சென்னை, ஜூன் 23- தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருதும், ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960ம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் உதயசங்கர். நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை உதயசங்கர் எழுதினார். இந்நிலையில், இவர் எழுதிய ‘‘ஆதனின் பொம்மை’’ என்ற நாவலுக்காக பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எழுத்தாளர் உதயசங்கர் கூறுகையில், ‘‘தமிழர்களின் தொன்மை, நாகரிகம் குறித்து எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்துள்ளது. கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. வரலாற்றை இளையோரிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாவல் எழுதினேன்’’ என தெரிவித்தார். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1988ம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் ராம் தங்கம். இவர் ‘காந்திராமன், ராஜவனம், ‘வெளிச்சம்’ சிறுகதை உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘‘திருக்கார்த்தியல்’’ என்ற சிறுகதைக்காக யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ல் வெளிவந்த திருக்கார்த்தியல் சிறுகதை இதுவரை 6 விருதுகளை பெற்றுள்ளது.