சேலம், ஜூலை 14- வாலிபர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமியை தாக்கிய உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சேலத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமியை தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்கும் சமூக விரோத கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்து, வாலிபர் சங்கத்தினர் மாநிலம் முழுவம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரியசாமியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சேலம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனையை காவல்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த சம்பவத்தில் லாட்டரி விற்பனையாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சம்பவத்தை மூடி மறைக்கும் விதமாகவும், குற்றவாளிகளை பாதுகாக்கும் விதமாக வாலிபர் சங்க நிர்வாகி மீது குற்றச்சாட்டு கூறும் விதமாக காவல்துறை செயல்பட்டால் அது ஏற்புடையதாக இருக்காது. ஒட்டுமொத்த காவல்துறை மீது சந்தேகப்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது. வாலிபர் சங்க தலைவர் மீதான தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யவில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடுவோம் என்றார்.