தமிழகத்தில் “சுயமரியாதை இயக்கம்” தோன்றி, மெல்லமெல்ல வலுப்பெறத் தொடங்கிய காலம் அது. சாதிய மேட்டிமை ஆதிக்கத்தையும், அதற்குப் பக்கபலமாக இருந்துவந்த மத நிறுவனங்களான மடங்களையும் எதிர்த்துப்பேசவும் எம்மால் இயலும் என்கிற சிந்தனையைச் சமுதாயத்தில் தூவி விதைத்தது இந்த சுயமரியாதை இயக்கம். அதன் ஆதரவாளர்களை எதிரிகள் ‘சுனா மானா’க்காரர்கள் என்பார்கள். அப்படியானதொரு பொழுதில்தான் “சந்திரகாந்தா” - என்றொரு திரைப்படம் தமிழில் வெளிவந்தது.
ஜே.ஆர். ரங்கராஜு என்பவர் எழுதிய நாவல்தான் சந்திரகாந்தா. அதனை நாடகமாக வெற்றிகரமாக நடத்தி வந்தார்கள். அதைத் திரைப்படமாக ஜூபிடர் பிக்சர்ஸ் சார்பில் எடுத்தபோது அதனை இயக்கியவர் துவக்க நாளின் சூப்பர் இயக்குநர் பி.கே.ராஜா சாண்டோ. இந்தப் படத்தில் சுண்டூர் இளவரசனாக பி.யூ.சின்னப்பா நடித்தார். அவருக்கு இந்தப்படம்தான் முதல் படம். அப்போது அவர் பெயர் புதுக்கோட்டை சின்னச்சாமிதான். நாடகத்தில் அவர் ஏற்றிருந்த பாத்திரம் என்பதால் அவருக்கே அந்த வாய்ப்பு கிட்டியது.
திருக்கள்ளூர் மடாதிபதி பண்டார சன்னதிகளாக வந்து தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தவர் அந்நாளின் நகைச்சுவைக் கலைஞர் காளி என். ரத்தினம். படத்தில் இந்த மடாதிபதிக்கு ஒவ்வொரு சாதியிலும் ஒரு காதலி. ஒவ்வொரு காதலியும் ஒவ்வொரு மொழி பேசினாள். அவரது காதல் - காம லீலைகளையும் அவர் செய்யும் அட்டூழியங்களையும் அம்பலப்படுத்தியது இந்த சந்திரகாந்தா. எனவே, இதனைச் ‘சவுக்கடி’ சந்திரகாந்தா என்றே ரசிகர்கள் அழைத்தார்கள்.
இன்றைக்கு 86 ஆண்டுகளுக்குமுன் 1936ல் வெளிவந்தது இந்தப் படம். ஒரே ஊரின் ஒன்றுக்கு மேற்பட்ட தியேட்டர்களில் ஒரு படம் திரையிடப்படும் வழக்கம் முதன்முதலில் இந்த சந்திரகாந்தா படத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது. காளி என். ரத்தினம், புதுக்கோட்டை சின்னச்சாமி (பி.யூ.சின்னப்பா) ஆகியோருடன் ஆயிரம் முகம் எஸ்.ராம்குமார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சரஸ்வதி, ஏ.கே.ராஜலட்சுமி, சி.பத்மாவதிபாய் போன்றோரும் நடித்தார்கள். அந்த ஆயிரம் முகம் ராம்குமார்தான் தனக்குள் நடிப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று ஒரு பேட்டியிலேயே நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சொல்லியிருக்கிறார். அப்படி அவர் ஆயிரக்கணக்கான முக பாவங்களை நடிப்பில் காட்டக்கூடியவராம். அதனாலேயே அவருக்கு அந்தப் பெயர். அவரின் நினைவாகத்தான் சிவாஜி தனது மூத்த மகனுக்கு ராம்குமார் என்றே பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதன் இயக்குநர் ராஜா சாண்டோ தனது முதல் தமிழ்ப்படமான மேனகாவில் (1935) காதல் காட்சிகளில் நாயகனையும் நாயகியையும் அந்த நாளிலேயே நெருக்கமாக நடிக்க வைத்தவர். இந்தச் சந்திரகாந்தாவில் அவர் நடிகைகளை நீச்சல் உடையில் தோன்றச் செய்தார். இப்படியான உடையை அணிய நடிகைகள் முதலில் மறுத்து வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்களாம். ராஜா சாண்டோ மிகவும் சிரமப்பட்டு அவர்களைச் சமாதானப்படுத்தி அந்த உடையில் நடிக்க வைத்தார்.
மடாதிபதி பண்டார சன்னதிகளாக நடித்த காளி என். ரத்தினம் படத்தில் ‘சுவாமிகாள் சுவாமிகாள்’ - என்று விளிக்கும் வசனத்தை ஒருவித பாவனையோடு அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். அந்தக் காட்சியிலெல்லாம் திரையரங்கில் ரசிகர்களின் மிகுந்த சிரிப்பலையும் பலத்த கைத்தட்டலும் எழுந்தவண்ணமிருந்தன. படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. அதன் தாக்கத்தால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் “சுவாமிகாள்... சுவாமிகாள்...” - எனும் கேலிச் சத்தம் எதிரொலித்ததாம். குறிப்பாக, வீதியில் போகிற பிராமணப் பூசாரிகளை நோக்கியும், பக்தர்களை நோக்கியும் இந்த சுவாமிகாள் ஒலித்தவண்ணமிருந்ததாம். இதனால் ஆத்திரமுற்றவர்கள் இந்தப் படத்துக்குத் தடை கோரியிருக்கின்றார்கள்.
பிரச்சனையின் தீவிரத்தால் ஒருகட்டத்தில் படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகளுக்குப் போலீஸ் காவல் போடவேண்டிய நிலையும் வந்திருக்கிறது. இப்படியான சலசலப்புகளை அந்த நாளிலேயே ஏற்படுத்தி தனது கலைவழிச் சமுதாயத் தொண்டினை மிக அழுத்தமாகத் தொடங்கிவைத்தது சந்திரகாந்தா என்ற இந்தத் தமிழ்த் திரைப்படம்!