tamilnadu

நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் தொடர்பில்லை

சென்னை, பிப். 5 – நீட் விலக்கு கோரும் சட்டத்திற்கும்,உச்சநீதிமன்ற தீர்ப்பிற் கும் தொடர்பில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து விவாதிக்க சட்டமன்ற  அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழ மையன்று (பிப்.5) தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதன் சுருக்கம் வருமாறு: மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளுமே ஒருமித்த கருத்தோடு உள்ளோம். நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம் தமிழ்நாடு. 2006ஆம் ஆண்டு இதற்காக டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அறிக்கை பெற்று, நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டத்தை நிறைவேற்றினோம்.

அந்த சட்டத்திற்கு ஆளுநரும், குடியரசு தலைவரும் 86 நாட்களில் ஒப்புதல் அளித்தனர். அதன்படி, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நுழைவுத்தேர்வு ரத்து சட்டத்திற்கு குடியரசுத் தலை வர் ஒப்புதல் அளிக்கும் முன்பு, ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் உள்ள உயர் கல்வித் துறை நுழைவு தேர்வு ரத்து சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அப்போது, நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவது உயர் கல்வியின் தரத்தை குறைக்காது. பிளஸ் டூ தேர்வுகள் மிகவும் நேர்மை யானவை, வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு மாநிலமும் வெளிப்படையான மற்றும் நேர்மையான மாண வர் சேர்க்கை நடைமுறையை வகுத்துக்கொள்ள ஆட்சேபனை இல்லை என்று ஒன்றிய அரசின் உயர்கல்வித் துறை கூறியது.

நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் சென்றது. நுழைவுத் தேர்வினை ஒழிக்கும் தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலை வர் ஒப்புதல் அளிக்க ஆட்சேபனை இல்லை என்று கூறியது. இந்தத் துறையின்கீழ்தான் நீட் தேர்வு வருகிறது. ஒன்றிய அரசின் உயர்கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சட்டத் துறை அனைத்தும் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த பிறகுதான் குடியரசுத் தலைவர் 2006-ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை ஒழிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்த நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து தொ டரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியர சர்கள் மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர், “தமிழ்நாடு அரசின் நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம் ஒரு சமூக நலன் சார்ந்த  சட்டம்; சமூகநீதியை அடைய இது தேவை.

எனவே இந்தச் சட்டம் செல்லும்” என்று தீர்ப்பளித்தனர். மருத்துவ மற்றும் பொ றியியல் கல்லூரி சேர்க்கையில் நுழைவுத்தேர்வு இல்லாத நிலை சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது. இந்தச் சூழலில்தான், ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழுவின் அறிக்கையைப் பெற்று சட்டமன்றத்தில் விவாதித்தோம். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021ஆம் ஆண்டு செப். 13ஆம் தேதி மசோதாவை நிறைவேற்றினோம். சட்ட முன்வடிவினை உடனடியாக ஆளுநர், குடியரசுத் தலை வருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் அந்த அரசியல் சட்ட கடமையைச் செய்யவில்லை. எனவே, முதலமைச்சர் என்ற முறையில் கடந்த நவ.27 அன்று ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அதன் பிறகு டிச.17 அன்று மூத்த அமைச்சர் துரைமுருகனும் நேரில் சென்று வலியுறுத்தினார். மேலும், டிச. 28 அன்று அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்து வலியுறுத்தினோம். ஒன்றிய உள்துறை  அமைச்சரை சந்திக்க இயலாத சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஜன.8 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், “நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்” என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

இதன்பின்னர், ஜன.12 அன்று தமிழ்நாட்டில் 11 மருத்து வக் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார். அப்போதுகூட காணொலி வாயிலாகவே, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தினேன். ஜன.17 அன்று நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் குழு ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து நீட் விலக்கு கோரும் சட்ட மசோதா கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால், 2007இல் 87 நாட்களுக்குள் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், நீட் தேர்வு தேவையில்லை. மாணவர்களைக் கொல்லும் இத்தேர்விலிருந்து விலக்கு கேட்டு நிறைவேற்றிய சட்டமுன்வடிவை ஆளுநரே 142 நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இந்த ஆண்டிற் கான நீட் தேர்வு முடிவுற்று மாணவர் சேர்க்கை தொடங்கிய பிறகே,  சட்டமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பியுள்ளார். அதற்கான செய்திக் குறிப்பில், நீட் தேர்வு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக மேற்கோள் காட்டு கிறார். ஆனால், நீட் விலக்கு சட்டமுன்வடிவு 8 கோடி தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ்நாடு சட்ட மன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் தொடர்புடையது. சட்ட மன்றத்தின் இறையாண்மை தொடர்பானது. அந்தத் தீர்ப்பு வேறு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் வேறு. அதனால்தான் இந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோருகிறோம். குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் முன்பே, ஆளுநர் சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியிருக்கிறார்.  இந்த அசாதா ரண சூழலில், அனைவரும் ஒற்றுமையாக இந்த சமூகநீதிப் போராட்டத்தை நடத்திட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.