tamilnadu

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு

வெம்பக்கோடை, மே 16- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே நடைபெற்ற  இரண்டாம் கட்ட அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெம்பக்கோட்டை அருகே உள்ளது விஜயகரிசல்குளம். இங்கு  25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணிகளுக்காக  தமிழக அரசானது ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 16 அன்று அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் அகழாய்வுப்பணிகள்  தொடங்கப்பட்டது.  இந்த அகழாய்வுக்காக தோண்டப்பட்ட 15 குழிகளில், நுண் கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கிடைத்தன. அதன்படி தங்க அணிகலன், சுடுமண்ணாலான முத்திரை, ஆண் உருவம், சுடுமண்ணாலான சங்ககால முத்திரை, முழு சங்கு வளையல், இருபுறமும் உருவம் பதித்த செப்பு நாணயம் உள்ளிட்ட மூவாயிரம் வகையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த ஏப்ரல் 6 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தற்போது வரை சுடுமண்ணால் ஆன புகைபிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 வகையான தொன்மையான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  மே 16 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற அகழாய்வில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.  மேலும், அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.