tamilnadu

img

காண்டிராக்ட் என்னும் கொடிய நோயை சிஐடியு விரட்டியடிக்கும்

தமிழகம் பன்னாட்டு நிறுவனங்களின் பரிசோதனைக் கூடமல்ல: தபன்சென்

கன்னியாகுமரி, நவ.7- தொழில்வளத்திற்கு உகந்த மாநிலமான தமிழகத்தில் பெருநிறுவனங்களும், கார்ப்ப ரேட்டுகளும் காண்டிராக்ட், அவுட்சோர்சிங் முறையை எப்படி புகுத்தலாம் என்பதற்கான பரிசோதனைக் கூடமாக மாற்ற ஒன்றிய அரசின் துணையோடு முயற்சித்து வருகின்ற னர். தமிழகம் ஒன்றும் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவதற்கு “பரிசோதனைக் கூடமல்ல” என்பதை தமிழக தொழிலாளி வர்க்கம் உணர்த்தவேண்டும் என சிஐடியு அகில இந்தியப் பொதுச் செயலாளர் தபன்சென் கூறினார். சிஐடியு 15-ஆவது மாநில மாநாட்டை நிறைவு செய்து வைத்து அவர் பேசியதாவது: காண்டிராக்ட், அவுட்சோர்சிங் முறை ஆபத்தானது.  தமிழகத்தில் மாநகராட்சிகளில் அவுட்சோர்சிங் முறை புகுத்தப்போவதாக செய்திகள் வந்துள்ளன.  இந்த முறை ஆபத்தானது. திரும்பப் பெற வேண்டும். சங்கம் வலுவாக இருக்க வேண்டுமானால் உரிமைகளுக்கான போராட்டம் வலுப்பெற வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். புலம்பெயர் தொழிலாளர்கள் வந்தால் அந்தந்த மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்று துஷ்பிரச்சாரம் நடைபெறுகிறது. புலம்பெயர் தொழிலாளர் களும் நம்முடைய வர்க்கம் தான். என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களைப் பாதுகாப்பது போல் புலம்பெயர் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.

சொமேட்டோ, சுவிகி, ஓலா, உபர் போன்ற  நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் களையும் சிஐடியு-வின் கீழ் திரட்ட வேண்டும். இவற்றை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும். தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலானால், குறைந்தபட்ச ஊதியம் என்பதே இல்லாமல் போய்விடும். எட்டு மணி நேர வேலை என்பதே காணாமல் போய்விடும். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங். ஐ.டி,நிறுவனங்கள், அறிவியல் சார் தொழில் நிறுவனங்களில் அவுட்சோர்சிங், காண்டிராக்ட் முறையை புகுத்துவதற்கான “பரிசோதனைக் கூடமாக” தமிழகம் உள்ளது. தொழிலாளி வர்க்கம் ஒன்றும் பரிசோதித்துப் பார்ப்பதற்கு எலிகளல்ல. அவர்களுக்கான உரிமையை நாம் பெற்றுத்தரவேண்டும். ஒரு காலத்தில் சிஐடியு தனியார் மயம் ஆபத்து என்று பேசினாலே, தொழிலாளர் களிடம் அரசியல் பேசாதீர்கள் என பல தொழிற்சங்கங்கள் கூறி வந்தன. இன்றைக்கு தனியார்மய ஆபத்தை உணர்ந்து கொண்ட அவர்கள் தொழிலாளர்கள் நலன்களுக்காக இணைந்து போராடுகிறார்கள். உச்சபட்சமாக “மோடியே வெளியேறு” என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எதிர்கால இந்தியாவைப் பாதுகாக்க தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கோவிலில் சேவையை முடித்துவிட்டு மாநாட்டை சிறப்பிக்க வந்த கலைஞர்கள்

சிஐடியு 15-ஆவது மாநில மாநாடு விடாது பெய்த மழைக்கிடையே நடைபெற்றது. மாநாட்டில் நாதஸ்வரக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞர்கள் வேறு யாருமல்ல  கன்னியாகுமரி மாவட்ட ஆலய ஊழியர்கள் (சிஐடியு) சங்கத்தினர்.அவர்களிடம் பேசிய போது, கோவிலில் சேவையை முடித்துவிட்டுகோரிக்கையை வலியுறுத்த வந்துள்ளோம் என்றார்கள் தலைவர் எஸ்.ராமச்சந்திரனும் செயலாளர் அஜித்குமாரும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சுமார் 600 பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. அரசு விதிப்படி மட்டுமல்ல உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய குறைந்தபட்ச  சம்பளம் ரூ.18 ஆயிரம் வழங்கவில்லை. வெறும் ரூ.7 ஆயிரம் தான் சம்பளம். 2012-க்குப் பின் ஓய்வுபெற்ற  தொழிலாளர்களுக்கு இதுவரை பணிக்கொடை கிடைக்கவில்லை.

இபிஎப் பென்சன் ரூ.1,000 மட்டுமே கிடைக்கிறது. மாவட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் 400 பேர் உள்ளனர். இதில் சிஐடியு-வில் 246 பேர் உறுப்பினராக உள்ளனர். இந்த மாநில மாநாட்டின் மூலம் எங்களது கோரிக்கை நிச்சயம் அரசின் கவனத்தை ஈர்க்கும் என்றனர். “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என்ற பாடலுக்கு பரதநாட்டியம் மூலம் அச்சு அசலாக வெளிப்படுத்தினார் காயத்ரிலால். இவர் கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார். இரண்டாம் வகுப்பு முதல் பரதநாட்டி யம் பயின்று வருகிறார். இவரது சகோதரி கங்கோத்திரிலாலும் ஒரு பாடகி. இவர் ஆறாம் வகுப்பு வருகிறார். கொட்டும் மழையில் மெட்ராஸ் டாக்கீஸின் ராப்பிசை பாடல்களுக்கு இளைஞர்கள் ஆட்டம்போட்டுக் கொண்டிருந்தனர். ராப்பிசை பாடல்கள் இளைஞர்களுக்கு விருந்தளித்தது என்றால் காயத்ரிலாலின் பரதநாட்டியம் அதற்கு சளைத்தல்ல என்பதை ரசித்துப் பார்த்தனர் மக்கள். இசை மழையும் பருவமழையும் உடலையும் உள்ளத்தையும் குளிர்விக்க மாநாட்டின் வெற்றியை பறைசாற்றினர் பல்லாயிரக்கணக்கில் அணிவகுத்த செஞ்சட்டை வீரர்கள்.

மாநில மாநாட்டில் அ.சவுந்தரராசன் சூளுரை

நாகர்கோவில், நவ.7- “காண்டிராக்ட்” எனும் கொடிய நோயை விரட்டியடிக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம். அந்தப் பணியில் தமிழக தொழிலாளி வர்க்கத்தின் முன்களப் பணியாளராக சிஐடியு நிற்கும் என இந்திய தொழிற்சங்க மையத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். இந்திய தொழிற்சங்க மையத்தின் 15-ஆவது மாநில மாநாட்டுப் பேரணி-பொதுக்கூட்டம் ஞாயிறன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. அ.சவுந்தரராசன் பேசியதாவது: காண்டிராக்ட் மயம், அவுட்சோர்சிங் என்ற கொடிய நோயை விரட்டியடிக்க வேண்டிய தருணத்தில் தமிழக தொழிலாளி வர்க்கம் உள்ளது. அதில் சிஐடியு-வின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் நிற்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர், முந்திரி தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த நெருக்கடிக்குக் காரணம் நவீனதாராளமயம், பொருளாதாரக் கொள்கைகள் தான். முந்திரிக்கு கட்டுப்படியான விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான தொழில் ரப்பர். இங்கு ரப்பர் தொழில் சார்ந்து டயர் தொழிற்சாலையோ அல்லது குறைந்தபட்சம் டியூப் தொழிற்சாலையாவது தொடங்க வேண்டும். இந்த பிரதான கோரிக்கையை சிஐடியு வலியுறுத்தும். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து, மின்சாரம், முறைசாராத் தொழிலாளர்கள், பட்டாசு, தீப்பெட்டி, பின்னலாடை, கைத்தறி, விசைத்தறி தொழில்கள் நசிந்துவிட்டன. அதிமுக தங்களது நேசக்கட்சியான பாஜக-விடம், ஒன்றிய அரசிடம் பேசி இந்தத் தொழில்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களை காக்கத் தவறிவிட்டது. தற்போது திமுக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்துள்ளது. குறிப்பாக தொழில் நெருக்கடியை தீர்க்க வேண்டும். போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறை சார்ந்த தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணப்பலன்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கேரளத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் நடைபெற்றது. அதில் சிஐடியு-வும் பங்கேற்றது. யார் ஆட்சி செய்தாலும் தொழிலாளியா? அரசா? என்ற பிரச்சனை எழும்போது தொழிலாளர்கள் பக்கமே சிஐடியு நிற்கும். இந்தத் துணிச்சல் பாஜக ஆதரவுக் கூட்டத்திற்கு உள்ளதா?

ஒன்றிய அரசின் மின்சாரக் கொள்கையால் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என திமுக அரசு கூறியுள்ளது. மின் கட்டண உயர்வைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி வருகிறது சிஐடியு. அதே நேரத்தில் மின்கட்டண உயர்வுக்குக் காரணமான மோடி அரசை கண்டிக்க பாஜக தலைவர் அண்ணாமலை மறுக்கிறார். மவுனம் சாதிக்கிறார்.  உண்மையை அவர் கூறினால் காண்ட்ராக்ட் தொழிலாளியின் சீட்டை கிழிப்பது போல் “அண்ணாமலையின் சீட்டை” பாஜக கிழித்துவிடும் என்பது அவருக்குத் தெரியும். நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது என்றால், வேலை தராமலா போய்விட்டோம் என்கிறார்கள். ஒரு நிறுவனத்தில் 1000 பேர் பணிக்கு சேர்க்கப்பட்டால், அவர்களில் 800 பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள், 100 பேர் அவுட்சோர்சிங் தொழிலாளர்கள். 100 பேர் அரசுப் பணியாளர்கள். இது தான் நிலை. காண்டிராக்ட், அவுட்சோர்சிங் என்ற கொடிய நோயை விரட்டுவோம். தொழிலாளர் ஒற்றுமையை பாதுகாப்போம். தொழில் வளர்ச்சிக்கும் உதவிடுவோம் என்றார்.

குமரி இடதுசாரி மாவட்டம்

சிஐடியு கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தங்கமோகன் பேசுகையில், முந்திரி, ரப்பர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் காக்க இஎஸ்ஐ நிறுவனம் கன்னியாகுமரியில்  ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள் நலன்கருதி தமிழக அரசு தொழில்நுட்ப பூங்காவை தொடங்கவேண்டும் என வலியுறுத்தினார். செங்கொடி இயக்கம் உழைப்பாளி மக்களின் பாதுகாவலனாக என்றுமிருக்கும். கன்னியாகுமரி மாவட்டம் செங்கொடியின் கீழ் உள்ள இடதுசாரி மாவட்டம் என்பதை நிரூபிப்போம் என்றார்.

படங்கள்: பொன். பார்த்தசாரதி, 

செய்திகள் : ச.நல்லேந்திரன், சி.முருகேசன்

 

சிஐடியு மாநில மாநாட்டை வண்ணமயமாக்கிய  விளக்கு கட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.  குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருவிதாங்கூர் பகுதி  மலைவாழ் மக்களான  காணி சமூகத்தினர் தங்களது குல தெய்வ வழிபாட்டின் பகுதியாக விளக்கு கட்டு என்கிற சப்பரம் எடுப்பது தொன்று தொட்டு உள்ள வழக்கம். அந்த பாரம்பரிய விளக்கு கட்டை செவ்வண்ணத்தில் கட்டி தலையில் சுமந்து வந்தது குமரி மாவட்ட காணி மக்களின் பாரம்பரியத்தை சிறப்பிப்பதாக அமைந்தது. தேர்போன்று அலங்கரிக்கப்பட்ட மூன்று விளக்கு கட்டுகளில் மறைந்த தொழிற்சங்க தலைவர்கள்  வி.பி.சிந்தன், ஜே.ஹேமச்சந்திரன், டி.மணி ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கான ஏற்பாட்டை போக்குவரத்து தொழிலாளர்கள் செய்திருந்தனர்.