tamilnadu

img

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சிபிஎம் மாநாடு வேண்டுகோள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 23வது மாநில மாநாடு, தமிழகத்தின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றிற்கான, அடிப்படையாக உள்ள, தொழில் வளர்ச்சி குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருகுவதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பங்கு உண்டு. குறிப்பாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம், திருச்சி பெல், சேலம் ஸ்டீல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கான அழுத்தம் அளித்ததிலும், தொடர்ந்து தனியார்மயம் ஆகாமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்த மார்க்சிஸ்ட்டுகள் அத்தகைய அரும்பணியை திறம்பட செய்துள்ளனர்.
அதேபோல் மக்கள் போராட்டங்களின் மூலமும் மேற்படி நிறுவனங்கள் அங்குள்ள வேலைவாய்ப்பு, அதன் மூலம் நிலைநாட்டப்பட்ட சமூக நீதி ஆகியவற்றை காக்கும் செயலை, மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ளது. தற்போது நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என பேசப் பட்டாலும், அவ்வாறு நிலைமை இல்லை. வேலைவாய்ப்பை வெட்டி சுருக்குவதாக, ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களின் கொள்கை காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதன் மூலம், இடஒதுக்கீடு மூலம் கிடைத்து வந்த சமூகநீதியை ஒழிப்பதாக உள்ளது. அதேநேரம், சலுகைகளை அனுபவித்து, கொள்ளை லாபம் ஈட்டியபின் வெளியேற முயற்சிப்பதையும், வேலைவாய்ப்பை பறிப்பதையும், கட்டுப் படுத்தும் அதிகாரத்துடன் மாநில அரசு தனது தொழில் கொள்கையை உருவாக்க வேண்டும்.
சிப்காட் உருவாக்கம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களையும் அதன் வேலைவாய்ப்பையும் பாதுகாக்கும் வகையிலும், தரிசு நிலங்களை மேம்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட வேண்டும். நிலம் கையகப் படுத்துவதில் மக்களிடம் உரிய கருத்து கேட்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப் பட வேண்டும். ஏற்கனவே அமைக்க பட்ட சிப்காட்கள் முழுமையாக செயல்படுத்தப்படுவது. குறிப்பாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொழில்வளம் இல்லை. இங்குள்ள படித்த இளம் தலைமுறைக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், மாநில அரசு மூலம் வகுக்கப்பட வேண்டும். குறிப்பாக வேளாண் விளை பொருள்களை பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி துறைமுகம் மேலும் தென் மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும், சூர்ய ஒளி மூலமான மின்சார உற்பத்திக்கான பங்களிப்பு உயர துவங்கியதைப் போல், தொழிற்சாலை உருவாக்க பகுதிகளில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையிலான குளங்கள் உருவாக்கப் படும் திட்டம், சிப்காட் உருவாக்கத்தில் சேர்க்கப் பட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் நீடித்த வளர்ச்சிக்கு உதவும், என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வலியுறுத்துகிறது. சூர்ய ஒளி மின் உற்பத்திக்கான அரசு முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும்.
கடலோர மாவட்டங்களில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. சுற்று சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை பெற்று துவக்கப்படுவது, ஒருங்கிணைந்த முறையில் இருப்பது உத்தரவாதப் படுத்தப் பட வேண்டும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கார், கனரக வாகன உற்பத்தி மற்றும் அதன் உதிரி பாக உற்பத்தி பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. மற்றொருபுறம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி, ஆகியவையும் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. சமூகநீதி பாதுகாக்கப்பட, தனியார் துறையில் இட ஒதுக்கீடு தேவை. தமிழகத்தின் இளைஞர்களுக்கு, கூடுதல் வேலைவாய்ப்பை தருவது போன்றவற்றை உத்தரவாத படுத்தும் வகையில் தொழில் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும். கடந்த கால அதிமுக ஆட்சி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உலக முதலீட்டாளர் மாநாடு ஆகியவை எந்த அளவு அமலானது, எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, உள்ளிட்ட விவரங்களை வெள்ளை அறிக்கையாக மாநில அரசு வெளியிட வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் கனிமவளங்களை ( மணல், கிரானைட், தாது மணல்) பயன்படுத்தி, அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் தனியார் முதலீடு அதிகமாக உள்ளது. இது பெரும் இயற்கை வளக் கொள்ளைக்கு வழிவகை செய்வதாக உள்ளது. இதில் மாற்றம் காணும் வகையில் அரசு முதலீடுகள் அதிகப் படுத்துவது அவசியம்.
மொத்தத்தில் தொழில் வளர்ச்சி என்பது லாபத்திற்கான மூலதன வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், வேலைவாய்ப்பு, மற்றும் சமூக மேம்பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு தமிழக மற்றும் ஒன்றிய அரசுகளை வலியுறுத்துகிறது.
இந்த தீர்மானத்தை எஸ்.கண்ணன் முன்மொழிய நெல்லை ஸ்ரீராம் வழி மொழிந்தார்.