tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

நவீன செல்லிடப் பேசி  வழங்க மாற்றுத்திறனாளிகள் தேர்வு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத, கண் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு, நவீன செல்லிடப் பேசி வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வுப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.  இதனை, மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தேர்வில் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத 55 மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வை குறைபாடுடைய 33 மாற்றுத்திறனாளிகள் என பயனடைய உள்ள மொத்தம் 88 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜி. அருள்பிரகாசம், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஜி. குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மூதாட்டி கொலை வழக்கில்  குற்றவாளிக்கு  5 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை, ஏப்.25-  புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழைய தொடக்கப் பள்ளி வீதியைச் சேர்ந்த மீனாட்சி ஆச்சி (74) என்பவர் கடந்த 2015 ஜூன் 4ஆம் தேதி வீட்டில் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மீனாட்சி ஆச்சியின் உறவினர் சுப்பையா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பனையப்பட்டி காவல்துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் (51) என்பவரைக் கைது செய்தனர். நகைகள், பணத்தைத் திருடும் நோக்கில் கத்தியைக் காட்டி மிரட்டி கீழே தள்ளி தாக்கியபோது, கீழே விழுந்த மூதாட்டி இறந்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, குற்றவாளி செல்வராஜுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து செல்வராஜ், பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இரவில் மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி! போராட்டம் நடத்திய 26 பேர் மீது வழக்கு

திருச்சிராப்பள்ளி, ஏப்.25-  திருச்சி திருவானைக்காவல் பகுதியில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் இரவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.  திருச்சி மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை மற்றும் அதன்சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வார காலமாக தொடர் மின்வெட்டு நீடித்து வருவதாக கூறப்படுகிறது.  வீட்டில் பயன்படுத்தும் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பழுதாகின்றன. அதுமட்டுமில்லாது இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தினமும் இரவு 10 மணிக்கு மேல் 2 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.  இந்த நிலையில், வியாழனன்று இரவு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  திருவானைக்காவல் மெயின் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்போது அங்கு வந்த காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு  பாராட்டு விழா

தஞ்சாவூர், ஏப்.25-   தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை குருவிக்கரம்பை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.  விழாவிற்கு சேதுபாவாசத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மா.க. இராமமூர்த்தி, சுப. சிவசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 2024-2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு தேர்வில் வெற்றி பெற்று அரசின் உதவித்தொகை பெறுவதற்கு தேர்வான சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பள்ளிகளை சேர்ந்த 9 மாணவர்களுக்கு கேடயம் வழங்கி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.  மேலும், மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலும், பள்ளி அளவிலும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இருந்து  கடத்தி வரப்பட்ட  ரூ.10 கோடி உயர் ரக  கஞ்சா பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, ஏப்.25-  திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடைமையில் போதை பொருட்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், சோதனை செய்தபோது அதில் ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் உயர்ரக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 9.9 கிலோ. அதன் மொத்த மதிப்பு ரூ.10 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மினி வேன் மோதி விவசாயி பலி

தஞ்சாவூர், ஏப்.25-  தஞ்சையை அடுத்த வயலூர் அருகே உள்ள சாரப்பள்ளத்தைச் சேர்ந்தவர் விவசாயி சத்தியராஜ்(38). இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் விவசாய நிலத்திற்குச் செல்வதற்காக புறப் பட்டார். தஞ்சை- கும்பகோணம் சாலையில், வயலூர்  பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே  வந்த மினி  லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சத்தியராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், சத்தியராஜ் மீது  மோதிய மினி லாரி நிற்காமல் சென்றுவிட்டது. காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சத்தியராஜின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வு பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சத்தியராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மினி லாரியை தேடி வருகின்றனர்.