மதுரை,ஆக.13- சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தண்ணீர் தொட்டி வடிவிலான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தமிழக அரசு சார்பில் 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கடந்த ஜுன் 13-ஆம் தேதியில் இருந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏழு ஏக்கரில் 23 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் நீர் சேகரிக்கும் தொட்டி வடிவிலான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி அமைப்பு கற்களால் மூடப்பட்டு திட்டு போன்று உள்ளதால் அந்தக் கற்களை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இரட்டை சுவர், ஒற்றைச் சுவர், வட்டச் சுவர், உரை கிணறு ஒன்றின் பகுதியாக வெளிப்பட்டுள்ள 8 அடுக்குகள் பழங்கால அணிகலன்கள், சுடுமண்ணாலான பாசிமணிகள், கண்ணாடி மணிகள், மை தீட்டும் குச்சி, மண்பானைகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.