சென்னை, ஜன. 11- கூட்டுறவில் உண்மை ஜனநாயகம் தழைத்தோங்க தேர்தல் சீர்திருத்தம் செய்ய கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழக முதல்வருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சம்மேளனத் தலைவர் தி.தமிழரசு, பொதுச்செயலாளர் இ.சர்வேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு சங்க நிர்வாகி களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளி லிருந்து 3 ஆண்டுகளாக குறைத்து ஜனநாயக விரோதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிர்வாகங்கள் மீது சம்மட்டி அடி அடித்துள்ள முதல்வரின் அறிவிப்பை கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வரவேற்கின்றது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் எண்ணிலடங்கா மோசடிகள், அராஜகங்கள், உண்மையான உறுப்பினர்களை மனு செய்யவிடாமை ஆகியவற்றை அரங்கேற்றியது அப்போதைய அதிமுக அரசு. அந்த அரசின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்பட்ட துறை அதிகாரிகளும், தேர்தல் ஆணையமும் நடைமுறைபடுத்திய ஜனநயாக படுகொலையை அனைவரும் கண்கூடாகக் கண்டனர்.
கூட்டுறவு தேர்தலில் மீண்டும் இதுபோன்ற ஜனநாயகப் படுகொலைகள் நடைபெற வாய்ப்பில்லா வண்ணம் கூட்டுறவு சட்டத்தில் கூடுதலாக கீழ்கண்டவாறு திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என தமிழக முதல்வரை கோருகிறோம். அனைத்து உறுப்பினர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும், கூட்டுறவு நிறுவனம் எந்த காரணங்களுக்காக துவக்கப்பட்டதோ அந்த சேவைகளைப் பெற்ற உறுப்பினர்களையே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். உறுப்பினராக மட்டுமே இருந்துகொண்டு அந்த நிறுவனத்தின் சேவையை பெறாதவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அமலாக்கம் செய்வதன் மூலம் நிர்வாகத்தில் பங்குபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பெயரளவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தடுக்கப்படுவர். மரணமடைந்துவிட்ட உறுப்பினர்களின் பெயர்கள் உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களின் ஊழியர் பணி நியமனங்கள் அனைத்தும் மற்ற மாநில பொதுத்துறை நிறுவனங்களைப் போன்று தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும்.
மேற்கண்ட சட்ட திருத்தம் கூட்டுறவு தத்துவத்தின் உண்மை நோக்கத்தினை பாதுகாக்க உதவிடும். ஒன்றிய அரசு 97ஆவது அரசியலமைப்பு சட்ட விதி திருத்தம் மூலம் மாநில உரிமைகள் பறிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் மாநில உரிமைகளை காக்கும் சட்டத் திருத்தமாக இது அமையும் என்றால் மிகையில்லை. கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கடந்து உண்மை உறுப்பினர்களின் ஆட்சியை நிறுவிட முதல்வர் ஸ்டாலின் உதவுவார் என்று சம்மேளனம் உறுதியாக நம்புகிறது. இதுவே மாநில பொருளாதாரத்தை உயர்த்திடும் வழியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இதன்மூலம் “ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக; மற்றவர்கள் ஒருவருக்காக” என்ற கூட்டுறவு தத்துவம் நிலை நாட்டப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.