கோவை, மார்ச் 4- பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பாக அறிவிக்கப் பட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை மனுதாக்கல் செய்யவிடாமல் தாக்கி தனி அறையில் அடைத்தனர். பின்னர் காவல்துறை மற்றும் அதி காரிகளின் துணையுடன் தன்னிச்சை யாக திமுக கவுன்சிலர் ஒருவரை பேரூராட்சி தலைவராக அறிவித்த னர். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூ ராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் பொறுப்பிற்கு கூட்டணி கட்சிகளுக்கான இடங்களையும் பேச்சுவார்த்தை நடத்தி திமுக தலைமை அறிவித்தது. அதில் கோவை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையேற்று மார்க்சிஸ்ட் கட்சி பெரியநாயக்கன்பாளைய பேரூ ராட்சி தலைவர் பொறுப்பிற்கு பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் என்.சிவ ராஜ் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் வெள்ளியன்று என்.சிவராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட் டோர் தலைவர் பொறுப்பிற்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றனர். அப்போது அங்கிருந்த திமுகவினர் என்.சிவராசை மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான என்.பாலாமூர்த்தியை தாக்கினர். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் மன்ற உறுப்பினர் என்.சிவராஜ், சிபிஎம் நிர்வாகிகள் கே. மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அனைவரையும் தனி அறையில் அடைத்தனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அறையில் அடைத்து வைத்துவிட்டு, தன்னிச்சையாக திமுகவை சேர்ந்த விஷ்வபிரகாஷ் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
திமுகவினர் இந்த அராஜகநடவடிக்கைகளுக்கு காவல்துறையும் துணையாக நின்றது. திமுக தலைமையின் அறிவிப்பை ஏற்காமல் பெரிய நாயக்கன் பாளையம் பகுதி திமுக வினர் தன்னிச்சையாக முடிவெடுத்து அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டது அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து திமுகவினரால் தாக்கப்பட்ட என். பாலமூர்த்தி பெரியநாயக்கன் பாளைய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் தன்னை தாக்கிய அடையாளம் தெரிந்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் மனுவை அளித்தார். இதேபோன்று பெரியநாயக்கன் பாளைய பேரூராட்சி மன்ற சிபிஎம் உறுப்பினர் என்.சிவராஜன் பேரூராட்சி செயல் அலுவலரிடம், ஜனநாயக முறைப்படி என்னை மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து சட்டவிரோதமாக தேர்தல் நடத்தப் பட்டிருக்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார்.