1935ஆம் ஆண்டு மே மாதம் நாமக்கல் மாவட்டம் பொன்னேரிப்பட்டி கிராமத்தில் பெருமாயி–குப்பண்ணன் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தோழர் கு.சின்னப்பபாரதி. கு.சி.பா என்று தோழர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர் மிக இள வயதிலேயே கவிதைகள் எழுதத்துவங்கிவிட்டார்.அவருடைய முதல் கவிதைத்தொகுப்பு 1966 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. அந்நூலுக்கு அன்றைய தீக்கதிர் ஆசிரியர் தோழர் கே.முத்தையா எழுதிய மதிப்புரையில் குறிப்பிடுகிறார்: “தோழர் சின்னப்ப பாரதியின் “தெய்வமாய் நின்றான்” என்ற கவிதை நவீனத்தினை ஏற்கனவே ‘தீக்கதிரில்’ விமர்சனம் செய்திருக்கிறோம். இப்பொழுது தோழர் பாரதி 1954 லிருந்து1962 முடிய இயற்றிய பல்வேறு பாடல்கள் அடங்கிய இந்த நூலினை சத்தியசாயி பதிப்பகத்தார் வெளியிட்டு தமிழ் இலக்கியத்திற்கு மகத்தான ஓர் சேவை செய்ததற்கு முதற்கண் நமது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் பாரதி பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கவிஞர் என்பதனை எப்பொருள் குறித்தும் அவர் புரட்சிப் பார்வையுடன் எழுதும் உணர்வு பெற்றவர் என்பதனை இந்தக் கவிதைத் தொகுப்பில் தெளிவாகக் காணலாம்.” இதில் இரு செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. 19 வயதிலிருந்து அவர் கவிதை எழுதிக்கொண்டிருந்தார் என்பதும் அப்போதே புரட்சிகரமான சிந்தனைகளோடு இருந்தார் என்பதும் மட்டுமின்றி 1966க்கு முன்பே அவரது கவிதைக்காவியமான “தெய்வமாகி நின்றான்” வெளியாகியுள்ளதையும் அறிகிறோம்.
விடுதலை உணர்வெழுச்சி
அத்தொகுப்பின் கவிதைகள் எத்தன்மையானவையாக இருந்தன என்பதற்குச் சில சோற்றுப் பதங்கள்: 1960களில் ஆப்பிரிக்க விடுதலை வீரர் தோழர் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்யக்கோரிய இயக்கங்கள் ஒரு சர்வதேசத்தன்மை பெற்றன.அச்சமயத்தில் ஏப்ரல் 1961இல் கு.சி.பா எழுதிய ’ஆப்பிரிக்கா’ என்னும் கவிதை இப்படிச் செல்கிறது:
“ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் அடித்திடும் காற்றெல்லாம் காப்பிரி மக்களின் கருகிய மூச்செனும் காரணம் அறியீரோ-சுரண்டும் காலனி வெறியோரே! ஆப்பிரிக்காவின் அடிமை விலங்கிங் கறுபட்டெழுமோசை மேப்பரப்பெங்கும் மின்னலிடியாய் முழங்குதல் கேலீரோ?-சுதந்திர மோகம் காணீரோ? ஆண்டது போதும் அடித்தது போதும் ஆர்த்தே எழுங்கரங்கள் மூண்டு குரல்வளி நெரீத்திடும் முன்னர் மூட்டை கட்டிடுவீர்!- இன்றேல் முதலை இழந்திடுவீர்!
பெண் விடுதலை குறித்த அவரது பார்வை என்னவாக இருந்தது என்பதைக் கீழ்க்கண்ட வரிகள் காட்டுகின்றன: “இருட்டறையில் பெண்ணுலகம் இருந்த காலம் என்றைக்கோ போயாச்சு உலகில் பெண்கள் நருக்காக உலகாளும் காட்சி இன்று நாளடைவில் எங்கணுமே வெளிச்சம் ஆச்சு பெருக்கெடுக்கும் இச்சைக்கும் சுவையாய்ச் சோறு பெய்து நிதம் ஊட்டிடவும் பெண்கள் என்றால் கருமாதி ஆகட்டும் அந்தக் கொள்கை கையாலே கொள்ளி வைத்துப் பார்ப்போம் ஒன்றாய்”
எழுத்தாளர்களின் கடமை என்ன என்பதாக அவர் அன்று -1966இல்- புரிந்துகொண்டிருந்தார் என்பதற்கு அவருடைய என்னுரையில் காணப்படும் இவ்வரிகளே சான்று: “ இன்றைக்கு நாம் வாழும் சகாப்தம் காலனி ஆதிக்கம் நொறுங்கி ஏகதிபத்தியங்கள் சரிந்துகொண்டிருக்கிற சகாப்தம்.சுதந்திரக்குடியரசுகளும்,மக்கள் ஜனநாயகமும், சோசலிச அரசும் மலர்ந்து கொண்டிருக்கிற சகாபதம். உலகெங்கிலுமுள்ள மக்கள் அடிமைத் தளையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காகவும் பெற்ற சுதந்தி ரத்தைப் பூரணப்ப்படுத்திக்கொள்வதற்காகவும் தங்களின் வளமான வாழ்விற்கு நாட்டின் அரசியல் பொருளாதார மேம்பாட்டின் ஸ்திரத்தனமையை வலுப்படுத்திக்கொள்வ தற்காகவும் எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து சம்பத்து களும் பேணிக் காப்பாற்றப்படுவதற்கு உலகில் யுத்தமின்றி சமாதானம நிலவுவதற்காகவும் போராடிக்கொண்டிருக்கிற காலமுமாகும். இன்று நமது நாடும் மக்களும் சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதிலும், ஜனநாயகக் கடமைகளைச் சரிவர நிறை வேற்றி வைப்பதிலும் போராட வேண்டியவர்களாக இருக்கி றார்கள். ஆகவே இன்றைய நமது எழுத்தாளர்களின் கடமை யும் ஜனநாயக, யதார்த்த, மனிதாபிமான இலக்கியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொணடதாகத்தான் இருக்க முடியும். சமூக வளர்ச்சி ரீதியான சோசலிச யதார்த்த இலக்கியத்திற்குச் செல்வது சரித்திரக்கடமை யாக இருந்தபோதிலும் சமூகம் இன்றைக்கு விதித்திருக்கும் கடமைகளைத் தாண்டி அப்பாற் சென்றுவிட முடியாதுஅது சமூகம் நமக்கு விதித்திருக்கும் பொறுப்புமாகும்.அந்த விதத்தில் இன்றைய எழுத்தாளனின் கடமை நாட்டின் மறுமலர்ச்சிக்கும் புதிய சிந்தனைகளுக்கும், வேர்விட்டு நிற்கிற பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பின் சகல விதமான அடிமைத்தனங்களையும், களைந்தெறிந்து சமூக கடமைகளை மக்களுக்கு உணர்த்துவதற்கும் எல்லா வற்றிற்கும் மேலாக தன் நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்ப வன் தானே தான் என்கிற போதத்தை கைக்கொள்வதற்கும் ஆன வழிவகைகளைக் காட்டுவதும் ஆகும்”
1966இல் இவ்வரிகளை எழுதுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் கட்சித்திட்டமும் உருவாகியிருக்காத நாட்களில் இத்தனை தெளிவான ஓர் இலக்கிய அரசியல் கொள்கையை அவர் முன் வைத்திருக்கிறார். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன் பிறந்து காந்தியுகத்தில் வாழ்ந்து விடுதலை எழுச்சியை நேரில்கண்டு அனுபவித்து நேரு யுகத்தில் பயணித்த ஒரு தலைமுறையின் பிரதியாக கு.சி.பாவை நாம் கண்கிறோம்.”மக்களுக்கு உணர்த்து வது” என்கிற கடமையை அவர் எழுத்தாளருகு முன் வைக்கிறார். பிசிறற்ற தெளிவான குரலில் 66இல் பேசத் துவங்கிய அவர் 13-06-2022 இல் காலத்தில் கரைந்த நாள் வரை அதே தெளிவோடும் தீவிரத்தோடும் இருந்தார் என்பதை நாம் அறிவோம். 70களின் முற்பகுதியில் அவரது முதல் நாவல் ‘தாகம்’ வெளியானது. தஞ்சை மண்ணில் செங்கொடி இயக்கம் நிகழ்த்திக்காட்டிய அடிப்படை மாற்றங்களால் எழுச்சி கொண்ட அவரது படைப்பு மனம் மாரப்பன்,மாரக்காள் என்கிற மூத்த குடிமக்களை மையமாகக்கொண்டு கொங்கு மண்ணில் விவசாய இயக்கம் வளர்ந்த கதையைப் பின்புலமாகக் கொண்டு தாகம் நாவலைப் படைத்தார்.தாகம் நாவலைப்படித்து நாங்கள் இடதுசாஇ இயக்கத்துக்கு வந்தோம் என்று சொல்கிற எங்கள் தலைமுறையை அந்த நாவல் படைத்தளித்தது. பட்டியல் மன்னரான க.நா.சுப்பிரமணியன் எப்போதும் இடதுசாரி இலக்கியங்களைப் புறக்கணிப்பதில் முன்னணியில் நின்றவர். அவரது சிறந்த தமிழ் நாவல்களின் பட்டியல் களில் கூட ’தாகம்’ நாவல் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கது. 70களில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுற்று மார்க்சிஸ்ட் கட்சி உதயமாகி இருந்தது.ஆனால் இன்னும் தமுஎச என்கிற அமைப்பு உருவாகியிருக்கவில்லை. அந்தச் சூழலில் மார்க்சியப்பார்வைகொண்ட படைப்பாளிகள் எழுதுவதற்கான ஒரே இலக்கிய இதழாக ‘சி.பி.ஐ இன் தாமரை மட்டுமே இருந்தது. இது படைப்பாளிகளை அந்தப்பக்கம் தள்ள ஏதுவாக இருக்கிறது. நமக்கென்று ஒரு இலக்கிய இதழ் வேண்டும் என்கிற குரலைக் கட்சிக்குள் எழுப்பிப் பின் அவரே தன் சொந்தப்பணத்தை முதலீடு செய்து “செம்மலர்” இதழைத் துவக்கி அதன் முதல் ஆசிரியராகவும் இருந்து சில காலம் நடத்திப் பின் அவ்விதழை அப்படியே மார்க்சிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தார். இது போன்ற பல முன்னெடுப்புகளை இயக்கத்துக்காக வாழ்நாள் முழுதும் செய்துகொண்டே இருந்தார்.
முதல் நாவலைப்போலவே அவரது இரண்டாவது நாவலான “சங்கமு”ம் பரவலான அதிர்வலைகளை ஏற் படுத்தியது.கொல்லிமலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைப் போரட்டத்தை விரிவாகவும் நுட்ப மாகவும் பதிவு செய்த நாவல் அது. இந்த நாவல்டிசம்பர் 1985இல் வெளியானது. அந்நாவலின் முன்னுரையில் மார்க்சிய இலக்கிய முன்னோடியான தோழர் ஆர்.கே. கண்ணன் குறிப்பிடுவது: “இந்நாவலாசிரியர் மலைவாழ் மக்களிடையே வாழ்பவர். அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களிலே பங்கு கிள்பவர். அந்தப் போராட்டங் களுக்குத் தலைமை வகிப்பவர்களீலே ஒருவர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான முன்னணி ஊழியர்களில் ஒருவர்.முற்போக்கு எழுத்தாளர்களீலே மூத்தகுடியைச் சேர்ந்தவர்.சிறந்த கவிஞரும் கூட.” ஆம்.கு.சி.பா. எழுத்தாளராகப் பரிணமித்த அதே வேளையில் அன்றைய ஒன்று பட்ட சேலம் மாவட்டத்தில் விவசாய சங்கத்தையும் மலைவாழ் மக்கள் சங்கத்தையும் தோற்றுவித்துக் களத்தில் நின்று போராடிய களப்போராளி யாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது சமகாலத்துப் பிற இடதுசாரிப்படைப்பாளிகளிடமிருந்து இவரைத் தனித்துக்காட்டிய அடையாளம் இது. அடிச்சா திருப்பி அடி என்று தஞ்சை மண்ணில் பண்ணை அடிமைகளாக இருந்த மக்களுக்கு ஆவேசம் ஊட்டிய தோழர் பி.சீனிவாசராவ் அவர்கள் தலைமையில் நில உச்சவரம்புச்சட்டத்தில் திருத்தங்கள் கோரி கோவையிலிருந்து சென்னைக்கோட்டை வரை நடைப்பயணம் சென்ற குழுவில் தோழர் கு.சி.பாவும் இருந்தார்.தோழர் சீனிவாசராவுடன் சேர்ந்து நடந்த அந்த நாட்கள் தன் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் என எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பார். தோழர் கு.சி.பாவை அடையாளம் கண்டு கட்சிக்கு அழைத்து வந்தவர் நாமக்கல்லில் இன்றும் தனது 102ஆவது வயதிலும் கட்சிப்பிடிப்போடு வாழ்கின்ற தோழர் கோட்டைப்பழனிச்சாமி ஆவார்.1948ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதை எதிர்த்து ஊர்வலம் சென்று,காவ்ல்துறை வழிமறித்துத் தாக்கியபோது கை எறி குண்டுகளை காவல்துறையை நோக்கி வீசிய வழக்கில் கைதாகிச் சிறை சென்றவர் இந்தத் தோழர் கோட்டைப் பழனிச்சாமி ஆவார்.இவரைத் தன் குருநாதர் என்று கு.சி.பா. மறக்காமல் எப்போதும் கூறுவார். சங்கம் நாவலைத்தொடர்ந்து கரும்பு விவசாயிகளின் போராட்ட நாவலாக “சர்க்கரை” யை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து பவளாயி, தலைமுறை மாற்றம்,சுரங்கம், பாலைநில ரோஜா ஆகிய நாவல்கள் வெளியாகின. சுரங்கம் நாவலை எழுதுவதற்காக அவர் மேற்கு வங்கமாநிலம் அசன்சாலில் உள்ள திறந்த நிலக்கரிச் சுரங்கத்துக்குச் சென்று அங்கெ பால நால் தங்கியிருந்து தொழிலாளிகளுடன் தானும் ஒரு தொழிலாளியாக சுரங்கத்துக்குள் பயணித்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகும் அவர்களோடு இருந்து அந்த வாழ்க்கையை முழுதாக உள்வாங்கி வந்து அந்த நாவலை எழுதினார்.2006ஆம் ஆண்டு வெளியான அந்நாவலின் முன்னுரையில் ஆவர் எழுதிய இவ்வரிகள் 1966இல் அவர் உறுதியுடன் மேற்கொண்ட கொள்கையில் இன்னும் ஆழ்ந்த பிடிப்போடு இருந்ததைப் பறை சாற்றுகின்றன:
“என்னைப்பொருத்தமட்டில் எழுத்து என்பது பணம் சேர்க்கும் ,புகழ் ஈட்டும் சாதனம் எனக்கருதவில்லை. சமூகத்தில் நிகழும் எதிரும் புதிருமான வாழ்வில் சாதாரண மக்களைப் பாதிக்கும் வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை ஆகியவற்றிற்கெதிராகவும் கௌரவமான ஒரு வாழ்வை உருவாக்கவும் போராடும் மக்கள் திரளுக்கு உதவக்கூடிய வகையில் பயன்பட வேண்டுமெனக் கருதுகிறேன். சுருக்கமாகக் கூறினால் சகல ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றும் போராட்டத்தில் எனது எழுத்தும் ஒரு தலையீடாக இருக்க விரும்புகிறேன்......வறுமை எனப்து,மனித குலம் இதுவரை உருவாக்கிய அனைத்து மேன்மைகளையும்களங்கப்படுத்தும் அவமானம் ஆகும்.அறிவுலகம் நாண வேண்டிய அசிங்கமும் ஆகும்” எந்தப் பூச்சும் இல்லாத தெளிவான பிரகடனம் இது.இதைத்தான் நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார் கு.சி.பா. நாவல்கள்,சிறுகதைகள்,கவிதள் என்கிற எழுத்துப்பணியோடு கட்சிப்பணியையும் இணைத்தது மட்டுமின்றி அகில இந்திய அளவில் முற்போக்குப் படைப்பாளிகளை இணைக்கும் புள்ளி ஒன்று வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தன் சொந்த முயற்சியில் தோழர் கோட்டைப் பழனிச்சாமி போன்ற உற்ற தோழர்களுதவியுடன் ILA QUARTERLY ( INDIAN LITERATURE AND ART QUARTERLY) என்கிற ஆங்கில காலாண்டிதழைத் துவக்கினார்.இந்தியா முழுக்கப் பயணித்து ஒரு மாத காலம் பல்வேறு மாநில முற்போக்கு எழுத்தாளர்களைச் சந்தித்து அவ்விதழுக்கு ஆதரவு திரட்டினார்.சுமார் மூன்றாண்டு காலம் வந்த அந்த இதழ் தன் பயணத்தைப் பாதியில் நிறுத்தியது.என்றாலும் அந்த முயற்சி ஒரு முக்கியமான முன்னெடுப்பு அல்லவா?
பின்னர் உலகம் முழுதும் உள்ள தமிழ் எழுத்தாளர்களை ஒரு மேடையில் கொண்டு வரும் நோக்குடன் பல நாடுகளில் வெளியாகும் நல்ல நூல்களுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகள் வழங்கிப்பாராட்டும் நோக்குடன் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை என்கிற அமைப்பை நண்பர்கள் உதவியுடன் துவக்கி ஆண்டுதோறும் இலக்கிய விழா எடுத்து விருதுகள் வழங்கி வந்தார். பிற்காலத்தில் தன் உடல் நலிவுற்று வருவதை முன்னுணர்ந்து அந்த அறக்கட்டளை நிதி 13 லட்சம் ரூபாயை அப்படியே தமு எகச அறக்கட்டளைக்கு மாற்றம் செய்து இனி அமைப்பே இந்த விருதுகளை வழங்கட்டும் என்று ஒப்படைத்துவிட்டார்.முற்போக்குக் க்லை இலக்கிய இயக்கத்துக்கு அரும்பணி ஆற்றிய ஆளுமைக்கு ஆண்டு தோறும் ஒருலட்ச ரூபாய் வாழ்நாள் சாதனையாளர் விருதினை தமுஎகச இப்போது அந்த நிதியிலிருந்தே வழங்கி வருகிறது. நிதி நெருக்கடியில் இருந்த பல எழுத்தாளர்களுக்கு அவ்வப்போது அவர் உதவி வந்தது வெளியில் தெரியாது. செம்மலர், தமுஎகச இயக்கம்,அறக்கட்டளை நிதி எனப்பலவற்றை நமக்காக அவர் விட்டுச்சென்றிருக்கிறார் என்றாலும் அவர் விட்டுச்சென்றுள்ள இந்த வாசகமே அவற்றில் எல்லாம் பெரிது “எங்கே சுரண்டப்படுகிற மனிதன் வாழ்வின் தாகத்துக்காக அன்னாந்து நோக்குகிறானோ அங்கெல்லாம் எனது நாவல்கள் தாகம் தீர்க்கும் தெளிந்த நீராக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்” இதுதான் அவர் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளுக்கு விட்டுச்சென்றுள்ள”தாகம்” என்று சொல்ல வேண்டும்.’தாகம்’ நீள்கிறது-தலைமுறைகள் தாண்டி.