tamilnadu

img

செஞ்சட்டை பேரணியால் செங்கடலானது கோவை

கோவை, ஜூன் 21- சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி,  செவ்வாயன்று நடைபெற்ற செஞ்சட்டை பேரணியால் கோவை செங்கடலாக காட்சியளித்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாநில மாநாடு கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதனையொட்டி செவ்வாயன்று கோவையில் பிரம்மாண்ட பேரணி கோவை காந்திபுரத்தில் துவங்கியது. இதனை சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் துவக்கி வைத்தார். இப்பேரணியில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்  கலந்து கொண்டனர். முன்னதாக, காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து பேருந்து நிலையம் முன்பு இருந்து துவங்கிய இப்பேரணி சித்தாபுதூர், 100 அடி சாலை வழியாக சிவானந்தா காலனியில் நிறைவடைந்தது. அரசு போக்குவரத்து ஊழியர்களின் செஞ்சட்டை பேரணியால் கோவை நகரம் செங்கடலானது. 

இப்பேரணியில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு இறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வேலை நிறுத்தத்திற்கு தள்ளக்கூடாது. மக்களின் பிரச்சனைகளை பின்னுக்குத்தள்ளி திசைதிருப்ப மதவெறியை ஏற்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டது.  இதனைத்தொடர்ந்து சிவானந்தா காலனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், சங்கத்தின் மாநில நிர்வாகி என்.முருகையா உள்ளிட்டோர் உரையாற்றினர். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கோவை மாவட்டப் பொருளாளர் ஆர்.கோபால் நன்றி கூறினார்.