tamilnadu

img

விதொச மாநாட்டு அரங்கில் ஆர்வத்தை தூண்டிய கண்காட்சி

புதுக்கோட்டை, பிப்.6- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது.  இதனையொட்டி மாநாட்டு அரங்கங்களில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கொடி இயக்கத்தில் களமாடிய முன்னோடித் தலைவர்கள், தியாகிகள் போராட்டக்களத்தில் சந்தித்த பல்வேறு நிகழ்வுகளைத் தொகுத்து கண்கவரும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் கீழத்தஞ்சையில் பண்ணை அடிமை முறைகளுக்கு எதிராக நடைபெற்ற வீரம்செறிந்த போராட்டம், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழகம் முழுவதும் செங்கொடி இயக்கம் நடத்திய பல்வேறு போராட்ட வரலாறு மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

வெண்மணியின் தியாக வரலாறு, ஆதிக்கச் சக்திகளின் துயர்மிகுந்த தீண்டாமைக் கொடுமைகள், அவற்றை எதிர்கொண்டு சமர்புரிந்த தலைவர்களின் தீரமிகு போராட்டங்கள், மாஞ்சோலைத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருச்சி மாவட்டம் திண்ணியத்தில் தலித் மக்கள் வாயில் மனிதக் கழிவைத் திணித்த கொடுமை, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள்  பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த கொடுமைகள் என பல்வேறு நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் இந்திய அளவில், மாநில அளவில், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டக்களங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  குறிப்பாக, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி நடைபெற்ற போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. மாநாட்டுப் பேரணிக்கு வருகைதந்த ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள்,  மாநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் சங்கத் தலைவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.  இக்கண்காட்சியை விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரியப்பன் தலைமையில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், தலைவர் எஸ்.சந்தோஷ்குமார், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அ.மகாதீர் முகமது, இரா.வசந்தகுமார் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்திருந்தது.