tamilnadu

தோழர் எஸ்.பஞ்சரத்னம் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல்

சென்னை,செப்.22- தோழர் எஸ்.பஞ்சரத்னம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினரும், சிஐடியுவின் தலைவர்களில் ஒருவருமான தோழர் எஸ்.பி.ஆர் என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் எஸ்.பஞ்சரத்னம் உடல்நலக் குறைவால் செப்டம்பர் 22 அன்று உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் எஸ்.பஞ்சரத்னம் மின் வாரியத்தில் எழுத்தர் பிரிவு ஊழியராக பணியாற்றி இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தன்னை சிஐடியு ஸ்தாபனத்தோடு இணைத்துக் கொண்டு செயல்பட்டவர்.

மின் ஊழியர்களின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதில் முன்னணி பாத்திரம் வகித்தவர். மின்வாரியத்தில் பணி யாற்றிய பல்லாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டுமென பல்வேறு போராட்டங்களை நடத்திய அதே நேரத்தில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று 18 ஆயிரம் ஒப்பந்த தொழி லாளர்கள் பணி நிரந்தரம் பெற முக்கிய பங்காற்றியவர். எந்தவித உரிமையும் இல்லாமல் பணியாற்றிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை சம்பளம் போன்ற இதர சலுகைகள் பெற்றுத் தர அரும்பாடுபட்டவர். தோழர் எஸ்.பஞ்சரத்னம் மின்வாரியத்தில் பணி யாற்றிக் கொண்டே சங்கப் பணிகளை செய்து கொண்டிருந்த போது அவரது பணி முழுமையாக சங்கத்திற்கு தேவை என கேட்டுக் கொண்ட அடிப்படையில் மின்வாரியப் பணி யிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முழுநேரமாக சங்கப்பணி ஆற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக 10 ஆண்டுகாலம் பணியாற்றினார். சிஐடியு வின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர், இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர், சிஐடியு தமிழ் மாநில தலைவர்களில் ஒருவர், மின் வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பின் துணைத் தலைவர் என பல பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர். தோழர் எஸ்.பஞ்சரத்னம் அவர்களது மறைவுக்கு செவ்வஞ்சலி செலுத்துவதுடன் அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.

;