலாளர் உரிமைகள்

கடந்த ஏழு மாதங்களில் மூன்றுமுறை முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியது தமிழக தொழில் வளர்ச்சிக்கான தேவையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது நல்ல அம்சமாகும். மறுபுறம் ஆலைகள் மூடலும், வேலை இழப்பும், தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுவதும், சட்ட விதிமீறல்களும் தொடர்ந்து நடைபெறுகிறது. சமீபத்தில் ஃபோர்டு கார் உற்பத்தி ஆலை மூடப்பட்டது. ஃபாக்ஸ்கான் போராட்டங்களை அரசு கவனத்தில் கொண்டு தொழிலாளர் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க வேண்டும். நகர்ப்புற ஏழைகள் பயனடையும் வகையிலான நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அனைத்திலும் துவக்க வேண்டும். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்திட கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நேரடி தேர்தலே தேவை

விரைவில் நடைபெறவிருக்கிற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தலை மக்கள் தேர்ந்தெடுக்கும் முறையில் நேரடி தேர்தலாக நடத்திட வேண்டும்.

முதல்வருக்கு நன்றி...

குடிசைகளில் வாழும் மக்களின் வாழ்விடத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவது என்றும் குடிசைகளற்ற மாநிலமாக மாற்ற திட்டமிட்டுள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவிக் கொள்கிறோம். காலனி வீடுகளை கட்டிட தற்போது வழங்கும் தொகை போதுமானதல்ல. குறைந்தது ரூ. 6 லட்சமாவது ஒதுக்கீடு செய்தால் தான் பயனாகும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்று குடியிருப்புகளை மறு சீரமைத்து கொடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை பசுமலைப்பட்டியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசாரின் துப்பாக்கி குண்டு பாய்ந்து 11 வயது பள்ளி மாணவன் புகழேந்தி உயிரிழந்துள்ளான். அக்குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் ரூ. 10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. அதேவேளையில் மிகவும் வறிய நிலையில் உள்ள அக்குடும்பத்தினரில் எவரேனும் ஒருவருக்கு அரசு வேலையும். ஒரு வீடும் ஒதுக்கித்தரவும், ஒன்றிய அரசிடமிருந்து ரூ. 1 கோடி இழப்பீடு பெற்றுத் தருவதற்கு  தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு (டி.பி.சி) முன்களப் பணியார்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு சட்டப்பூர்வமான சலுகைகளை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக  பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் 12483 ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 2017,2018,2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மீது வழக்குகள் இருப்பதாக கூறி பணி நியமனம் செய்யப்படவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பு வந்த பிறகும் 5 வருடமாக இவர்கள் பணி கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் இவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு சின்னத்துரை பேசினார்.