“அசாதாரண புத்திசாலித்தனம், நேர்மை மற்றும் நிறவெறி சக்திகளுக்கு எதிராக வெல்ல முடியாத மனிதர்” என்று அழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை டெஸ்மாண்ட் உம்பிலோ டுட்டு ஞாயிறன்று தனது 90-ஆவது வயதில் காலமானார். டெஸ்மாண்ட் டுட்டு 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கிற்கு மேற்கே உள்ள கிளர்க்ஸ்டோர்ப் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். டெஸ்மாண்ட் டுட்டு ஒரு தென்னாப்பிரிக்கப் போராளி ஆங்கிலிக்கன் திருச்சபைப் பேராயரும் ஆவார். 1980-ஆம் ஆண்டுகளில் இனவெறிக்கு எதிராக குரல்கொடுத்தார். இதனால் உலகெங்கும் அறியப்பட்டார். எய்ட்ஸ், காசநோய், தற்பாலின வெறுப்பு, திருநங்கைகள் மீதான பாகுபாடு, வறுமை மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிராக தீவிரமாகப் போராடியவர்.
அதாவது “நிறத்தால் பாகுபாடு பார்க்கப்படும் இந்த நாட்டில் இருக்கும் உங்களது முதலீடுகளை திரும்பப் பெறுங்கள். இதனால் இழப்பு எங்களுக்குத்தான். ஆனால் அது ஒரு அற்புதமான ‘நோக்கத்துக்கான இழப்பு” என்றார். இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையால் அனுப்பப்பட்ட குழுவுக்கு ஆலோசனையும் வழங்கினார். 1990-ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவில் இனவெறி, நிறவெறி ஆட்சி வீழ்ந்த பிறகு பிரபலமாக வெளிப்படையாகப் பேசப்பட்டவர்களில் ஒருவர் டுட்டு. தென்னாப்பிரிக்க மக்களின் குறை, நிறைகளை எடுத்துச் சொல்வதிலும் அநீதிகளை எதிர்ப்பதிலிருந்தும் அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. 1994- ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கறுப்பின குடியரசுத் தலைவராக பதவியேற்றபோது தென்னாப்பிரிக்காவை விவரிக்க “ரெயின்போ நேஷன்” (“வானவில் தேசம்”) என்ற வார்த்தையை உருவாக்கியவர் டுட்டு. தனது கனவு இன்னும் நனவாகவில்லை என்றும் வருந்தினார்.
வறுமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை போக்கத் தவறியதற்காக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) கட்சியின் முன்னாள் தலைவர்களை விமர்சித்தார். கேபினட் அமைச்சர்களுக்கு தாராளமாக (அதிகம்) சம்பளம் ஏன் என நெல்சன் மண்டேலாவிடம் கேள்வியெழுப்பவும் டுட்டு தயங்கவில்லை. தென்னாப்பிரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமாவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்களையும் கடுமையாக விமர்சித்தவர் டுட்டு. ஆசிரியராகப் பணியாற்றி வந்த டுட்டு கறுப்பினக் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட கீழ்த்தரமான கல்வி முறை மீதான கடும் சினம் கொண்டு அதற்கெதிராக குரல் கொடுத்தார். பின்னாளில் அவர் கிறிஸ்தவப் பாதிரியாக மாறினார். ஜோஹன்னஸ்பா்க் மற்றும் கேப் டவுன் நகர தேவாலயங்களில் முதல் கருப்பின தலைமைப் பாதிரியாராகப் பொறுப்பு வகித்த அவா், 1986-ஆம் ஆண்டு பேராயராக நியமிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் நிறவெறி காரணமாக நீடித்த சர்வதேச தடைகளுக்கு எதிராகப் போராடினார். பின்னர் உலக நாடுகளில் வாழும் மனிதர்களின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்ய தனது பதவியைப் பயன்படுத்தினார். வெள்ளைச் சிறுபான்மை ஆட்சியை எதிர்த்துப் போராடியதற்காக 1984- இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
மண்டேலாவின் தோழன்
நீண்ட கால நண்பர்களான டுட்டுவும் மண்டேலாவும் தென்னாப்பிரிக்க நகரமான சோவெட்டோவில் ஒரே தெருவில் சிறிது காலம் வாழ்ந்தனர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இருவர். ஒரே தெருவில் வசித்தவர் இவர்கள் தான். 1986-ஆம் ஆண்டு மனிதத்திற்கான ஆல்பர்ட் சுவைட்சர் பரிசையும் 1987-ஆம் ஆண்டு பாசெம் இன் டெர்ரிசு பரிசையும் 1999-ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசையும் 2005-ஆம் ஆண்டு காந்தி அமைதிப் பரிசையும் பெற்றார். 2009-ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. டுட்டு 1997- ஆம் ஆண்டு புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். 2021-ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் அவர் மருத்துவமனையில் இருந்து சக்கர நாற்காலியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக பெறுவதற்காக வெளியே வந்தார். அப்போது கைகளை மட்டும் அசைத்த அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. போர்க் குணத்தின் சின்னமாகத் திகழ்ந்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டெஸ்மாண்ட் டுட்டு ஞாயிற்றுக்கிழமை காலமானார். இதுகுறித்து அதிபா் சிறில் ராமபோசா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“டெஸ்மாண்ட் டுட்டு யாருடனும் ஒப்பிடமுடியாத ஒரு தேச பக்தா். உழைக்காமல் கடவுளை மட்டும் நம்புவதால் எந்தப் பலனும் இல்லை என்ற பைபிள் கோட்பாட்டை தனது வாழ்வால் நிரூபித்தவா். தொன்னூறு வயதான டெஸ்மாண்ட் டுட்டு, நோபல் பரிசு பெற்று உயிரோடு இருந்த கடைசி தென் ஆப்பிரிக்கா் என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். நெல்சன் மண்டேலா அறக்கட்டளை டுட்டுவை “ஒரு அசாதாரண மனிதர், ஒரு சிந்தனையாளர், ஒரு தலைவர், ஒரு மேய்ப்பன்” என்று புகழாரம் சூட்டியுள்ளது. உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு அவரது வாழ்க்கை ஒரு ஆசீர்வாதமாக (முன்னுதாரணமாக) உள்ளது என்று தெரிவித்துள்ளது. டுட்டு மறைவுக்கு இந்திய குடியரசு துணைத் தலைவா், வெங்கய்யா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டவா்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள், மனித உரிமை அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா். தென்னாப்பிரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது. காலமான டெஸ்மாண்ட் உம்பிலோ டுட்டு-வுக்கு நொமொலீசோ லியா ஷென்க்ஷான் (88) என்ற மனைவியும் ட்ரெவர் தம்சங்கா (65), தெரசா தண்டேகா (64), நவோமி நோன்டோம்பி டுட்டு (61). எம்போ ஆண்ட்ரியா டுட்டு (58) ஆகிய நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.