வம்புள்ள அண்ணாமலை அவர் களுக்கு... வணக்கம் அன்புள்ள என்று ஆரம்பிக்கத்தான் ஆசை. ஆனால் பால்வாடி பிள்ளைகளிடம் கூட பகைமை கொண்டு மல்லுக்கட்டும் உங்களை அவ்வாறு அழைக்கத் தோன்றவில்லை. மன்னிக்கவும். (இது உங்கள் வகையறாவுக்கு பிடித்த வார்த்தைதானே) தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி களை குடியரசு தின அணிவகுப்பில் உங்கள் கட்சியின் ஒன்றிய ஆட்சி அனுமதிக்க மறுத்ததை எப்படியாவது நியாயப்படுத்தி விடவேண்டு மென்ற நிர்ப்பந்தம் உங்களுக்கு. அதிலும் ஒன்றிய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது உங்கள் ஆத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடு இருப்பதை கருத்தில் கொண்டுதான் அலங்கார ஊர்தி களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்கிறீர்கள். பாஜக ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளில் மட்டும் கொரோ னாவை அழிக்கக்கூடிய சூட்சுமம் இடம்பெற்றி ருக்கிறதா? இதை தெளிவுபடுத்தினால் மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அல்லவா?
இத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. எடிட் செய்யப்பட்ட வரலாற்றை தவிர்க்குமாறு தமிழகத்திற்கு பாடம் நடத்தியிருக்கிறீர்கள். எடிட்டிங் வித்தையில் உங்களை அடிக்க ஆள் இல்லை. சென்னை வெள்ளத்தின்போது முழங்கால் அளவு தண்ணீரில் படகு விட்டு, அந்த காட்சியை அழகாக எடிட் செய்த லட்ச ணத்தை பார்த்து டைட்டானிக் பட எடிட்டரே அசந்து போனாராம். வ.உ.சிதம்பரனார் வணிகர் என்பதால் நிராகரித்துவிட்டோம் என்கிறது ஒன்றிய அரசு அமைத்த குழு. அவர் கடலில் சுதேசி கப்பல் ஓட்டியவர். ஒரு வேளை முழங்கால் அளவு தண்ணீரில் படகு விட்டு விளையாடிய உங்கள் படத்தையும், எஸ்.ஆர்.சேகர் படத்தை யும் வைத்திருந்தால் அந்தக்குழு அனு மதித்திருக்குமோ என்னவோ? தமிழக அலங்கார ஊர்தி தகுதி அடிப்படை யில்தான் தேர்வு பெறவில்லை என்கிறீர்கள். அலங்கார ஊர்திகள் இடம் பெறும் தகுதியை தீர்மானிக்கவும், நீட் தேர்வு ஏதாவது வைத்திருக்கிறீர்களா? சுதேசி கப்பலோட்டிய வஉசி படத்திற்கு பதிலாக, அதானி ஆக்கிர மித்த துறைமுகத்தின் படத்தையும், அம்பானி களவாடிய விமான நிலையங்களின் படத்தை யும் வைத்திருந்தால் தகுதியுடையது என்று ஏற்றுக் கொண்டிருப்பீர்களா?
பாரதியார் கண்ட கனவு அகண்ட பாரதம் என்று அந்த மகாகவியையும் உங்கள் அஜண்டா அண்டாவுக்குள் தூக்கி போட்டு இருக்கிறீர்கள். நல்ல வேளை அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்தார் என்று கூறி, அவரது முண்டாசை கழற்றி விட்டு அரை டிராயர் போடாமல் விட்டீர்கள். “நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமு மின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி” என்று உங்களைப் போன்றவர்களை நினைத்துதான் பாரதி அன்றைக்கே பாடியிருக்கிறார். “சாதி இரண் டொழிய வேறில்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்” என்றார் பாரதி. ஆனால் மனுவின் மறுபதிப்பு நீங்கள். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார் அவர். ஆனால் நீங்களோ சமஸ்கிருத, இந்தி திணிப்பிலேயே குறியாய் இருக்கிறீர்கள். தமிழை தொழுது படித்திட வேண்டுமென்றார் மகாகவி. ஆனால் நீங்களோ தமிழ், தமிழ்நாடு என்றாலே அழுகாச்சி ஆட்டம் ஆடுகிறீர்கள்.
வீரமங்கை வேலு நாச்சியாரை தெரியாது என்று நிராகரித்து விட்டார்களாம். அவரை உங்கள் கட்சியினருக்கு தெரியவைக்க நீங்கள் ஏதாவது முயற்சி செய்ததுண்டா? இல்லை. ஊசிப்போன சரக்கான கோல்வால்க்கரையும் சாவர்க்கரையும் தமிழர்கள் தலையில் கட்டிவிட அல்லவா முயல்கிறீர்கள். வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த வேலுநாச்சியார் சேதுநாட்டு கோயில்களில் செம்மை மிகு தமிழ் இருக்க, சமஸ்கிருதம் எதற்கு என கேள்வி எழுப்பியவர். சேதுநாட்டில் சாதியென்றோ, குலமென்றோ வரையறுக்கும் கொடுமையை வேரறுபோம் என்றார் அவர். அந்நியர்களுக்கு எதிராக ஹைதர் அலி, திப்பு சுல்தான் துணைகொண்டு படை நடத்தியவர். இந்த தகவல்களை அறிந்துதான் அவரையும் நிராகரித்திருக்கிறார்களா? அந்நியர்களிடம் மண்டியிட்டு, மானங் கெட்டு உயிர்ப்பிச்சை கேட்காத மாவீரர்கள் மருது சகோதரர்கள். அந்த மாவீரர்களை ‘தூக்கிலிடப்பட்டு கொன்ற பிறகும் அங்கங் களை சிதைத்து ஊர் ஊராய் புதைத்தது ஏகாதி பத்திய அரசு. அவருடைய சந்ததிகளைக்கூட தேடித் தேடி நாடு கடத்தியது. இந்த வரலாறு உங்களுக்கு உவப்பாய் இருக்க வாய்ப்பில்லைதான். கேரள அரசு அனுப்பிய அலங்கார ஊர்தி யில் மாயாவாதம் பேசிய ஆதிசங்கரரை அமர வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது ஒன்றிய அரசு. ஆனால் மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் நன்றாக இருக்க வேண்டும் என்று போதித்த மாபெரும் சமூக சீர்திருத்த செம்மல் ஸ்ரீநாராயண குருவின் படத்தை வைத்திருக்கிறது பினராயி விஜயன் அரசு. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த வாகனத்தையும் நிராகரித்துவிட்டார்கள். எல்லாம் மாயை என்று பேசியவருக்கு அலங்கார ஊர்தி மட்டும் மாயை ஆகாதா? ‘ரத்தம் கொடு, விடுதலை தருகிறேன்’ என்று இளைஞர்களுக்கு அழைப்பு விட்ட மகத்தான தலைவர் நேதாஜி. மன்னிப்பு கடிதம் தருகிறேன். விட்டுவிடுங்கள் என்று கேட்காததால் அவருக்கும் தகுதியில்லை போல. தேசியகீதம் இயற்றிய ரவீந்திரநாத தாகூரை கூட உங்களுக்கு பிடிக்கவில்லை. உங்கள் மனதுக்குள் இருக்கும் தேசியகீதம் வேறு அல்லவா?
வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு இப்போதும் கோவை சிறையில் இருக்கிறது. உங்களுக்கெல்லாம் அதை பார்த்தாலே வியர்த்துவிடும். அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடமிருந்து உத்வேகம் பெற்றார் என்று அவரையும், உங்கள் குண்டாவுக்குள் அடைக்க முயல்கிறீர்கள். தூத்துக்குடியில் வ.உ.சியும், சிவாவும், தொழிலாளர்களை திரட்டி வேலைநிறுத்தம் செய்த தொழிற்சங்க முன்னோடிகள். அதனால்தான் ஆங்கி லேயர்களுக்கு அவர்கள் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இது தெரியுமா உங்களுக்கு? வ.உ.சி திருக்குறளைத்தான் நேசித்தார். மணக்குடவர் உரையை பதிப்பித்தார். மனு சாஸ்திரத்தை அல்ல மிஸ்டர் அண்ணாமலை. வரலாற்றை எடிட் செய்வது என்றால் எப்படி என உங்கள் கூட்டத்தினரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். சிந்துசமவெளியில் கிடைத்த காளை மாட்டின் சின்னத்தை குதிரை யாக்கிய வித்தை நரியை பரியாக்கிய சிவன் கூட அறியாதது. வரலாறு என்னை விடுதலை செய்யும் என்று நீதிமன்றத்தில் முழங்கினார் புரட்சி யாளர் பிடல் காஸ்ட்ரோ. ஆனால் உங்களை ஒருபோதும் வரலாறு மன்னிக்காது அண்ணாமலை அவர்களே.