tamilnadu

img

தீபாவளி பண்டிகை சானிடைசரை தவிருங்கள் சோப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.... மருத்துவர்கள் அறிவுரை

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு முக்கிய இடம் பிடிக்கிறது. பட்டாசு கொளுத்தும்போது நாம் கவனிக்க வேண்டியது குறித்து விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

கடந்த பத்து மாதங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைவரின் வீட்டிலும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் புழக்கத்தில் இருக்கிறது.ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம். கைகளில் சானிடைசர்களை உபயோகித்து விட்டு மத்தாப்புகள், வெடிகள் போன்றவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மீறித்தொட்டால் கைகளில் தீக்காயம் உண்டாகும் நிலை வரும்.  பெரிய தீ விபத்துகள் நேரும் அபாயமும் இருக்கிறது.

மேலும், வீட்டிலும் சானிடைசரையும் வெடி மத்தாப்புகளையும் ஒன்றாக வைக்கக்கூடாது. அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருக்கும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் திரவங்களை குழந்தைகள், பிள்ளைகள் கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். கை கழுவ சோப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெடிகள் , மத்தாப்புகளை உபயோகித்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சானிடைசர்களுக்கு திரும்பலாம் அல்லது வெடிகள் வெடிக்கும் முன்பு கைகளை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டால் சருமத்தின் மேற்புறத்தில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத ஆல்கஹால் படிமம் நீக்கப்பட்டு விடும்.

தீக்காயங்களுக்கான முதலுதவி 
வெடி அல்லது மத்தாப்பின் துகள்கள் பறந்து வந்து கண்களுக்குள் விழுந்து விட்டால் என்ன செய்வது?

கட்டாயம் கண்களை கசக்குதல் கூடாது. இது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடக்கூடும். எரிச்சலைக் குறைக்க ஐஸ் கட்டிகளையோ ஐஸ் தண்ணீரையோ கண்களில் ஊற்றக்கூடாது.சாதாரண வெப்பநிலையில் இருக்கும் நீரில் கண்களை நன்றாக கழுவ வேண்டும். சுத்தமான துணியைக் கொண்டு கண்களை மூடி விட வேண்டும் பாதிக்கப்பட்டவரை ஆசுவாசப்படுத்தி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்கள் நல சிறப்பு நிபுணரை சந்திக்க வேண்டும்.
கண்களில் ஏற்படும் காயங்கள் மிகவும் ஆபத்தானவை. எனவே எவ்வளவு விரைவில் கண்கள் நல சிறப்பு மருத்துவரை காண்கிறோமோ அத்தனை நல்லது. மருந்தகங்களில் சென்று சொட்டு மருந்துகளை வாங்கிப் போட்டு நேரத்தை கடத்தினால் பல நேரங்களில் ஒரு பக்க பார்வையையே இழக்க வேண்டியிருக்கும்.

செய்ய வேண்டியது என்ன?
புண்கள்,மத்தாப்பு கங்கை தெரியாமல் தொடுவதால் நேரலாம் அல்லது மத்தாப்பில் இருந்து வரும் சிதறல்கள் படுவதால் நேரலாம். இத்தகைய புண்கள், தோலில் சிறு கொப்புளங்களை உருவாக்கும். குறைவான அளவில் இருக்கும்.
குழாயில் இருந்து அல்லது குவளையில் இருந்து சாதாரண வெப்பநிலையில் இருக்கும் நீரை எடுத்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தொடர்ந்து அந்த காயம் மேல் ஊற்ற வேண்டும்.சில்வர் சல்ஃபாடயசின் எனும் களிம்பை உடனே அருகில் இருக்கும் மருந்துக்கடையில் வாங்கி அந்த காயம் ஏற்பட்ட பகுதியில் தடவ வேண்டும். வேறு எண்ணெய்களையோ உணவுப் பதார்த்தங்களையோ காயத்தில் தடவுதல் கூடாது. அது கிருமித்தொற்றை ஏற்படுத்தி விடும். காயத்தை மூடுவதற்கு புண்ணோடு எளிதில் ஒட்டாத நெகிழியால் ஆன துண்டை உபயோகிக்கலாம்.  துணியால் ஆன பேண்டெய்டுகளை தவிர்க்க வேண்டும். அருகில் இருக்கும் மருத்துவரை சந்திக்க வேண்டும். டெட்னஸ் தடுப்பூசி போட்டு அவர் பரிந்துரைக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து எடுக்க காயம் தொற்றின்றி குணமாகும்.