குழந்தைகள் நலன் பேணிக் காக்க செயல்பட்ட நிறுவனங்களுக்கு விருது
தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சாவூர் மாவட்டத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக் காக்க, திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் ரூ.4 லட்சம் செலவினத்தில் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள், அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. மேற்கண்ட விருதுகளுக்கு உரிய வழிமுறைகள், தகுதிகள் மற்றும் குறியீடுகளின்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவினர் மூலம் தேர்வு செய்யப்பட்டு, உரிய பரிந்துரைகளின்படி பெறப்படும் கருத்துருக்கள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றிற்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்படும். தகுதியான நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம், வ.உ.சி.நகர், தஞ்சாவூர்-613 007 என்ற முகவரிக்கு 10.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.