tamilnadu

திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் பதவி தேர்தல்: தலைமை அறிவிப்புக்கு மாறாக கை கோர்த்த கவுன்சிலர்கள்

அவிநாசி, மார்ச் 4  - திருமுருகன்பூண்டி நகர்மன்ற தலைவர் பதவி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  ஒதுக்கீடு செய்த நிலையில், தலை மையின் அறிவிப்புக்கு மாறாக, திமுக கவுன்சிலர் தலைவர் பதவிக்கு  போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் வெற்றி பெற்றார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதில் திருமுருகன் பூண்டி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்களாக 27 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுக 9, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கட்சி 3 பேர் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றனர். அதிமுக 10 இடங்களைப் பெற்றது. இந்நிலையில் திருமுரு கன்பூண்டி நகரமன்ற தலைவர் பதவி  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.  

அதன்படி நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வெள்ளி யன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 10ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பி.சுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு  போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதே சமயம்  தலைமையின் அறி விப்புக்கு மாறாக, உடன்பாட்டை மீறி திராவிட முன்னேற்றக் கழ கத்தைச் சேர்ந்த 26ஆவது வார்டு உறுப்பினர் குமார் தலைவர் பத விக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இருவரது பெயர்கள் எழுதிய வாக்குச் சீட்டு நகர்மன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டு வாக்குப் பதிவு நடை பெற்றது. வாக்குப் பதிவு முடிந்து  வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.சுப்பிரமணியத்து 12 வாக்குகள் கிடைத்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த குமார் 15 வாக்குகள் பெற்றார்.  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் என்ற முறையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு மாறாக, திமுக  மன்ற உறுப்பினருக்கு வாக்க ளித்தது இதன்மூலம் உறுதியானது. 

துணைத் தலைவர் தேர்தல் புறக்கணிப்பு

வெள்ளிக்கிழமை பூண்டி நகராட்சி அலுவலகத்தில் பிற்பகல் நகராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாநிலத் தலைமை அறிவித்த உடன்பாட்டின்படி திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மன்ற உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிக்காத நிலையில், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை புறக்கணிப்பது என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்தது. மேலும் வேறு யாரும் போட்டியிடாத நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரி துணைத் தலைவருக்கு வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.