திண்டுக்கல் மருத்துவரிடம் 20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துரை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீசார் டிசம்பர் 1-ஆம் தேதி கைது செய்தனர். அங்கித் திவாரியின் அலுவலக அறை மற்றும் மடிக் கணினியில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
ஏற்கனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அங்கித் திவாரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மடிக் கணினியில் இருந்து லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள 75 நபர்களின் பெயர் பட்டியல் அடங்கிய விவரம் சிக்கி உள்ளது; அங்கித் திவாரியை வாக்கு மூலத்தில் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. எனவே அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில், அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.