பிரஸ்ஸல்ஸ், ஜன.30- கொரோனா தொற்றைக் காரணம் காட்டி தொழில் நிறுவனங் களோடு போடும் ஒப்பந்தங்களில் தொழிலாளர்கள் நலனைக் காற்றில் பறக்க விட வேண்டாம் என்று தொழிற்சங்கங்களை பெல்ஜியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சில தொழில் நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கிறித்தவ தொழிற்சங்கம், லிபரல் தொழிற்சங்கம் ஆகிய இரண்டு தொழிற்சங்கங்களும் அந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திருக்கின் றன. இடதுசாரி தொழிற்சங்கம் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டது. இந்த ஒப்பந்தங்கள் தொழிலாளர்களை மேலும் சுரண்டவே வழிசெய்கிறது என்பதே கையெழுத்திட மறுத்ததற்குக் காரணமாகும். கோவிட் வேலையின்மைத் திட்டத்தின்கீழ் ஏற்கனவே முதலாளிகள் பெரும் பலனை அனுபவித்திருக்கிறார்கள். தற்போது தற்காலிக ஊழியர்கள்(மிகவும் குறைவான ஊதியத்தில்), ஓய்வூதியர்கள், வேலை செய்யத் தயாராக இருக்கும் மாணவர்கள் மற்றும் அகதிகளாக வர விரும்புவர்கள் உள்ளிட்டவர்களை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தற்போது போடப்பட்டு வரும் ஒப்பந்தங்கள் இதற்கு வழி வகுக்கின்றன. 1980களில் இருந்து தொழிலாளர்களுககு இருந்த பல்வேறு உரிமைகளை இந்த ஒப்பந்தங்கள் தகர்க்கின்றன. குறிப்பிட்ட பணிநேரம், வெளிப்படையான ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை இல்லாமல் போகும் ஆபத்து உருவாகியுள்ளது. ஐரோப்பா முழுவதும் இத்தகைய போக்கு வளர்கிறது. ஸ்பெயினில் உள்ள சமூக ஜனநாயக ஆட்சியாளர்கள் கொண்டு வந்த புதிய தொழிலாளர் சீர்திருத்தத்தை எதிர்த்து ஸ்பெயின் கம்யூனிஸ்ட்-தொழிலாளர் கட்சி அறிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் சில நாடுகளில் முதலாளிகள் கொரோனாக் காரணம் காட்டி தொழிலாளர்கள் நலன்களைப் பறிக்க முயல்கிறார்கள். இந்த ஒப்பந்தங்கள் நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. இதுபோன்ற கொள்கைகளை எதிர்க்கும் வகையில் தொழிற்சங்கங்களை பலப்படுத்துவோம். முதலாளித்துவத்திற்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை பலப்படுத்துவோம். இவ்வாறு பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.