tamilnadu

சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வசதி

சென்னை, டிச.5 சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை வசதி ஏற்படுத்திக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்று  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது.  இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  சுய வேலைவாய்ப்பு, தனிநபர் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை வசதி இல்லாததால் நடைமுறையில் பெரும் கடனாளியாகி நிற்கின்றன. சட்டமன்றத் தேர்தலின் போது பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்து, “சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த, எங்களிடம் எந்த நிதி ஆதாரமும் இல்லை, வரும் நாட்களில் வருமானம் கிடைக்கும் வாய்ப்பும் இல்லை.

எனவே கடனை தள்ளுபடி செய்து உதவுங்கள்” என்று கண்ணீர் மல்க முறையிட்டதை மறந்து விட முடியாது. சுய உதவிக் குழுக்களின் துயர நிலையைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு ரூபாய் 2674 கோடி கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இது மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்களை கடன் சுமையிலிருந்து விடுதலை செய்யும் கடன் தள்ளுபடி திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை வசதி ஏற்படுத்திக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்