tamilnadu

img

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தென்னை நார் ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு

திண்டுக்கல், டிச.9- பாஜக ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தென்னை நார் ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். மாநில பொ துச்செயலாளர் அ.விஜயமுருகன், மாநில நிர்வாகிகள் எம்.முத்துராமன், நாகேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி, மாவட்டப் பொருளாளர் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் “கேரளாவைப் போல பச்சைத் தேங்காய் கிலோ 50-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு கிலோவுக்கு ரூ.140 வழங்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். ரேசன் கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெயை மானிய விலையில் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.  தென்னை நார் கழிவுகளை கட்டியாக்கி வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்து வந்ததன் மூலம் ஒரு மட்டைக்கு ரூ.2லிருந்து ரூ.3 வரை கிடைத்து வந்த நிலையில் ஒன்றிய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால் நார்த்தொழில் ஏற்றுமதி இல்லாமல் போயுள்ளது. ஏற்றுமதி செய்வதற்கான கண்டெய்னர்கள் கிடைப்பதில்லை; விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே தென்னை நார் தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.