tamilnadu

img

சிஐடியுவின் தொடர் போராட்டத்தால் 37 பேருக்கு பட்டா கிடைத்தது

திருச்சுழி, நவ.13- திருச்சுழி அருகே சிஐடியு, சிபிஎம் நடத்திய தொடர் போராட்டத்தால் 37 சலவைத் தொழிலாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் சலவைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நீண்ட காலமாக பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில், அனைவரும் சிஐடியுவில் இணைந்தனர். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென கடந்த 2018 நவ.18 அன்று சிஐடியு சார்பில் விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்பு, மாவட்ட ஆட்சியரை சந்தித்து சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின்னர், இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2023 டிச.14 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தமிழக முதல்வர் கடந்த நவம்பர் 10 அன்று விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 37 பேருக்கு பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். இதனால், சலவைத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். தங்களுக்காக போராடிய சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வெகுவாக பாராட்டினர். இதில், திருச்சுழி சிபிஎம் வட்டச் செயலாளர் மார்க்கண்டன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சாராள், மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.