தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட எந்தக் கல்வி நிறுவனங்களிலும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. சஹாக்கள் என்ற பெயரில் நடைபெறும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கூறினார்.
மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநில மாநாட்டின் இரண்டாம் நாளான புதனன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கூறியதாவது:-
தமிழகத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். வேலை வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தென் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும்.
புறம்போக்கு நிலங்கள், நீண்டகாலமாக பயன்பாடற்ற நீர்நிலைகளில் குடியிருக்கும் மக்களை வெளியேற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு அலுவலர்கள் குடியிருப்புகள், ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் பயன்பாடற்ற நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளன. ஆனால் குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் கூறுகிறது. பயன்பாடற்ற நீர்நிலைகளை வகை மாற்றம் செய்து 30 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் வெளி நாடுகளில் இருந்து நிதி மூலதனம் பெறப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைபெற்றுள்ளது. தற்போதும் தமிழக முதல்வர் துபாய்க்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் நிலையை தமிழக அரசு விளக்க வேண்டும்.
கொரோனாகாலத்தைத் தொடர்ந்து சிறு-குறு தொழில்கள் முடங்கியுள்ளது. ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். சிறு-குறு தொழில்களை மீட்டு, பாதுகாக்க வேண்டும்.
வேளாண்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்றார்.
கோவில் திருவிழாக்களில் பங்கேற்போம் என மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளாரே? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பெ.சண்முகம், கம்யூனிஸ்ட்டுகள் விஞ்ஞானப்பூர்வமாக பிரச்சனைகளை அணுகுபவர்கள்" கோவிலுக்குள் எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடப்போவதில்லை. கோவில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் கோவிலுக்கு வெளியே கருத்துப்பிரச்சாரம், மதச்சார்பின்மையை வலியுறுத்தும் நிகழ்வுகளை நடத்துவோம் என்றார்.
நதி நீர் தாவாக்கள் குறித்து ஏதேனும் பேசினீர்களா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் அது குறித்தும் விவாதிக்கிறோம் என்றார். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை... என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சண்முகம், மதுரையில் மாநாடு நடத்தி அது பற்றி விவாதிக்கலாமலா? முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும். தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றார்.
கல்வி நிறுவனங்களில் சில அமைப்புகள் சஹாக்களை நடத்துகின்றனவே என கேள்வியெழுப்பிய செய்தியாளர் ஒருவருக்கு பதிலளித்த பெ.சண்முகம், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட எந்தக் கல்வி நிறுவனங்களிலும் மதம் சார்ந்த சஹாக்களை நடத்தக்கூடாது. இதன் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றார்.
இலங்கைக்கு இந்தியா உதவிகள் செய்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த சண்முகம், தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வது தவறில்லை என்றார்.
பேட்டியின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் உடனிருந்தார்.