ரூ.6 லட்சம் வரை அரசு மானியம் பெறலாம் முதல்வரின் உழவர் நல சேவை மையம் அமைத்திட அழைப்பு
தஞ்சாவூர், ஆக. 28- தஞ்சாவூர் மாவட்டத்தில், 30 சதவீத மானியத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என, தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் கோ.வித்யா அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகளின் நலன் காத்திடும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, மாநில திட்டத்தின் கீழ், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் என்ற திட்டம் 2025 - 26 ஆம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்த இளைஞர்களின் பட்டறிவும், தொழில்நுட்பத் திறனும் உழவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், ஆயிரம் எண்கள் உழவர் நல சேவை மையம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் உழவர் நல சேவை மையத்தின் பயன்கள் இதில், ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட, 30 சதவீத மானியமாக ரூ.3 லட்சம் முதல், ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கென மாநில நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களில், உழவர்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மைக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு, நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனை ஆகியவை வழங்கப்படும். இத்திட்டத்திற்கான இலக்கு மற்றும் மானிய மதிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில், படித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில், முதல்வரின் உழவர் நல சேவை மையம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15 எண்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் முதலீட்டில் அமைக்கப்படும் உழவர் நல சேவை மையத்திற்கு மானியமாக 3 லட்சமும், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் சேவை மையத்திற்கு 6 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இத்திட்டத்தின் மூலதனம் மானியம் 30 சதவீதமாகும். அதிகபட்ச மானியம் ரூ.6 லட்சம் ஆகும். வேளாண்மை உழவர் நலத்துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மைய பயனாளிகளுக்கும் வழங்கப்படும். பயனாளிகள் தங்களது விண்ணப்பங்களை நேரடியாக வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் 30 சதவீத பயனாளிகள் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு, மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/scheme_register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் மாநில அரசின் உதவியுடன் தொடங்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பினை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.