பணி மேம்பாட்டுக்கான பணப்பயனை உடனே வழங்க வேண்டும் கல்லூரி ஆசிரியர்கள் அமைச்சரிடம் கோரிக்கை
கும்பகோணம், அக். 13- அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கியது போல், தமிழக அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டுக்கான பணப்பயன் மற்றும் அதன் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொடர்ந்து எம்.பில் மற்றும் பிஹெச்.டி ஊக்க ஊதிய தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனை திருவிடைமருதூர் கலைஞர் பாசறை அலுவலகத்தில் சந்தித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மூட்டா அமைப்புகளின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சேவியர் செல்வகுமார், தஞ்சை மண்டலப் பொறுப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், ரமேஷ், ஸ்ரீதர் தங்கதுரை, கீதா உள்ளிட்ட தஞ்சை மண்டல செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர். அப்போது, அமைச்சர் விரைவில் பணப் பயன்களை சம்பளத்தில் சேர்ப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
 
                                    