சென்னை, மே 4- எதேச்சதிகாரத்தின் குறியிடாகத்தான் நீதிமன்றங்கள் செயல்படுவதாகவும் அவசரமாக விசாரிக்கவேண்டிய வழக்கை உதாசீனப்படுத்துவதாகவும் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறினார். கல்வியாளர் ஜவகர் நேசன் எழுதிய ஒன்றிய அரசின் ‘இந்திய உயர்கல்வித் தகுதி கட்டமைப்பு எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாயன்று (மே 3) நடைபெற்றது. அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி, அண்ணாமலை பல்கலைக்கழக மதச்சார்பற்ற பொறியாளர் அமைப்பு, பாரதி புத்தகாலயம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் அரிபரந்தாமன் பேசியதாவது: 1990ஆம் ஆண்டு புதிய தாராளமயக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கியதில் இருந்தே படிப்படியாக தகுதித் தேர்வுகளுக்கான நகர்வுகள் துவங்கி விட்டன. அவசரநிலை ஆட்சிக்காலத்தின் போது கல்வி, மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல பிரிவுகள் மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. ஆனால் இதுவரை அவை மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படவில்லை. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. ஆனால் மாநில அரசு சட்டம் இயற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்குக் கூட அனுப்ப மறுக்கிறார். மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
பட்டப்படிப்பில் மாற்றம் ஏன்?
புதிய கல்விக் கொள்கையில் 3 ஆண்டுகளுக்கான பட்டப் படிப்பு 4 ஆண்டுகளாக மாற்றப்படுவதும், முதல் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மறு தேர்வு எழுதி இரண்டாம் ஆண்டிற்கு செல்வதற்கான வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. கல்லூரிகளை உருவாக்கு வது மாநில அரசு. அந்த கல்லூரிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாநில அரசின் சட்டம் செல்லுமா அல்லது யுஜிசி சட்டம் செல்லுமா என்றால், நீதிமன்றம் யுஜிசி சட்டம்தான் செல்லும் எனக் கூறுகிறது. பல்கலைக்கழகங்களை மாநில அரசு உருவாக்குகிறது. அதன் பாடத்திட்டத்தை அந்தந்த மாநிலத்தின் தன்மைக் கேற்ப மாநில அரசுகள்தான் உருவாக்க வேண்டும். ஆனால் அதன் அதிகார எல்லைக்குள் ஒன்றிய அரசு நுழைய முயற்சிக்கிறது. துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் மாநில அரசுக்கும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கும் தெரி யாமலே கூட்டுகிறார். ஆனால் தமிழக அரசு, துணை வேந்தர்களை அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தவில்லை. மாநில அரசின் உரிமை களையும் படிப்படியாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டி ருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்த்து நீதிமன்றம் சென்றால் நியாயம் கிடைக்குமா என்றால் கிடைக்காது. ஏனென்றால் கர்நாடக உயர் நீதிமன்றம் இதுவரை ‘ஹிஜாப் வழக்கை விசாரணைக்கு கூட எற்றுக்கொள்ள வில்லை. ஏதேச்சதிகாரத்தின் குறியீடாகத்தான் நீதி மன்றங்கள் செயல்படுகின்றன. எனவே அனைத்து பகுதி மக்களையும் ஓரணியில் திரட்டிப் போராடுவது தான் இதற்கு தீர்வு என்றார்.
ஆதவன் தீட்சண்யா
தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், உலக அரசியல் வரலாற்றில் இத்தாலியில் முசோலினி, ஜெர்மனியில் `ஹிட்லரும் சர்வாதிகாரத்தை நோக்கி தனது சமூகத்தை நகர்த்தினார்கள். ஜனநாயக நீதியில் தேர்தெடுக்கப்பட்ட அரசு, நாட்டில் உள்ள சமூக நிறுவனங்கள் அனைத்தை யும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பது தான் சர்வாதிகாரம். அரசியல் சாசனத்தின் நிறுவனங்களான நாடாளு மன்றம், சட்டமன்றம், நீதித்துறை, ஊடகங்கள் என அனைத்தும் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அநீதி குறித்து எந்த ஊடகங்களும் பேச முன்வருவதில்லை. தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக அமல்படுத்தாமல் மறைமுக மாக அதிகாரிகள் மூலமாக பாஜக அரசு அமல்படுத்திக் கொண்டிருக்கிறது என்றார்.
சமூகநீதி பார்வையில்லை
உயர்கல்வியில் மாணவர்களை நுழைய விடாமல் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் புதிய கல்விக் கொள்கை. அதில் சமூக நீதி பார்வையில்லை. மேலும் உயர்கல்வியில் இடைக்கற்றலை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட தலைப்புகளில் மட்டுமே பிஎச்டி மேற்கொள்ள வேண்டும் என கூறுகிறது. எனவே ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கை யின் கருத்தியலை நிராகரிப்போம் என்றார்.
வி.சுரேஷ்
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செய லாளர் வி.சுரேஷ் பேசுகையில், புதிய கல்விக் கொள்கை யை பார்ப்பதற்கு முன்பு அதன் வரலாற்று, பொருளாதார, அரசியல் பின்னணி குறித்து பார்க்க வேண்டும். ஆசிரியர் சங்கங்கள் தரமான கல்வி குறித்து பேச வேண்டும், 2008ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற கூட்டத்தில் கல்வியை விலை பொருளாக மாற்றக் கூடாது என்றார்கள். 20018ஆம் ஆண்டு நைரோபியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கல்வி என்பது சேவை என நிர்மலா சீதாராமன் எழுதி கொடுத்து விட்டார். இந்தியாவில் சமூக நீதியின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டுவிட்டது.
உயர் தொழில்நுட்பங்களுடன் வரும் அந்நிய பல்கலைக்கழங்களோடு இந்திய பல்கலைக்கழகங்கள் போட்டியிட முடியுமா? கல்வியை சேவை என்று கூறிவிட்டால் தனியார்மயம் மட்டுமல்ல, கல்வி முறையின் அடித்தளமே மாறி விடும். மாநிலத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு அந்தந்த மாநில பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது இவை நீக்கப்பட்டு வருகின்றன. புதிய கல்விக் கொள்கை ஜனநாயகத்திற்கு, சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்பதை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமுமுக பொதுச்செயலாளர் ஜெ.ஹாஜாகனி பேசுகையில், புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது, மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டை விரலை கேட்டது போல், ரோகித் வெமுலா போன்றவர்களின் தலையைக் கேட்கிறது. கல்விதான் ஜனநாயகத்தை காப்பாற்றும். சந்தைக்கு தேவையான உழைப்பாளிகளை உருவாக்குவதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். ஒரு குலம் மட்டுமே ஆள்வதற்கு தகுதியானது என்ற மனநிலையை இந்தபுதிய கல்வி கொள்கை மூலமாக உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெகுஜன அமைப்புகள், குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் உள்பட பலர் பேசினர். முன்னதாக நூலின் முதற்பிரதியை நீதிபதி அரிபரந்தாமன் வெளியிட கல்வியாளர்கள் முனைவர் எம்.கிருட்டிணராஜ், எஸ்.உமாமகேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.