காப்பீட்டு தொகையை ஓராண்டாகியும் வழங்காத மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன சங்கம்
ஊழியரின் மனைவி தமிழக அரசுக்கு கோரிக்கை
மயிலாடுதுறை, மே 22- உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை ஓராண்டாகியும் மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன சங்கம் வழங்கவில்லை என்றும், காப்பீட்டுத் தொகை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊழியரின் மனைவி கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை அருகிலுள்ள கழுக்காணிமுட்டத்தில் வசிப்பவர் தீபா(38). இவரது கணவர் அன்புச்செல்வன், தமிழ்நாடு மின்வாரியத்தில் கம்பியாளராக திருவிழந்தூர் பிரிவில் பணியாற்றி வந்தார். திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சையில் சில மாதங்களாக இருந்தவர் கடந்த 30/08/2024 அன்று இறந்து விட்டார். தனது கணவரின் இறப்பிற்குப் பிறகு, மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன சங்கம், வழங்க வேண்டிய காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தேவையான ஆவணங்களுடன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனாலும், காப்பீட்டு தொகையை வழங்குவதற்கு பதிலாக எல்ஐசி நிர்வாகத்தினர் கோப்புகளை திருப்பி அனுப்புவதாக கடன் மற்றும் சிக்கன சங்கம் முரண்பாடாக கூறுவதாக பாதிக்கப்பட்டுள்ள தீபா வேதனையுடன் கூறுகிறார். தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய தொழிற்சங்க மையத்தின்(சிஐடியு) மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் எம். கலைச்செல்வன் கூறும்போது, இது சம்பந்தமாக சிஐடியு சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரிடம் முறையிட்டு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. கடந்த ஓராண்டில் 3 மாவட்டங்களில் உயிரிழந்த மின் வாரிய ஊழியர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுகின்றது. குறிப்பாக கடந்த ஆண்டு உயிரிழந்த அன்புச் செல்வன் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படாததால் அவரது மனைவி தீபா மற்றும் இரு பிள்ளைகள் தவித்து வருகின்றனர். போதிய ஆவணங்கள் வழங்கியும் காப்பீட்டு தொகையைப் பெற்றுத் தருவதில் கூட்டுறவு கடன் சங்கத்தினர் அலட்சியம் காட்டுகின்றனர். இனியும் தாமதமானால் ஊழியர்களை திரட்டி போராட்டத்தை நடத்துவோம் என கலைச்செல்வன் கூறியுள்ளார்.