பறவைகளுக்காக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு ஆட்சியர் பாராட்டு
சிவகங்கை, அக்.19 - திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக 53 ஆண்டுகளாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிய கொள்ளுக்குடிபட்டி, சின்ன கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடி ஆகிய 3 கண்மாய்களில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிமாநிலங்கள், ஆசியாவின் பிற நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வருகின்றன. அவை இங்குள்ள மரங்களில் கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன. மீண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் தங்களது பகுதிகளுக்குத் திரும்பிச் செல்கின்றன. இந்தப் பறவைகளுக்காக அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் 53 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்களில் பட்டாசுகள் வெடிப்பதில்லை. பறவைகளுக்காக இக்கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை விட்டுத் தருகின்றனர். இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் வனத்துறையினர் கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கிப் பாராட்டுகின்றனர். அதன்படி சனிக்கிழமை கொள்ளுகுடிபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இனிப்புகளை வழங்கி பாராட்டினார். வனச்சரக அலுவலர் கார்த்திகேயன், வனவர் பிரவீன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
