tamilnadu

img

சேவைகளை ஜனநாயகப்படுத்தியது தமிழகத்தின் தனித்தன்மை

மில்பிடாஸ், (கலிபோர்னியா), டிசம்பர் 28- இந்திய விடுதலையின் 75வது ஆண்டு பவள விழாவை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் கொண்டாடியது. ​​தமிழகம் சிறந்து விளங்கும் மாநிலமாக விளங்குவதற்கு சமூக சேவைகளை ஜனநாயகப்படுத்துவதே காரணம் என்று  தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் இவ்விழாவில் பேசினர். டிசம்பர் 18 அன்று, இந்திய விடுதலையின் 75வது ஆண்டை சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், சான் ஃபிரான்சிஸ்கோ இந்தியத் தூதரகத்துடன் இணைந்து “இந்தியா 75 - பவள விழாக் கொண்டாட்டம்” என்ற பொருளில் கொண்டாடியது.   இணையவழியில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் சிறப்புமிக்க தமிழ்நாட்டு தலைவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு “விடுதலை இந்தியாவின் 75 ஆண்டுகால வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு” குறித்து உரையாற்றினார்கள். பல்வேறு துறைகள் சார்ந்த பேச்சாளர்களின் உரையின் சுருக்கம் வருமாறு:

முனைவர். மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் இயக்குனர், இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் (ஐஎஸ்ஏசி), பெங்களூர். 

இவர் இஸ்ரோவின் இரண்டு குறிப்பிடத்தக்க திட்டப்பணிகளான சந்திரயான்-1, மங்கள்யான் ஆகியவற்றிற்கு தலைமையேற்று வழிநடத்தியவர்.  விண்வெளி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதற்கும், விண்வெளித் திறன் கொண்ட முன்னணி உலகநாடுகளில் ஒன்றாகத் திகழ்வதற்கும் புதுமைகளை உருவாக்கியதன் மூலம், 1990களின் பிற்பகுதியில் எதிர்கொண்ட பல்வேறு தொழில்நுட்பத் தடைகளை முறியடித்த இந்தியாவின் திறத்தைச் சுற்றி அவரது ஊக்கமூட்டும் உரை அமைந்திருந்தது.   உலகளாவிய செயற்கைக்கோள் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பையும், (நிசார்) NISAR (NASA-ISRO Synthetic Aperture Radar) பற்றியும், 75வது விடுதலை நாளை முன்னிட்டு 75 செயற்கைக்கோள்களை அனுப்ப மாணவர்கள் எவ்வாறு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.

மருத்துவர். ஜோசப் அமலோற்பவநாதன், தமிழ்நாடு மாற்று அறுவை மருத்துவ ஆணையத்தின் (TRANSTAN) நிறுவனச் செயலாளர். 

இவர் தமிழ்நாட்டில் சடல உறுப்புமாற்று அறுவை மருத்துவத் திட்டத்தை நிறுவி மிகவும் வெற்றிகரமாக வளர்த்தெடுத்தவர். இந்தத் திட்டம் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. சடல உறுப்புமாற்று அறுவை மருத்துவத் திட்டத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியும், எளிய மக்களும் மலிவு விலையில் உறுப்புமாற்று மருத்துவம் பெறக்கூடிய வகையில் முன்னேற்றம் கண்டுள்ள விடுதலை இந்தியாவின் மருத்துவ வெற்றிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.  இந்த முயற்சிகளால் உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 

பி.சிவகாமி, முன்னாள் ஆட்சிப் பணி அலுவலர்  தலித் பெண்ணிய செயல்பாட்டாளர், எழுத்தாளர். 

 இவர் புதிய இந்தியாவின் வளர்ச்சியில் இந்திய ஆட்சிப்பணித் துறையின் (Indian Administrative Services) சிறப்பு பற்றி பேசினார்.  மேலும், ஆங்கிலேய ஆட்சியின் ஒரு கருவியாக இருந்து, பின்னர் இந்தியக் குடியரசின் ஆட்சிப்பணித் துறையாக மாற்றமடைந்தது வரையிலான பரிணாம வளர்ச்சி பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார். 

மா.ஃபா. பாண்டியராஜன்  தனியார்  மனிதவள மேலாண்மை நிறுவனத்தை நிறுவியவர், முந்தைய தமிழ்நாடு அரசில் பள்ளிக்கல்வி, இளையோர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராகவும், பின்னர் தமிழ்மொழி பண்பாடு தொல்லியல் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். 

முன்னாள் அமைச்சர்  பாண்டியராஜன், முன்னணி தொழில்களைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு எவ்வாறு முன்மாதிரி மாநிலமாக உள்ளது என்பதையும், தனியார் வங்கிகள் தொடங்குவதிலும் சிறு-குறு-பெரு-நிறுவனங்களின் பன்முகத்தன்மையிலும் முன்னோடியாக இருந்துவருகிறது என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.  அவர் தமிழ்நாட்டின் நெடுங்காலமாகத் தொடரும் இயற்கையான தொழில்முனையும் இயல்பைக் கொண்டாடினார்.  மேலும், தமிழ்நாட்டின் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கும் போக்கை (Startup Ecosystem) வளர்த்தெடுக்க முதலீடுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் மூலம் உதவுமாறு அமெரிக்கத் தமிழர்களை, குறிப்பாக சிலிக்கான் பள்ளத்தாக்கில் வாழ்பவர்களை  கேட்டுக்கொண்டார்.  

முனைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  நிறுவனர் தலைவர்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி எவ்வாறு வலுவூட்டியுள்ளது, குறிப்பாக மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் எவ்வாறு பங்களித்தன என்பதன் சிறப்பைப் பற்றி பேசினார். கல்வியின் மூலம் இந்த சமூக வாய்ப்புகள் ஏற்றதாழ்வுகளைக் குறைக்க உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். 

 ‘தி இந்து’ என். ராம், தி ஹிந்து, பிரண்ட்லைன் இதழ்களின் முன்னாள் தலைமை ஆசிரியர்.

 தமிழ்நாட்டின் வெற்றி வாய்ப்புகள் பற்றிய அவரது அறிவு கூர்மையுடன் கூடிய விரிவான பகுப்பாய்வு வியக்கத்தக்கது. இந்த ஆண்டு “இந்தியா டுடே” இதழ் வெளியிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சி அளவீடுகளின் குறியீட்டில் தமிழ்நாடு மற்ற இந்திய மாநிலங்களைவிட மிகவும் மேம்பட்டு நிற்கும் சிறப்பை அடிகோடிட்டுக் காட்டினார்.  பரவலாக்கப்பட்டிருக்கும் கல்வி, தொழில்மயமாக்கல், உடல்நலத்துறை மேம்பாடு, தொழில்துறை மேம்பாடு, தொழில்முனைவு போன்ற சிறப்பான கொள்கைகளே தமிழ்நாட்டின் வெற்றிக்கு காரணம் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதை  எடுத்துரைத்தார்.  1960களில் இருந்து, சீர்திருத்தத்திற்குப் பிந்தைய இந்தியாவில், இந்தக் கொள்கைகளின் உதவியுடன் தமிழ்நாட்டினால் வியத்தகு அளவில் வறுமை அளவைக் குறைத்திருப்பது மட்டுமல்லாமல், அதிக தனிமனித வருமானத்தை உறுதிப்படுத்தவும் முடிந்திருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.  தனிமனித வளர்ச்சியையும்  சமூக முன்னேற்றக் கட்டமைப்பு மாற்றத்தையும் இணைத்து வளர்த்தெடுக்கும் செயல்திறனுக்கான தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை இந்தியாவின் பிற பெரும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தனித்துவமாக மிளிர்கிறது. பெண்களுக்கான தொழில்முனைவு, சமவாய்ப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. மேலும், இந்தியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் 37 கல்லூரிகளை தமிழ்நாடு தன்வயத்தே கொண்டுள்ளது. கல்விச் சேர்க்கையில் (Gross Enrollment Ratio) இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது மட்டுமல்லாமல், உயர்கல்வியில் ஆண்பெண் பாகுபாட்டை முற்றிலுமாக ஒழித்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

இந்தியத் தூதர் முனைவர் டி. வி. நாகேந்திர பிரசாத், இந்தியத் தூதரகம் - சான் ஃபிரான்சிஸ்கோ. 

வளைகுடாப்பகுதி தமிழ்ச் சமூகத்துக்கும், பிற மக்களுக்கும் தமிழ்மன்றம் ஆற்றிவரும் தொண்டை இந்தியத் தூதர் பாராட்டினார். கதார் இயக்கம் (Ghadar Movement) தொடங்கப்பட்ட கட்டடம் தற்போது இந்தியத் தூதரகத்திற்குச் சொந்தமாக இருப்பதாகவும், அதனை இந்திய அமெரிக்கர்களுக்கான அருங்காட்சியகமாகவும் சமூகக் கூடமாகவும் செயல்படும் வகையில் புதுப்பித்து வருவதாகவும் அவர் அறிவித்தார்.  தகவல் தொழில்நுட்பம், கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உடல்நலம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்தியா சார்ந்த புதிய தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க இந்தியத் தூதரகம் எடுத்துவரும் முயற்சிகளையும் அவர் விவரித்தார். பின்னர், இந்தியத் தூதர் இந்த கொண்டாட்டத்தின் நினைவாக தமிழ்மன்றத்தால் நடத்தப்பட்ட சதுரங்கப் போட்டி, ஓவியப் போட்டிகளின் வெற்றியாளர்களை அறிவித்தார்.  இந்த இணையவழிச் சந்திப்பில் ஏறத்தாழ 100 தமிழ் மன்ற உறுப்பினர்களும், பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். தமிழ் மன்றம் ஒவ்வொரு பேச்சாளரின் தனிப்பட்ட பேச்சுக்களையும் விரைவில் தனது யூடியூப் சேனலில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

சான்ஃபிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் 1980 ஆம் ஆண்டு முதல் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இயங்கி வரும் ஒரு பண்பாட்டு அமைப்பு ஆகும்.  இது தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளைகுடாப் பகுதியில் வளர்த்தெடுப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இயங்கி வரும் தொண்டு நிறுவனம். வளைகுடாப் பகுதியின் தமிழ் பேசும் மக்களையும் தமிழ்நாட்டு மக்களையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாகச் செயல்பட்டுவருகிறது.  இது வளைகுடா பகுதியில் உள்ள பெரும் தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை முன்னெடுத்துவருகிறது.  இவ்விபரங்களை, தமிழ்மன்றத்தின் செயலாளர்  உதயபாஸ்கர் நாச்சிமுத்து தெரிவித்துள்ளார்.