tamilnadu

img

வானில் செங்கொடி - ஆனாவூர் நாகப்பன் சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் திருவனந்தபுரம்

சிபிஐ(எம்) 23வது அகில இந்திய மாநாட்டிற்கு முன்னோடியாக திருவனந்தபுரம் மாவட்ட மாநாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் போராட்ட பூமியான பாறசாலை மண்ணில் இன்று துவங்குகிறது. கடந்த மாவட்ட மாநாட்டிற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக நின்ற மக்கள் ஒரே மனதுடன் நடைபெறவுள்ள மாநாட்டைத் தங்கள் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டுள்ளார்கள். இயக்கமாகவும் அரசியல் ரீதியாகவும் மாவட்டத்தில் நமது இயக்கத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமைக்கு ஒளிவீசச் செய்யும் முன்னேற்றப் பாதையில் நம்மால் பயணிக்க முடிந்தது. அனைத்துத் துறைகளிலும் மக்களுக்காக செயல்படுவதற்கும் அவர்களது பிரச்சனைகத் தீர்ப்பதற்கு நம்மால் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது என்ற நம்பிக்கையுடன் கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் வெள்ளிக்கிழமை பாறசாலை தோழர் காட்டாக்கடை சசி நகரில் (ஜெயமகேஷ் ஆடிட்டோரியம்) நடைபெறும் மாநாட்டில் ஒன்று கூடுகிறார்கள்.

கோவிட் மற்றும் பெருமழை வெள்ளப் பிரளயங்களும் ஏற்படுத்திய பெருந்துயரங்கள் நிறைந்த காலத்தில் மக்களுடன் இணைந்து நடத்திய மீட்புப் பணிகள் மற்றும் செயல்பாடுகளால் அதிகமான மக்களின் பாதுகாவலனாக நமது கட்சியை மாற்றுவதற்கு நம்மால் இயன்றது. கடலோர, மலையோர மற்றும் கிராம-நகர பிரதேசங்களிலெல்லாம் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த முடிந்தது. இனியும் அதிகமானவர்களை செங்கொடியின்கீழ் அணிதிரட்டுவதற்கு நாம் கடும் பணி ஆற்றிடவேண்டும். நவகேரள உருவாக்கத்தில் சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கும், புதிய வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கும், இடதுசாரி அரசின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் கட்சியை கட்சி மேலும் மாபெரும் இயக்கமாக மாற்றுவதற்கான எதிர்காலக் கடமைகள் குறித்த விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் மாவட்ட மாநாட்டில் முக்கிய விசயங்களாக இருக்கும். 

முன்னேற்றப்பாதையில்

நான்கு ஆண்டுகளில் 14 லோக்கல் கமிட்டிகளும் 316 கிளைகளும் புதிதாக அமைக்கப்பட்டன. தற்போது 19 ஏரியா கமிட்டிகளும் 181 லோக்கல் கமிட்டிகளும் 2746 கிளைகளும் உள்ளன. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 4012 அதிகரித்து மொத்தம் 41355 ஆனது. வர்க்க-வெகுஜன இயக்க உறுப்பினர்கள் எண்ணிக்கையும் நான்கு ஆண்டுகளில் பெருமளவில் உயர்ந்துள்ளது.

149 பெண் கிளை செயலாளர்கள்

மாவட்டத்தில் தற்போது 149 கிளைகளைப் பெண் செயலாளர்கள் வழிநடத்துகிறார்கள் என்பது மாற்றத்தின் அடையாளமாகும்.  கட்சி உறுப்பினர்களிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் 7342 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மொத்த கட்சி உறுப்பினர்களில் 17.33 சதவீதம் பெண்களாவர்.

தேர்தலிகளில் மாபெரும் முன்னேற்றம்

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாவட்ட வாக்காளர்கள் இடது ஜனநாயக முன்னணிக்கு மாபெ ரும் வெற்றியைத் தேடித் தந்தார்கள்.மொத்தமுள்ள 14 சட்டமன்ற தொகுதிகளில் 13ல் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 2016ஆம் ஆண்டு 10 தொகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிரு ந்தார்கள். பின்பு இடைத்தேர்தல் நடைபெற்றபோது வட்டியூர்காவு தொகுதியை வரலாற்று பெரும்பான்மையுடன் இடது ஜனநாயக முன்னணி தன்வசமாக்கியது. நேமம் தொகுதியில் பாஜக துவங்கிய கணக்கை கடந்த தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி முடித்துவைத்தது. யுடிஎஃப் கூட்டணியின் கோட்டை எனக் கருதப்பட்ட அருவிக்கரை தொகுதியும் இந்தமுறை எல்டிஎஃப் வசமானது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் யுடிஎஃப் மற்றும் பாஜக-வை வீழ்த்தி எல்டிஎஃப் வெற்றிக் கொடி நாட்டியது. 2015ல் 43 வார்டுகளில் வென்று எல்டிஎஃப் மாநகராட்சியைத் தக்கவைத்ததென்றால் கடந்த முறை 53 வார்டுகளில் வெற்றி பெற்றது. சிபிஐ(எம்) கவுன்சிலர்களின் எண்ணிக்கை 34லிருந்து 39ஆக அதிகரித்தது. உள்ளாட்சித் தேர்தலிம் மாவட்டம் முழுவதும் எல்டிஎஃப்பெருமைமிகு வெற்றியைப் பெற்றது. வட்டாரப் பஞ்சாயத்துகளில் 11ல் 10ஐ எல்டிஎஃப் கைப்பற்றியது. மாவட்டத்திலுள்ள நான்கு நகராட்சிகளும், 73 கிராமப் பஞ்சாயத்துகளில் 53லும் எல்டிஎஃப் வென்றது. 21 வார்டுகள் கூடுதலாகக் கிடைத்தது. மாவட்டப் பஞ்சாயத்துகளில் 26ல் 20 டிவிசனும் எல்டிஎஃப் வசமானது. யுடிஎஃப்-பை விட எல்எஃப்-பிற்கு 72,440 ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்தது.

அதிவேக வளர்ச்சி

பினராயி விஜயனின் தலைமையிலான முதல் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் காலத்தில் ஈடு இணையற்ற வளர்ச்சியை தலைநகர மாவட்டம் அடைந்தது. இரண்டாவது பினராயி விஜயன் அரசும் மாவட்ட வளர்ச்சி முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி, மலையோர நெடுஞ்சாலை, மீன்பிடித் தொழிலாளர்களுக்கு தொகுப்பு வீடுகள், லைஃப் திட்டத்தில் ஏழைகள் அனைவருக்கும் வீடு, சுயதொழில் திட்டங்கள், கிராமப் புறங்களில் நவீன சாலைகள், அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் அதிநவீனக் கட்டிடங்கள் என மாவட்டத்தின் வளர்ச்சி முன்னேற்ற வரலாற்றில் கடந்த நான்கு ஆண்டுகள் பொன்னிறகுகளால் எழுதப்பட்டது.