ரூ.19,551 கோடி வங்கிக்கடன் இலக்கு ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை, ஜுன் 28- புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு. அருணா, தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னர், 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு, அவர் தெரிவித்ததாவது:- விவசாயம், கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வங்கிகளின் கடன் திறன் ரூ.19,551 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இதில் ரூ.15,795 கோடி அத்தியாவசிய துறைகளுக்காகவும், ரூ.3,756 கோடி அத்தியாவசியமில்லா துறைகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது முக்கிய வளர்ச்சி துறைகளுக்கு கடன் செல்வதை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை ஊக்குவித்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். காரைக்குடி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.