tamilnadu

img

ஒரு வானவில் போலே இசை வாழ்விலே வந்தாய்... - எஸ்.வி.வேணுகோபாலன்

‘சொக்கிச் சொக்கிச் சிரிப் பாளே சொக்கத் தங்கம் போலே ....’ என்கிற இடத்தில் அவரது குரலுக்குக் கிறங்கிப் போகாதவர் இருக்க முடியுமா... அந்த இடத்தை ரசிகர்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு அவர் சென்றடைய வைக்கும் போது எல்லோர் குடுவையிலும் படிப்படியாக அவர் ஊற்றி நிரப்பிய போதையும் சேர்ந்தல்லவா ஊறி அந்தக் கிறக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது! காற்றினிலே வரும் கீதம் திரைப்படத்தின் ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ பாடல், காதலுக்கானது மட்டுமன்று, இசைக்குமான போதை!  ராஜாவின் தேர்ச்சியான இசைக் கலவை அது. புல்லாங்குழலில் கடைந்தெ டுத்துப் பெருகிப் பொழியும் அமுத இசையில் ஜெயச்சந்திரன் நடத்தி இருக்கும் இசை மிதவைப் பயணம் அது.   தனித்துவக் குரல் அவரது.  தேநீர்க் குவ ளையை நம்மிடம் நீட்டுமுன் டீக்காரர்  மீண்டு மொருமுறை ஆவி பறக்கும் தேநீர்ப் பையிலி ருந்து சுவாரசியமான துளிகளைத் தெளித்து ஆசீர்வதித்து வழங்குவது போல...அழகான மலர்மாலையை வேகமாகத் தொடுத்து முடிக்கும் பூக்காரர் நமக்காக ஒரு பொன் சரிகையை அதன் மீது சுற்றிச் சுழல இழையோட விட்டுப் பிறகு எடுத்துக் கொடுப்பது போல.. ஒன்றா இரண்டா அவரது எந்தப் பாடலிலும் இசைக்கான அந்த அர்ப்பணிப்பின் துளிகள், காதலின் இழை யோட்டம் கலந்தே வந்தடைந்து கொண்டி ருக்கிறது! இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கை யாகத் தோன்றுகிறது. பள்ளியிறுதி நாட்களில், கல்லூரிக் காலத்தில் கூட எந்தத் திரைப்பாடலை யார் பாடியது என்று வீட்டில் பழி சண்டை நடக்கும். அண்ணன் தம்பிகளுக்குள் மட்டுமல்ல, அண்மையில் மறைந்த எங்கள் தாய் மாமனும் இறங்கிவிடுவார் களத்தில், பழைய பாடல்கள் என்றால்!  ஜேசுதாஸ் குரலில் சொக்கியிருக்கும் நாளொன்றில் கேட்டது, மந்தார மலரே...மந்தார மலரே பாடலை!   அவர் குரலில்லை என்று ஒரு கட்சி, இல்லை அவர் தான் என்று எதிர்த்தரப்பு.

இசையின் சுரங்களும்  நடன ஜதிகளும் 

நான் அவனில்லை திரைப்படம், மெல்லிசை மன்னர் அமர்க்களப்படுத்திய அருமை யான பாடல்களை உள்ளடக்கியது.  கேரள ஜெண்டை வாத்தியங்கள் அதிரடிக்கத்   தொடங்கும் பாடலில், ‘மன்மத சாலையில் ஆனந்த பூஜைக்கு நீ கூட வருவாயோ’ எல்லாம் கடந்து, ‘குங்குமம் அணியுமுன்னாலே கூந்தல் வாரும் முன்னாலே சுந்தர புருஷன் வந்நல்லோ ..சங்கதி பறையான் வந்நல்லோ’   என்ற குதூகலக் கொண்டாட்டத்தில் இழையும் பெண் குரல் எல்.ஆர். ஈஸ்வரி என்பதை எல்லோரும் ஒரே குரலில் கத்திக்கொண்டிருக்க, ஆண்குரல் பற்றியே சண்டை அன்றைக்கு!. கடைசி சரணத்தில்,  ‘ஜீவித சாகரத்தில் ஞான் பாய்மரம்’ என்று நெஞ்சை அள்ளுகிறது அந்த ஆண்குரல்.  ‘ஜீவித யாத்ரையில் ஞான் நின் நாயகி’ என்று கலக்குகிறார் ஈஸ்வரி.  நல்ல வேளையாக சென்னை வானொலி நிலைய திரைகானத்தில் பாடல் முடிந்தபின் அன்று பெயர்களைச் சொல்ல, ஜெயச்சந்திரனை உறு தியாகப் பற்றிக் கொண்டோம் அந்த கணத்தில்! இப்போதும் நினைவிருக்கிறது, கிழக்கே போகும் ரயில் படத்தின் ‘மாஞ்சோலைக் கிளி தானோ’ பாடல் ஒலிக்கும் போது சிறிய டிரான்சிஸ்டரின் அருகே காதுகளை ஒட்ட வைத்து அந்த கிர்ரென்ற கீழ் ஸ்தாயி உச்ச ரிப்புக்குக் காத்திருந்த நொடி! ‘மான் தானோ...’ அடுத்த அடி.  ‘வேப்பந்தோப்புக் குயிலும் நீ தானோ...’ என்ற வரியில்  அந்த வேப்பந்தோப்பு என்ற சொற்களை அவர் உச்சரிக்கும் மந்திர கதியில் நம்மையுமல்லவா குயிலருகே கொண்டு நிறுத்தி இருப்பார்.  ‘நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்’ என்கிற வரியில் பொதிந்திருக்கும் ராஜாவின் அபாரமான இசை ஞானத்தை ஜெயச்சந்திரன் ரசிகர்களுக்கு அசாத்தியமாகக் கடத்தி இருப்பார். அவரது குரலில் இசையின்  ஸ்வரங்களும் நடன ஜதிகளும் உள்ளூர அச்சு கோக்கப்பட்டதுபோல் இருக்கும்.  அந்த 7 நாட்கள் படத்தின் மென் காதல் கீதமான, ‘சப்த ஸ்வர தேவி யுனரு இனி என்னில் வர கானம் அருளு...’  என்ற மலை யாள தொகையறாவில் தொடங்கி, கவிதை அரங்கேறும் நேரம் என்று தமிழுக்கு மாறும் பாடல், எம்.எஸ்.விஸ்வநாதன் வழங்கிய அற்புதக் கொடை.  இனிய பாடகி எஸ்.ஜானகி இணை குரலாக இசைக்க, ஜெயச்சந்திரன் அந்தத் தாள கதியில் காதல் நர்த்தனம் புரிந்திருப்பார்.மெல்லிசை மன்னரது இசை ஞானத்தின் மீது தனக்கிருந்த பெரும்பற்றையும் மதிப்பையும் அவரே வெளிப்படுத்தி இருந்தார் என்று இரங்கல் குறிப்பில் எழுதி இருந்தார் தி இந்து இதழாளர் பி.கோலப்பன். 

மணக்க மணக்க  தொடுத்த பாடல்கள் 

ஜெயச்சந்திரன், எத்தனையோ நடிகர்க ளுக்காகக் குரல் கொடுத்திருந்தாலும் விஜய காந்துக்கு அப்படி பொருத்தமாக அமைந்தது என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது ரசிக உலகம். வைதேகி காத்திருந்தாள் - இளைய ராஜா - விஜயகாந்த் - ஜெயச்சந்திரன். இந்த  வாய்பாட்டை வேறு எப்படியும் மாற்ற முடியுமா, தெரியவில்லை.  துயரமிக்க வாழ்க்கையின் சுமையில் இருக்கும் ஒரு சோக நாயகனுக்கான குரலாகப் பொருந்திப் போனார் ஜெயச்சந்திரன்.  ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ என்பது காதலின் ஆசுவாசம் எனில், ‘காத்திருந்து காத்தி ருந்து காலங்கள் போனதடி’, அந்தக் காதல் நினைவின் வெப்பப் பெருமூச்சு. வாணி ஜெய ராம் எனும் மகத்தான இசைக் கலைஞரோடு இணைந்து அவர் இசைத்த ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ எனும் அற்புதப் பாடல் காதலின் வசீகரக் கொண்டாட்டம்.  அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் எஸ். ஜானகி யோடு சேர்ந்து ஜெயச்சந்திரன், ‘பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே ....’ என்று தொடுத்த பாடல் இன்றும் மணந்து கொண்டிருப்பது. ‘மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்...’  பாடலை இளையராஜா, ரயில் வண்டியின் வேக கதியில் தொடுத்திருப்பார்.  ஆவி கலக்கும் காதலை நீராவி எஞ்சினின் ஓசையில் ராஜா எழுப்பும் வேதியியல் ரசனை பி.சுசீலாவின் ஹம்மிங்கிலும், ஜெயச்சந்திரனின் சங்கதிகளி லும் எதிரொலிக்கும். சுசீலா - ஜெயச்சந்திரன் இணைந்து இசைத்த பாடல்கள் - ‘காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ’ உள்ளிட்டு, எப்போ தும் இனித்துக் கொண்டிருப்பவை.  ‘மயங்கி னேன் சொல்லத் தயங்கினேன்’ பாடல், கவிஞர் வாலியின் மொழியில் ராஜாவின் இசையில் சுசீலாவோடு இணைந்து ஜெயச்சந்திரன் வழங்கிய மற்றுமோர் அருமையான கீதம். தாள லயமும் மெட்டின் சுவாரசியமும் ‘உறக்க மில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும், இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்....’ போன்ற  ஏக்க வரி களுமாக எப்போதும் கொண்டாடிக் கேட்கும் பாடல் வரிசையில் இருப்பது அது. பல்வேறு முக்கிய பாடகர்களைத் தனது முதல் படத்தில் பாட வைத்த டி. ராஜேந்தரின் இசையில் தலைப்புக்கான பாடல், ஜெயச்சந்தி ரனுக்கு வாய்த்தது. கோவையில் நான் முதுநிலை படிப்பில் இருந்த காலம், இந்தப் படம் வெளியான நேரத்தில், இளைஞர்களின் வாய்முணுப்பாக இருந்தது ‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூர தீபம்...’. ராஜேந்தரின் அழகான சொற்களை ஜெயச்சந்திரன் உச்சரிப்பு கொண்டு சென்ற விதத்தில் லயித்து, அவரே இவருக்கு அளித்த, ‘வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்’ பாடல் ‘ரயில் பயணங்களில்’ மட்டுமல்ல, பேருந்து பயணங்களிலும் எப்போ தும் ஒலிப்பதானது. 

வைர மணி  இசையலைகள் 

ஆர்ப்பாட்டமற்ற பாடகர் ஜெயச்சந்திரனின் மலரினும் மெலிதான குரலில் பூத்த, ‘கொடி யிலே மல்லியப்பூ’ பாடல் ஜானகியின் குரலோடு இணைந்து விளைந்த ஒரு பரவசமிக்க காதல் கீதம்.  திரும்பிப் பார்க்கையில், இயற்கை யோடு இயைந்த பாடல்கள் பலவும் அவருக்கு வாய்த்திருந்தது வியக்க வைக்கிறது. நீரோ டையும், பூக்களும், தோப்பும் துரவுமான இயற்கையின் மடியில் தவழும் பாடல்கள்!  எம்.எஸ்.வி இசையில் மூன்று முடிச்சு படத்தின் ‘வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்’ எனும் கண்ணதாசன் எழுதிய அந்தாதி வகைப் பாடல் அசாத்திய பாடகி வாணி ஜெயராம் அவர்களோடு இணைந்து அவர் இசைத்த சிறப்பான பாடல், ஒரு திடுக்கிடும் காட்சி யோடு முடியும் அது. அதே படத்தில் இருவரும் இணைந்து வழங்கிய மற்றுமொரு பாடலான, ‘ஆடி வெள்ளி ...’ ஒரு காதல் ஊஞ்சல் கீதம்.  அதுவும் அந்தாதி வகை தான். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் எம்.ஜி.ஆருக்கா கவும் குரல் கொடுத்திருந்தார் ஜெயச்சந்திரன். புலமைப்பித்தனின் ‘அமுதத் தமிழில் எழுதும்’ எனும் அந்தப் பாடலையும் வாணி ஜெயரா மோடு சேர்ந்து தான் பாடி இருந்தார், எம்.எஸ்.வி இசையில்.  அபார இசை ஜாலம் அந்தப் பாடல்.  ராஜாவின் இசையில் புன்னகை மன்னன் படத்திற்காக வாணி ஜெயராம் இசைத்திருந்த மிகவும் வித்தியாசமான ‘கவிதை கேளுங்கள்’ எனும் அற்புதப் பாடலில் ஜெயச்சந்திரன் அவர் களது ஸ்வர விளக்க ஆலாபனையும் நட னத்திற்கான ஜதிகளும் கேட்போரை உருக வைத்துவிடும்.   கேரள மாநிலத்திலிருந்து புறப்பட்டு வந்து பல்வேறு மொழிகளில் 16,000 பாடல்களு க்கு மேல் பாடியவர்.  மாநில இளம் கலைஞர்க ளுக்கான இசை திருவிழா ஒன்றில் 1958இல் கே.ஜே.யேசுதாஸ் சிறந்த பாடகர் விருது பெற்ற அதே மேடையில் சிறந்த மிருதங்க இசைக்கலைஞர் விருது பெற்றவர் ஜெயச் சந்திரன் என்கிறது ஒரு குறிப்பு.  இரிஞ்சாலக் கடாவில் இருந்து இசை வளைகுடாவில் கரைந்து விட்டிருப்பவர் அவர். ஏராளமான விருதுகள், இனிய நட்பு வட்டம், அமைதியான மனிதர் என்று  வாழ்ந்தவர்.  ஜனவரி 9 அன்று மறைந்துவிட்டார் என்பது வாழ்க்கைக் குறிப்பாக இருக்கலாம், உண்மையில், மகத்தான கலைஞர்கள் ஒரு போதும் மரணம் அடைவதில்லை. ஏனெனில், காற்றினிலே வரும் கீதம் ஒன்றில், ‘ஒரு வானவில் போலே ....’ அவர் வந்துபோய்க் கொண்டு தான் இருப்பார்!