கலைஞர் பிறந்தநாள்: உதவிகள் வழங்கல்
பாபநாசம், ஜுன் 3- தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க முன்னாள் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு சர்பத், ரோஸ்மில்க், நுங்கு ஆகியன வழங்கப்பட்டது. இதில் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் பாவை அனிபா, திமுக மாவட்ட துணைச் செயலர் துரை முருகன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வ முத்துக்குமரன், துணை அமைப்பாளர் கார்த்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை, ஜுன் 3- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம், ராங்கியம் வருவாய் கிராமத்தில், ஜுன் 11 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் “மக்கள் தொடர்பு முகாம்” நடைபெறவுள்ளது. இம்முகாமை முன்னிட்டு ஜுன் 4 அன்று முதல், பொதுமக்களிடமிருந்து முன்மனுக்கள், ராங்கியம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டிடத்தில் பெறவுள்ளதால், தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையம்: சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜுன் 3-
புதுக்கோட்டை, விராலிமலை மற்றும் கீரனூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் 19.05.2025 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்திருப்பதாவது:
பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.
விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க், ஜீ-பே வாயிலாக செலுத்தலாம். மேலும், பயிற்சியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750 வழங்கப்படும். அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு, உணவுடன் கூடிய தங்கும் இலவச விடுதி வசதி உண்டு. தமிழ்நாடு அரசு டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இலவச குறுகிய கால பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி முடித்த பின், வளாக நேர்காணல் மூலம் நூறு சதவீதம் வேலை பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண் 04322-221584, 94990 55733. விராலிமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய அலைபேசி எண் 8667426792. புதுக்கோட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 04322-299382. கீரனூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய அலைபேசி எண் 9443852306. ஆகியவற்றில் தொடர்பு கெள்ளலாம் என்றார்.