tamilnadu

img

கழுதை இளவரசி - உதயசங்கர்

முந்திக்காலத்தில் ஒரு ஊரில் பொன்னன் என்று ஒரு துணி வெளுப்பவர் இருந்தார். அவர் அந்த ஊரிலுள்ள  எல்லாருடைய துணிகளையும் வாரம் ஒருமுறை வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டுவார். அந்த மூட்டைகளை அவர் வளர்க்கும் கல்யாணி என்ற கழுதையின் மீது வைத்து தண்ணீர் துறைக்குக் கொண்டு போவார். அந்தத் துணிகளை அழுக்குப்போகத் துவைத்து வெயிலில் காயவைத்து மடித்து மறுபடியும் மூட்டையாகக் கட்டி கல்யாணியின் மீது வைத்துக் கொண்டுபோவார். வீட்டில் கரித்துண்டுகள் கனலும் தேய்ப்புப்பெட்டி இருக்கும். அந்தப் பெட்டியினால் மடித்த துணிகளை அழகாகத் தேய்த்து மடித்து மறுபடியும் ஊரிலுள்ள வீடு களுக்குக் கொண்டுபோய் கொடுப்பார். இந்த வேலை செய்வதற்காக அவருக்குத் தினசரி கூழோ, கஞ்சியோ, தானியமோ, பயறோ, கொடுப்பார்கள். என்றாவது குழம்பு கூட கிடைக்கும்.

பொன்னன் மகிழ்ச்சியாகவே துணிவெளுக்கும் வேலையைச் செய்து வந்தார். அவருடைய கழுதையான கல்யாணியை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். அவர் ஒண்டிக்கட்டை என்ப தால் கிடைக்கும் கூழோ, கஞ்சியோ, அதில் பாதியை கல்யாணிக்குக் கொடுத்து விடுவார். கல்யாணியை நல்ல பசுமையான மேய்ச்சல் நிலத்தில் புல் மேய்வதற்கு விடுவார். அதனால் கல்யாணியும் மகிழ்ச்சியாகவே இருந்தது. திடீரென்று பொன்னனுக்குக் கல்யாணம் நடந்து விட்டது. பொன்னனின் மனைவியான பொன்னிக்குக் கழுதையைப் பிடிக்கவில்லை. எப்போதும் பொன்னன் கழுதையைக் கொஞ்சிக் கொண்டேயிருக்கிறான் என்று அவளுக்குப் பொறாமை. அதனால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கழுதையை கையில் கிடைக்கும் கட்டை, கம்பு, துணி, கல், மண், எது கிடைத்தா லும் அடிப்பாள். அப்போது “இவ பெரிய இளவரசி பவுசு காட்டுறா..”

என்று திட்டுவாள். கல்யாணிக்கு ஏன் இவள்  இப்படி தன்னை வெறுக்கிறாள் என்று தெரிய வில்லை. அது அழுதுகொண்டே இருந்தது. அதனுடைய மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விட்டது. மகிழ்ச்சி இல்லாததினால் அதுவும் மெலிந்து கொண்டே போனது. பொன்னனுக்கு கழுதை ஏன் இப்படி மெலிந்து கொண்டே போகிறது என்று தெரியாமல் அதற்குத் தனியாக பழங்கள், கொள்ளு, என்று வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் மேலும் கழுதையைக் கவனிப்பதைப் பார்த்த  அவனுடைய மனைவி பொன்னிக்கு இன்னும்  ஆத்திரம் வந்தது. கழுதை இருக்கும்வரை தன்னுடைய கணவன் தன்மீது அன்பாக இருக்க மாட்டான் என்று நினைத்தாள். அதை எப்படியாவது விரட்டி விட வேண்டும் என்று நினைத்தாள். சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் பொன்னன் சலவைக்கு வேண்டிய உவர்மண் எடுக்க பக்கத்திலுள்ள ஊருக்குப் போயிருந்தான். அப்போது பொன்னி குடிசை யின் முன்னால் படுத்திருந்த கல்யாணியின் புட்டத்தில் நன்றாகப்பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பியால் சூடு போட்டு விட்டாள். அவ்வளவு தான் வலி தாங்க முடியாமல் கல்யாணிக்கழுதை காள் காள் காள் என்று கத்திக்கொண்டே காட்டுக்குள் ஓடி விட்டது.

காட்டில் அழுது கொண்டே போய்க் கொண்டிருந்த கல்யா ணியின் முன்னால் திடீரென்று கழுதைகளின் தேவதை தோன்றினாள். “கவலைப்படாதே கல்யாணி….அவள் அறியாமல் தவறு செய்கிறாள்.. திருத்தி விடலாம்..” என்று ஆறுதல் சொல்லி கல்யாணியின் காயத்தின் மீது கையை வைத்தாள். காயம் ஆறிவிட்டது. அதுமட்டுமல்ல கல்யாணி பொன்னிறமாக மாறிவிட்டது. தகதக வென ஜொலித்தது. கல்யாணியின் உடலில் புதுச்சக்தி பிறந்தது மாதிரி இருந்தது. கழுதைகளின் தேவதையிடமிருந்து விடை பெற்று ஊருக்குத் திரும்பியது. ஆனால் வீட்டுக்குப் போகவில்லை. ஊருக்குள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டி ருக்கிற கருப்பசாமி  வீட்டுக்கும் முன்னால் போய் காள் காள் என்று கத்தியது. அது கத்திய சத்தம் தங்கத்துகள்களாக மாறி விழுந்தது. கருப்பசாமி வீட்டுக்காரர்கள் அந்தத் தங்கத் துகள்களை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண் டார்கள். அதேமாதிரி இன்னொரு ஏழை வீட்டுக்குப் போய் கத்தியது. அங்கேயும் தங்கத் துகள்கள் விழுந்தன. இந்த செய்தி வேக மாகப் பரவியது. உடனே ஊரிலுள்ள வசதியாக இருந்தவர்கள் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு கல்யாணியை வீட்டுக்கு அழைத்து விருந்து போட்டார்கள். கல்யாணி அந்த விருந்தச் சாப்பிட்டது. ஆனால் கத்தவில்லை.

காற்று மாதிரி தகவல் குடிசையிலிருந்த பொன்னிக்கும் போய்ச் சேர்ந்தது. அவள் ஓடோடி வந்தாள். அவள் கல்யாணியைப் பார்த்து விட்டு ஆச்சரியப்பட்டாள். ஆகா. நாம் தப்பு பண்ணிட்டோமே.. என்று நினைத்துக் கொண்டு கல்யாணியைக் கூப்பிட்டாள். கல்யாணி திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பொன்னி வீட்டில் இருந்த கூழு, கஞ்சி, எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். கல்யாணி மூக்கைக்கூடத் திருப்பவில்லை. பின்னர் கல்யாணியின் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டு அழுதாள். “என்னை மன்னிச்சிரு.. கல்யாணி.. உழைப்பை மதிக்கணும்னு எம்புருசனுக்குத் தெரிந்த விசயம் எனக்குத் தெரியாமப் போயிருச்சு.. இனிமே நான் அப்படிச் செய்ய மாட்டேன்…” கல்யாணிக்குப் பாவமாக இருந்தது. தவறு செய்பவர்கள் திருந்தி விட்டாலே போதும் என்று நினைத்தது. சரி என்று அவளுடன் குடிசைக்கு வந்து காள் காள் என்று கத்தியது. வீடு முழுவதும் தங்கத்துகள்கள் விழுந்தன. உவர்மண் எடுக்கப்போன பொன்னன் திரும்பி வரும்போது வீடும் பொன்னியும் கல்யாணியும் மாறியிருந்தார்கள். பொன்னி இப்போது கல்யாணியை இளவரசி என்று தான் கூப்பிடுகிறாள். அதுக்கப்புறம் தான் மக்கள் எல்லாரும் கழுதை கத்தினால் நல்லது நடக்கும் கழுதையைப் பார்த்தால் பணம் கொழிக்கும் என்று நம்பத்தொடங்கினார்கள்.