ரூ.33.04 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் சென்னையைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர்
தஞ்சாவூர், ஜூலை 13 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தாடு பகுதிக்கு, தனியார் ஆம்னி பேருந்தில், போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், ஒரத்தநாடு காவல்துறையினர் குழு, வல்லம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த ஆம்னி பேருந்தை சோதனை செய்த போது, போதைப் பொருட் கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டு நபர்களை காவல்துறையினர் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளனர். இதன்பேரில், காவல்துறையினர் இருவரையும் ஒரத்த நாடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சையத் அலாவுதீன்(46), பாரிஸ் பகுதியை சேர்ந்த ஹபீப் ஜாபர் அலி (51) என்பது தெரியவந்தது. மேலும், சென்னை பாரிஸ் பகுதியில் மொபைல் கடை நடத்தி வரும் இருவ ரும், வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணத்தை விநியோ கம் செய்து வருவதை தொழிலாக செய்து வருவது தெரிய வந்தது. பிறகு, ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒருவரிடம் 33.04 லட்சம் ரூபாயை ஒப்படைப்பதற்காக வைத்திருந்த பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில், ஒரத்தநாடு வந்த வருமான வரித்துறை அலுவலர்கள், ஹவாலா பணம் என்பதை உறுதி செய்து, சையத் அலாவுதீன் மற்றும் ஜாபர் அலி ஆகிய இருவரையும் விசாரணைக்காக திருச்சி அழைத்துச் சென்றனர்.