தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநில செயளாலர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலாளரும், தமிழகம் அறிந்த மார்க்சிய ஆசிரியர்களில் ஒருவருமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் (65) ஞாயிறு இரவு 10.45 மணிக்கு மதுரையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
17.5.1957 அன்று பிறந்த தோழர் வெங்கட்டராமன், ம.ரெட்டியபட்டியில் பள்ளிப் படிப்பையும், கோவில்பட்டியில் பி.யூ.சி., தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பி.எஸ்.சி., மண்ணியல் பட்டப்படிப்பையும் படித்தார். இடதுசாரி இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, இந்திய மாணவர் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு மாணவப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்.
1981-82 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருப்புக்கோட்டை தாலுகா செயலாளராக செயல்பட்ட அவர், பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளராக பல்லாண்டுகாலம் செயலாற்றி விவசாயிகளின் நலனுக்காக ஏராளமான போராட்டங்களில் முன்னின்றவர்.
தோழர்கள் எஸ்.ஏ.பெருமாள், பி.சீனிவாசன் போன்ற கம்யூனிஸ்ட் முன்னோடிகளுடன் இணைந்து, விருதுநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், 1994ஆம் ஆண்டு கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று 2001ஆம் ஆண்டு வரை திறம்பட செயலாற்றியவர். விருதுநகர் மாவட்ட உழைப்பாளி மக்களிடம் வீடுவீடாக நிதி திரட்டுவதிலும், அந்த நிதியைக் கொண்டே கட்சியின் இயக்கங்களை நடத்துவதிலும் முன்னுதாரணமாக செயல்பட்டவர்.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நலன் காக்கவும், விவசாயிகள், நெசவுத்தொழிலாளர் நலன்காக்கவும் எண்ணற்ற போராட்டங்களின் போராளியாக விளங்கியவர். பெண்களின் பிரச்சனைகளிலும், பெண்ணுரிமைக்கான போராட்டங்களிலும் உரிய வியூகங்கள் வகுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செயலாற்றியவர்.
இளைய தலைமுறையினரோடும், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களோடும் நெருக்கமான உறவைப் பேணி வந்தார். இசையிலும், இலக்கியத்திலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. கட்சி வகுப்புகளிலும், பேரவைக் கூட்டங்களிலும், கட்சி முடிவுகளையும் தத்துவ பின்னணியோடு மிகச்சிறப்பாக விளக்குகின்ற ஆற்றல் கொண்டவர். அனைவரிடமும் மிக எளிமையாக பழகக் கூடியவர். பொதுவாக, தன்னை முன்னிறுத்தாமல், கட்சியை முன்னிறுத்துபவர்.
2001 ஆம் ஆண்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, தமது இறுதி மூச்சு வரை கட்சி ஸ்தாபன அரசியல் பணியை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர். தென்தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி ஸ்தாபன பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். தேர்தல் காலங்களில் மிக நுட்பமாக திட்டமிட்டு தேர்தல் பணியாற்றியவர்.
தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சிக்கு தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஆற்றிய பங்கு மகத்தானது. ஆறு ஆண்டுகாலம் தீக்கதிர் ஆசிரியர் குழு பொறுப்பாளராகவும், தற்போது தீக்கதிர் வெளியீட்டாளராகவும், முதன்மைப் பொது மேலாளராகவும் செயலாற்றி வந்தார். கொரோனா காலத்திற்கு பிந்தைய கடினமான சூழலை தீக்கதிர் நாளிதழ் எதிர்கொண்ட நிலையில், அதை நிலைநிறுத்துவதற்கு திட்டங்கள் வகுத்து செயல்படுத்த துவங்கியிருந்தார். இந்நிலையில் அவரது அகால மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தீக்கதிர் நாளிதழுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மறைந்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்களுக்கு பத்மினி (60) என்ற மனைவியும் சூர்யா (33) என்ற மகனும் உள்ளனர். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தார், கட்சி தோழர்கள், தீக்கதிர் ஊழியர்கள் அனைவருக்கும் கட்சியின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்திடவும் கட்சி அணிகளை மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.