tamilnadu

img

இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய மகளிர் பிரிவின் பெண் தலைவர்கள், தொழில்முனைவோர் மாநில மாநாடு

இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய மகளிர் பிரிவின் பெண் தலைவர்கள், தொழில்முனைவோர் மாநில மாநாடு

கரூர், ஆக.1-  இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மகளிர் பிரிவின் சார்பில், கரூரில் மாநில அளவிலான பெண் தலைமைத்துவ மற்றும் தொழில்முனைவோர் மாநாடு வியாழனன்று நடைபெற்றது.  பெண் தலைவர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் முன் உள்ள உலகளாவிய மற்றும் உள் நாட்டு வாய்ப்புகள், சந்திக்கும் சவால்கள், சவால்களைச் சாதனைகளாக்கிய பெண் தொழில் முனைவோர், சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள், தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றும் தந்திரங்கள் என பல்வேறு தலைப்புகளில் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன.   இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மகளிர் பிரிவின் தமிழகத் தலைவர் சவிதா ஜெகதீசன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தலைவர் சுபாஷினி அசோக், மாநில மாநாட்டு கருப்பொருள் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். கரூர் மாவட்ட நிறுவனத் தலைவர் சந்தியா சுதாகர், கரூர் இணைத் தலைவர் கார்த்திகா பிரபு, கரூர் மாவட்ட தலைமைப் பண்பு பிரிவு தலைவர் தமிழ்செல்வி, இணைத்தலைவர் மஞ்சுளா, இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூர் செயலாளர் பவித்திரன் கலந்து கொண்டனர்.   இந்திய தொழில் கூட்டமைப்பின் ஈரோடு மண்டலத் தலைவர் அரவிந்த், கரூர் மாவட்ட நிறுவனத் தலைவர் சிவகண்ணன், நடப்பு தலைவர் பிரபு, சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மாநாட்டின் தொடக்கத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டனர். மாநாட்டில் ‘அவள் தூரிகைக்கு இல்லை எல்லை’ என்ற தலைப்பில் ஷீகா பெடல்ஸ் காந்திமதி, ‘புயலை வெல்லும் தென்றல்’ என்ற தலைப்பில் அசுவதி ஹாட் சிப்ஸ் இளவரசி, ‘வரலாற்றை மாற்றிய பெண்கள்’ என்ற தலைப்பில் பஷூத் ஜீவிதா, அமோதி ஜெயசூரியா, டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் அமிதா ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றினர். தலைமைப் பண்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சியை சிசென்ஸ் கண்ணன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய மகளிர் பிரிவின் கரூர் மாவட்டத் தலைவர் சுபாஷினி அசோக் தலைமையில் கரூர் மாவட்ட அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.