தனித்துவத்தை கொண்டாடிக் கொண்டே, பன்மைத்துவத்தை மதிக்கின்ற இந்திய மன நிலையினை, மடைமாற்றிட பொய்மான் வேடமிடும் பிரிவினை சக்திகளை சிறப்பான திரைக்கதை மூலம் அச்சுஅசலாக அடையாளம் காட்டுகின்ற திரைப்படம் தான் ரண்டு(Randu) என்ற மலையாளப்படம். அதோடு மட்டுமின்றி, அந்த தீயசக்திகளை தனிமைப்படுத்திட சரியான தீர்வும் சொல்லுகின்ற சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம். சமுகத்தில் நடக்கின்ற சாதாரண நிகழ்வு களை தனக்கு சாதகமாக்கி, பொய்களின் துணை யுடன், மத வெறுப்பை உமிழ்ந்து, பிரிவினையை நிரந்தரமாக்கி அரசியல் ஆதாயம் தேடும் சக்திகளை தைரியமாக பேசுபொருளாக்கி யுள்ளது இப்படம். Article 15(1)ன்படி, “இந்திய அரசு, மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து மட்டுமே எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக பாகுபாடு காட்டக் கூடாது” என்கிறது.இந்த சட்ட விவரணை யுடன் படம் துவங்குகிறது.
இந்து, முஸ்லீம் மக்கள் சரிபாதியாக வாழும் மலையகக் கிராமம். வாவா, படித்த ஆட்டோ ஓட்டும் இளைஞன். வயதான பெற்றோர்கள் மற்றும் கல்யாண வயதில் தங்கை இவனது பராமரிப்பில் உள்ளனர். பக்கத்தில் முஸ்லிம் வீடு. வருடக்கணக்கில் மதபேதமின்றி இணக்கமாக வாழ்பவர்கள். வாவாவுக்கு நான்கு நெருங்கிய நண்பர் கள். மூவர் இந்துக்கள் மற்றவர் ஷாஜகான் என்ற முஸ்லீம். வாவா ஊரிலுள்ள கிரிக்கெட் குழுவிலும், கபடி குழுவிலும் விளையாடுபவன். இவ்விரு குழுக்களில் உள்ள மாற்று சமுகத்தின ரிடமும் பேதமின்றி பழகுபவன். மேலும் போட்டி நடைபெறும் சமயத்தில் ஆட்டோ மூலம் விளம் பரம் செய்வது இவனுக்கு மிகவும் பிடிக்கும். ஊரின் முக்கத்தில் எப்பொழுதும் வேலை யில்லாத இளைஞர்கள் கூட்டம் ஒன்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பதும், கைபேசியில் எப்போதும் விளையாடிக் கொண்டும் இருப்பது வாடிக்கையான காட்சியாகும். அவசரத்திற்கு மனித உயிரைக்காப்பாற்ற இரத்தம் கேட்டால் கூட, “விளையாடிக் கொண்டிருக்கிறோம்” என்றப் பதிலை மட்டுமே கூறும், உணர்ச்சிவசப்படாத கூட்டம்.
கேஜிபி என்ற இந்து அமைப்பின் அவ்வூர் கிளை கமிட்டி தலைவர் நலினன்.மதவெறி யன், மதக்கலவரத்தைத் தூண்ட சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன். மதக்கலவரத்தைஎதிர்கொள்ள,முஸ்லீம் இளைஞர் படையை தயாராக வைத்துள்ளது உள்ளூர் ஜமாத். மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கமே ஊரின் மையப்பகுதி. இங்கு தான் அனைத்துக் கட்சி கொடிகளும் பறக்கின்றன. ஒரு நாள் இரவில் அவ்வழியே செல்லும் தமிழ்நாட்டு லாரி ஓட்டுனர் கொடிக்கம்பங்கள் அருகே வண்டியை நிறுத்திவிட்டு, கிளீனருடன் சேர்ந்து வண்டிக்குள்ளேயே மது அருந்துகின்ற னர். பின் கிளீனர் போதையில் லாரிக்கேபின் ஓரத்தில் பறக்கும் பல கட்சிக்கொடிகளில், இவனது கையெட்டும் தூரத்தில் உள்ள முஸ்லீம் கட்சிக்கொடியினை சாதா துணியாக நினைத்து கிழித்து, கேபினை சுத்தம் செய்துவிட்டு சாதாரண மாக சென்று விடுகின்றனர். ஜமாத் கூடுகிறது.எதிர்மதத்தை சேர்ந்த விஷமிகளால் கொடி கிழித்தெறியப்பட்டதாகச் சொல்லி ஜமாத்தார் முஸ்லீம் சமூகத்தைக் கொதிப்பேற்றுகிறார்கள்.
இந்நிலையில் அவ்வூரிலுள்ள இந்து கோயில் சுற்றுச்சுவரோரம், ஆட்டோவில் அமர்ந்து சிலர் மதுவருந்துகிறார்கள். அப்போது தின்று மிஞ்சிய எலும்புத்துண்டுகளை பேப்பரில் சுற்றி போதையில் கோவிலுக்குள் சாதாரண மாக எறிந்துவிட்டு போகிறார்கள். கோழி எலும்புப்பொட்டலத்தைப் பார்த்த இந்து அமைப்பினர் அதை கோவிலை தகர்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனப்புரளி கிளப்புகின்றனர். புகாரின் பேரில் காவல் துறையினர் மோப்பநாயுடன் வந்து உண்மை யைக் கண்டறிந்து இந்து அமைப்பினரைக் கண்டிக்கிறது. அடுத்தடுத்த விரும்பத்தகாத நிகழ்வுகளால் ஊர் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. மதநல்லிணக் கத்திற்காக அனைத்து சமயத்தவர்களும் கூடி, மதநல்லிணக்கத்தைப் போதிக்கிறார்கள்.கோவில், மசூதி மற்றும் கட்சி கொடிகளுக்கும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு செய்கின்றனர்.மதக்கலவர நிலை தணிந்து இயல்புநிலை திரும்பு கிறது. ஆனால் இரண்டு மதங்களையும் சேர்ந்த மதத்துவேசிகள் கறுவியவாறே இருக்கிறார்கள்.
தனியார் மருத்துவமனை செவிலியர் மெர்சி. இவர் தினமும் வாவாவின் ஆட்டோவில் போவது வழக்கம். இவர் கணவர் கனடாவில் வேலை செய்கிறார். வயோதிகத் தாயுடன் வாழ்பவள். வாவா, மெர்சியிடம் சகோதரனைப் போல் நடந்துகொள்கிறான். ஆனால் மெர்சிக்கு அவன் மேல் ஈர்ப்பு. வாவாவிடம் சபலத்தைத் தூண்டு வதில் மெர்சி வெற்றி பெறுகிறாள். சபலத்துக்கு ஆட்பட்ட வாவா, விடி காலை மசூதிக்கு எதிரே யுள்ள அவள் வீட்டுக்குப் போகிறான். குற்ற உணர்வு, படபடப்பு காரணமாக இயற்கை அழைப்பு வர அவசரத்தில் எதிரேயுள்ள மசூதிக் கழிவறைக்குச் செல்கிறான். இதைப் பார்த்துவிட்ட மசூதி ஓதுவார் இவன்மீதான காழ்ப்புணர்வில் மசூதியை நாசம் செய்ய வந்ததாகக் குற்றம் சாட்டுகிறார். ஜமாத் அதை நம்பி நடவடிக்கை யில் இறங்குகிறது. வாவாவைக் காப்பாற்ற அவன் நண்பன் ஷாஜஹானின் முயற்சிகள் தோல்வியுறுகின்றன. வாவா சிறையில் அடைக்கப்படுகிறான். இந்தச்சூழ்நிலையை இந்து அமைப்பின் ஏரியாக்கிளை தலைவன் நலினன் சாதுர்யமாகப் பயன்படுத்துகிறான். வாவாவை அமைப்பின் துணையுடன் பிணையில் எடுக்கிறான்.வாவா வை இந்து மத பாதுகாவலன் என்று பரப்புரை செய்கிறார்கள். மதவெறி தூண்டப்படுகிறது. மதமுத்திரை குத்தப்பட்ட வாவாவின் ஆட்டோவில் முஸ்லீம் மதத்தினர் ஏறப்பயப்படு கின்றனர். பக்கத்து வீட்டு முஸ்லீம் குடும்பத்தி னர் இவன் குடும்பத்தை அடியோடு புறக்கணிக்மதமுத்திரை குத்தப்பட்ட வாவாவின் ஆட்டோவில் முஸ்லீம் மதத்தினர் ஏறப்பயப்படு கின்றனர். பக்கத்து வீட்டு முஸ்லீம் குடும்பத்தி னர் இவன் குடும்பத்தை அடியோடு புறக்கணிக் கின்றனர். ஷாஜஹானின் தாயோ,வாவாவை தனது வீட்டிற்கு வரவேண்டாம் என்றும், வந்தால் ஜமாத்தால் தாங்கள் ஒதுக்கப்படுவோம் என்று கெஞ்சுகிறாள். இவையெல்லாம் வாவாவை பெரும் மனச்சஞ்சலத்திற்கு உள்ளாக்குகிறது.
இதனிடையே, இந்து அமைப்பான கேஜிபி மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி வாவாவை ஹீரோ ஆக்க முயல்கிறது. ஆனால் இதனை விரும்பாத வாவா, கூட்டத்திலே, அமைப்பின் விரும்பத்தகாதச் செயல்பாட்டை கண்டித்து பேசுகிறான். தான் சாதாரணமானவன் என்றும் மசூதியை தனது கோயில் போல நினைத்து தான் கழிப்பறையை பயன்படுத்த சென்றதாகக் கூறுகிறான்.அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்கிறான்.மேலும் தான் தீவிரவாதியோ,போராளியோ அல்ல என்றும்,இப்பிரச்னையால் தடைபட்ட தங்கையின் கல்யாணத்தை மீண்டும் நடத்தவேண்டும் என்றும்,எனவே தன்னை விட்டுவிடும்படி கூறுகிறான்.ஆனால் அமைப்பின் மாவட்டத் தலைவர் மோகன்ஜி,வாவாவின் பேச்சின் ஊடுபொருளை லாவகமாக அமைப்பிற்க்கு சாதகமாக பேசி திசைதிருப்புகிறான்.அவனைத் தியாகி அளவுக்கு உயர்த்திப் பேசுகிறான். இதனால் மன உளைச்சலுக்குள்ளான வாவா, இந்து மத அமைப்பின் பொய்யான மதவெறிப் பரப்புரையை முடிவுக்குக்கொண்டுவரத் தீர்மானிக் கிறான். நண்பர்களிடம் நடந்தவற்றை உள்ளபடிக் கூறுகிறான். ஊர் முக்கத்தில்,ஷாஜஹான் மற்றும் ஏனைய நண்பர்களின் ஒத்துழைப்போடு நடந்த உண்மை நிகழ்வுகளை மைக்கில் பேசுகிறான். இதனை அங்குள்ள இரு மதங்களின் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கேட்கிறார்கள். தங்கள் மதவாத அரசியல் தோலுரிக்கப்படுவதைப் பொறுக்கவியலாமல் வாவாவைத் தாக்குகிறார்கள்.
அப்போது யாரும் எதிர்பாராவண்ணம்,எந்தப்பிரச்சினையிலும் தலையிடாமல் அரட்டையிலும் செல்போனிலும் பொழுதுபோக்கும் வேலையில்லா இளைஞர் கூட்டம் வெறுப்பரசியலை இனங்கண்டு பிரச்னையைக் கையில் எடுக்கிறது. இந்து இளை ஞர்கள் இந்துமத அமைப்பினரையும், முஸ்லிம் இளைஞர்கள் முஸ்லீம் அமைப்பினரையும் அடித்து விரட்டுகிறார்கள். அடுத்த காட்சியில், வாவா மற்றும் ஷாஜஹானும் ஒரே பைக்கில் சந்தோசமாக பேசிக்கொண்டு வரும் காட்சிவழியாக இரண்டுபட்ட ஊர் மீண்டும் ஒன்றான தாக படம் முடிகிறது. இளைஞர்கள் சமூக பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை. அநீதியை எதிர்த்து போராட தயக்கம் காட்டுகிறார்கள், என்றெல்லாம் ஒரு கருத்து சமூகத்தில் உலவுகிறது. ஆனால் சமுகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகவே இறுதிகாட்சி அமைந்துள்ளது. இவர்களின் சக்தி மற்றும் எழுச்சி சமூகப்பிரச்சனைகளின் தீர்வுக்கு அவசியமானது என்பதையும் இக்காட்சி உணர்த்துகிறது.
கேஜிபியின் நோக்கத்துக்கு முரணாக வாவா பேசுவதை கேட்டு திடுக்கிடும் மோகன்ஜி, வாவாவின் பேச்சைத் திசைதிருப்புவான். “வாவாவின் கடந்த கால அமைப்பின் செயல்பாடுகளை கேள்விப்பட்டதாகவும்,தைரியமானவன், வேத கலாச்சாரம் அவனது இரத்த நாளங்களில் ஒடுவதாகவும், இயக்கத்திற்க்காக பல முள்பாதையை ஜாக்கிரதையாக கடந்து வந்தவன் என்றும்,இந்த அமைப்பின் ஒளிவிளக்கு என்றும்,எதிர்கால நம்பிக்கை என்றும் பொய்யான தகவல்களை கூட்டத்தில் கூச்சநாச்சமின்றி கூறுவான்.வாவாவை பிற மதத்தினர் அழித்தால்,ஆயிரம் வாவாக்கள் இவனது இரத்ததிலிருந்து உருவாவர்கள் என்றும்”வந்தே மாதரம்..கேஜிபி வாழ்க!” என்று பொய்களை அவிழ்ப்பான். இக்காட்சிகள்(sequences)மிகச்சாதாரண மனிதனை எவ்வாறு மூளைச்சலவை செய்து மதவெறி யனாக்கும் என்பதை துல்லியமாக உணர்த்துகிறது. “எச்சில் துப்பி வம்பு இழுப்பது”என்ற சொலவடை நம்மூரில் உண்டு. அதற்கு சாட்சியாக ஓர் காட்சியில், கேஜிபி உள்ளூர் அலுவலகத்தில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்பதை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.இதில் இந்தியா தோற்றுவிடும். சந்திரன் வெறுப்படைந்து முச்சந்திக்கு வருவான். அங்கு செல்பேசியில் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் ஷாஜஹானிடம், “பாகிஸ்தான் ஜெயித்ததால் சந்தோசத்தில் சிரிக்கிறாயா?”என வம்புக்கிழுத்து அடிப்பான்.பெருபான்மையினர் என்ற மமதையில்,சிறுபான்மையினரை எகத்தாளமாக மிரட்டுகிற உளவியலை இதைவிட சிறப்பாக காட்சிபடுத்தமுடியாது.
பிரிவினை சக்திகள் தங்களது இருப்பைத் தக்க வைக்க, ஒன்றுமில்லாத பிரச்சனையும் கையில் எடுத்து, ஊதி பெரிதாக்கி, மதவெறிக்கு கூசாமல் பயன்படுத்து வார்கள் என்பதைப் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதறுகிற வகையில் பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் கூட்டத்தில் மோகன்ஜி,”இந்நாட்டில் மற்றவர்களுக்கு உரிமை உள்ளது என்பதற்கான அர்த்தம் என்னவென்றால், நீ என்னை விட அதிகமான உரிமைகள் கொண்டவன் அல்ல, என்பது தான்” எனப்பேசுவார்.இது ஆர்டிகிள்15(1)குறித்து மனதில் யோசிக்கவைக்கிறது. டீக்கடையில் மாட்டுக்கறி சாப்பிடும் ஓதுவாரும், சந்திரனும், ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நட வடிக்கையையும், மாட்டுக்கறி அரசியலையும் எதிர்த்தும் ஆதரித்தும் பேசுவார்கள். இதேபோல் பிரிதொரு காட்சியில் இதே சந்திரனும், ஷாஜஹானும் அதானி, அம்பானி பற்றியும் பேசி மோதிக்கொள்வார்கள்.இந்திய சினிமாவில் தற்கால வெறுப்பு அரசியலை பகிரங்கமாகவும்,துணிவாகவும் பேசிய ஒருசில படங்களில் இப்படமும் நிச்சயம் இடம்பெறும். சுஜித்லால் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் நடுவே சில காட்சிகள் படத்திற்கு வேகத்தடையாக உள்ளது. கதாநாயகன் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் இயல்பாக நடித்துள்ளார். வெகுளியான அவரது முகத்தில் பலவித சலனங்களை எழுப்பி நடிப்பில் வியக்க வைக்கிறார். இசையும் உரிய பங்களித்திருக் கிறது. “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு அல்ல ஒன்றே” என்ற மதஒற்றுமையை விவரிக்கும் பாடல், பின்னனி இசை, மான்டேஜ் பாணியிலான மதநல்லி ணக்கம் குறித்த காட்சிஅமைப்புகள், மனதை வருடக்கூடியதாகும்.இப்படத்தை பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கி. ஜெயபாலன் புதுக்கோட்டை.