இளைஞர்களுக்கு வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையில் திருச்சி நோக்கிச் செல்லும் பிரச்சாரப் பயணக்குழுவிற்கு விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவருமான தோழர் என்.சங்கரய்யா முஷ்டி உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தனது இல்லத்தின் வழியாகச் சென்ற பயணக்குழு நிர்வாகிகளை அழைத்துப் பேசிய என்.சங்கரய்யா, “சிறப்பாக செய்யுங்கள், வலுவாக செய்யுங்கள்” என வாழ்த்து தெரிவித்தார். இதில் உற்சாகமடைந்த வாலிபர்களும் முஷ்டி உயர்த்தி செவ்வணக்கம் தெரிவித்து முழக்கமிட்டனர். இந்நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சங்கரய்யாவின் இந்த வாழ்த்து, தமிழகம் முழுவதும் நான்கு முனைகளிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருக்கும் வாலிபர் சங்க ஊழியர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதேவேளையில் நெல்லையில் மாமேதை லெனின் சிலைக்கு மரியாதை செலுத்தியும், கோவில்பட்டி தோழர் அமல்ராஜ், தியாகி லீலாவதி ஆகியோரது நினைவுகளைப் போற்றியவாறும் வாலிபர் சங்க சைக்கிள் பயணம் உத்வேகத்துடன் தொடர்கிறது.
(மேலும் செய்தி 3)