tamilnadu

img

தீபாவளி கொள்முதலா? திருவிழா கூட்டமா?

அண்ணே, அம்மா, தங்கச்சி நீங்க வாங்குற பொருளுக்கு காசு கொடுக்கவேணாம். நாங்க தொண்டை வலிக்க கத்துறோம். இன்னைக்கும் நாளைக்கும் காசு சம்பாதிச்சாதானம்மா, எங்க நாளு ஐந்து பேருக்கு சம்பளம் கிடைக்கும் ... இது மதுரையின் நான்கு மாசி வீதிகள், விளக்குத்தூண் பகுதியில்  சாலையோர வியாபாரிகளின் குரல். திங்களன்று தீபாவளி பண்டிகையென்றாலும் சனிக்கிழமை காலை 10 மணிக்கே மதுரை நகர வீதிகளில் மூச்சுத்திணறும் கூட்டம்.  விருதுநகர், திண்டுக்கல்,  தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் என தனித்தனி மாவட்டங்களாக இருந்தாலும் திருவிழா என்றால் இவர்கள் கூடுவது மதுரையில் தான். சனிக்கிழமை காலை மதுரை நகரைச் சுற்றி வந்தபோது இவ்வளவு குறைவாக பொருட்கள் வாங்க முடியுமா? எப்படி வியாபாரிகளுக்கு கட்டுபடியாகிறது? என்ற கேள்வியும் எழத்தான் செய்தது.

தீபாவளிக்கு சிறிதும் தொடர்பில்லாத லாங்-சைஸ் நோட்டு ரூ.30-க்கும், கிங் சைஸ் நோட்டு ரூ.10-க்கும் விற்கப்பட்டது தான் ஆச்சரியம். பள்ளிக் கல்லூரி மாணவிகள் எதை வாங்கினரோ இல்லை பை நிறைய நோட்டுகளை அள்ளிச் சென்றனர். ரூ.235 மதிப்புள்ள டாப்ஸ் ரூ.150-தான். வாங்குங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றழைத்த வியாபாரியைச் சுற்றி ஒரே கூட்டம். ஒரு கல்லூரி மாணவி ஏங்க ரூ.100-க்கு ஐந்து டாப்ஸ் தருவீங்களா எனக்கேட்க... அந்த வியாபாரியோ ஏம்மா செல்லில் படம் பார்க்க மாசம் ரூ.200 செலவழிக்கிறீங்க... போடுற டிரஸ் விலையை இப்படி குறைவாக கேட்கலாமா? எடுங்க... எடுங்க... ஒரு உருப்படிக்கு ரூ.5 வேண்டுமானால் குறைக்கிறேன் என்றார்.

ரூ.100-க்கு, ரூ.150-க்கு செருப்பு தாரோமுங்க... கடையில விக்கிற செருப்பும் நாங்க விக்கிற செருப்பும் ஒண்ணு தானுங்க... மூன்று ஜோடியா வாங்கிங்கிட்டா ரூ.650 தானுங்க என ஒரு வியாபாரியும்,  மற்றொரு வியாபாரி மற்றொரு நிறுவனத்தின் தயாரிப்புகளை ரூ.300 முதல் ரூ.500 வரை விற்றார். பெரும்பாலும் பெண்களுக்கான டிசைன்களே அதிகமிருந்தன.

ஒரு ஜோடி தலையணை ரூ.100, ஒரு ஜோடி பெட்ஷீட் ரூ.100, ஏர் பில்லோ வகைகள் ரூ.100 முதல் ரூ.150-க்கு விற்கப்பட்டது.  எவர்சில்வர் தாம்பாளம் ரூ.150-க்கு விற்கப்பட்டது. பாய்கள் சல்லிசான விலைக்கு கிடைக்கிறது. சிறுவர்-சிறுமிகள் அணியும் கைக்கடிகாரம் அழகழகான வடிவமைப்பில் பல்வேறு வண்ணங்களில் ரூ.80-க்கு விற்கப்பட்டது. அந்தக் கடிகாரத்தை நாம் ரூ.50-க்கு கேட்க, முதல் வியாபாரம் இடத்தை காலி பண்ணுங்க என்றார் அந்த வியாபாரி. பெண்களுக்கான விதவிதமான காதணிகள் கேட்கிற விலைக்குக் கிடைக்கிறது.

அப்படியே இனிப்புகள் விற்கும் கடைகளை சுற்றிவந்தோம். மதுரை ரயில் நிலையம் அருகில் 68 ஆண்டுகளாக அல்வா கடை நடத்தி வரும் ஹல்வா சக்கரவர்த்தி ஸ்ரீபிரேம விலாஸ் அல்வாக்கடையில் கூட்டம். வியாபாரம், மக்கள் வருகை குறித்து இந்நிறுவனத்தை நடத்தி வருபவர்களில் ஒருவரான சசி கூறுகையில், “மூன்றாவது தலைமுறையாக நடத்திவருகிறோம்.  விலைவாசி அதிகம் தான். அதுவும் ஒரே சீராக இல்லை. ஏற்ற-இறக்கத்தோடு உள்ளது. இனிப்பு-கார வகைகளுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கிறார்கள் என்றார். ஆன்லைன்-வர்த்தகத்தில் ஈடுபடுகிறீர்களா எனக் கேட்டதற்கு அதெல்லாம் இல்லை என்றார். ஒரு கிலோ அல்வா ரூ.340, அனைத்து இனிப்பு வகைகள் ஒரு கிலோ ரூ.440, பால் சுவீட்ஸ் ரூ.480. கார வகைகள் ரூ.360 முதல் ரூ.380 வரை விற்கிறோம் என்றார்.

சரி எளிய மக்களுக்கு ஒன்றுமே இல்லையா ரூ.1-க்கு முறுக்கு ரூ.5-க்கு அதிரசம் முறுக்கு கிடைக்கிறது. மதுரை செல்லூர் பகுதியில் 16 ஆண்டுகளாக அதிரசம், முறுக்கு தயாரிக்கும் உசிலம்பட்டி பகுதி மேலச் செம்பட்டியைச் (புத்தூர் மலை) சேர்ந்த ஆர்.மலைராஜன் கூறுகையில், 16 வருடங்களாக இந்தத் தொழிலை நடத்தி வருகிறேன். அதிரசம், முறுக்கு தயாரிப்பிற்கான உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 சம்பளம் போக எனக்கு நாளொன்றுக்கு ரூ.500-கிடைத்தால் போதும் என்ற நிலை தான் உள்ளது என்றார். தொழிலாளர்கள் கூறுகையில், நாளொன்றுக்கு மூன்று டின் எண்ணெய்யை காலி செய்ய வேண்டும். மூன்று டின் எண்ணெய்யில் பதார்த்தங்களை தயார் செய்தால் ரூ.500 சம்பளம் கிடைக்கும் என்றனர். நாங்கள் தயாரிக்கும் முறுக்கு 15 நாட்களுக்கு அப்படியே இருக்கும். மக்கள் நேரில் வந்து வாங்கிச் செல்லலாம் என்றார்.

பட்டாசுக்கடைகளிலோ கட்டுக்கடங்கா கூட்டம். ஏகப்பட்ட கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளை போட்டிபோட்டு விற்றன. மதுரை யுவராஜ் பட்டாசு நிறுவனத்தில் விலைகள் ஓரளவு குறைவாகவே இருந்தது. இவர்கள் நீண்டகாலமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தவிர பட்டாசு சிறுசேமிப்பையும் நடத்தி வருகின்றனர். வருடத்தில் ஒரு நாள் தீபாவளியைக் கொண்டாட பொருட்கள் வாங்க மதுரையில் திரண்ட மக்களுக்கு இந்தாண்டு பெரும் துயரமாக இருந்தது குண்டும்-குழியுமான சாலைகள், ஆங்காங்கே தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய கழிவு நீர். வாயையும்-மூக்கையும் பொத்திக்கொண்டு  வசைபாடிக்கொண்டே சென்றனர்.

“ஏழைக்கேற்ற எள்ளுருண்டை” என்பார்கள். எப்படிப் பார்த்தாலும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு குறைந்தது ரூ.4000 தேவை. விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடாமல், சாலையோர வியாபாரியிடம் எவ்வளவு தான் பேரம் பேசினாலும் விலைவாசியைத் தான் குறைக்க முடியவில்லை.

-நமது நிருபர்கள், 
படம்: ஜெ.பொன்மாறன்