tamilnadu

img

சிறுபான்மையினர் நலன்களை பாதுகாத்திட சிபிஎம் மாநில மாநாடு வலியுறுத்தல்

நாட்டில் சிறுபான்மையினர் நலன்களை பாதுகாத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது  மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது.
இந்திய அளவிலும், தமிழகத்திலும் சிறுபான்மையினர் நிலை குறித்து நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அறிக்கைகள் சிறுபான்மை முஸ்லீம்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமை குறித்த உண்மைகளை வெளிக்கொணர்ந்ததோடு, அவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளில் ஏற்றம் கண்டிட பல பரிந்துரைகளை அரசுக்கு அளித்தன. இந்த பரிந்துரைகள் வெளியான காலத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பரிந்துரைகளை ஏற்று, நிறைவேற்றுமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டது. ஆனால் பரிந்துரைகள் வழங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒன்றிய அரசுகள் அவற்றை ஏற்று அமலாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எனவே, நீதிபதி சச்சார் குழு பரிந்துரை மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகள் அடிப்படையில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குமாறும், தலித் கிறித்துவர்களை பட்டியல் சாதியினராக அங்கீகரித்து இட ஒதுக்கீடு வழங்குமாறும் ஒன்றிய அரசை இம்மாநாடு கோருகிறது. அதே சமயம் தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மத்தியில் சங்பரிவார நிகழ்ச்சி நிரலை அமலாக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்வதால் சிறுபான்மை முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் கடும் அச்சத்தில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாட்டுக்கறி, லவ் ஜிகாத், ஹிஜாப், மதமாற்றம் என பிரச்சனைகளை திட்டமிட்டு எழுப்பி, சிறுபான்மை மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அப்பாவி சிறுபான்மை மக்கள் கொலை செய்யப்படுவதோடு, அவர்களது வழிபாட்டுத் தலங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் மக்களுக்கான தனி உரிமைகளைப் பறித்த சட்டங்கள், மதமாற்றச் சட்டங்கள், பசு பாதுகாப்பு சட்டம் போன்றவைகள் மூலம் பாஜகவின் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் வெறுப் பரசியலையும், பிளவு அரசியலையும் தங்கள் அரசியல் நோக்கத்துக்காக ஏற்படுத்துவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய வகுப்புவாத தன்மை கொண்ட அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக இயக்கங்களும், மக்களும் வலுவாக குரல் எழுப்ப வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.
சமீப காலமாக அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மதச்சார்பற்ற முறையிலும், பாரபட்சமற்ற முறையிலும் நீதியை நிலைநாட்ட கடமைப்பட்ட நீதிமன்றங்களும் மத ரீதியான அரசின் நோக்கங்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பது கவலையை ஏற்படுத்துகிறது. அயோத்தி பாப்ரி மசூதி நிலம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற பிரச்சனைகளில் விசாரணையை நடத்தாமல் கால வரம்பின்றி தள்ளி வைப்பது, ஹிஜாப் பிரச்சனையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதில் உடனடி தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பது போன்றவை நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாகவுள்ளது. எனவே, நீதிபதிகள் அரசியல் சட்டப்படி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமையினை மதச்சார்பற்ற கோட்பாடுகளின் அடிப்படையிலும், பாரபட்சமின்றி நியாயமான முறைகளில் தீர்ப்பளிக்க வேண்டுமென்று இம்மாநாடு கோருகிறது.
தமிழக மக்களின் மத சகிப்புத் தன்மை மற்றும் மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு சாதகமாக ஒரு சில காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் செயல்படுவது சரியல்ல. எனவே தமிழக அரசு இத்தகைய அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு தமிழகத்தின் மக்கள் ஒற்றுமை பாரம்பரியத்தைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வகுப்புவாத செயல்கள் தலைகாட்டும் போது, உடனடியாக பாரபட்சமற்ற, நேர்மையான நடவடிக்கைகள் மூலம் அத்தகைய போக்குகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறது.
தமிழகத்தில் தண்டனை காலம் முடிந்தும், வழக்கு விசாரணை துவங்காமலும், பல்லாண்டுகளாக விசாரணை முடியாமலும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில், மதப்பாகுபாடு கடைப்பிடிக்கப்பட கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
இந்த தீர்மானத்தை வி.மாரிமுத்து முன் மொழிய  கிரைசாமேரி வழிமொழிந்தார்.