tamilnadu

img

கண்ணூரின் நீங்காத நினைவுகளுடன் உணர்ச்சிகரமான மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி

ஏ.கே.ஜி.நகர் (கண்ணூர்), ஏப்.11- கய்யூர் உள்ளிட்ட தியாகிகளின் இடிமுழக்க நினைவுகளால் நிரம்பிய சிபிஎம் 23ஆவது அகில இந்திய மாநாட்டின் நிறைவு விழா உற்சாகமாகவும்- உணர்ச்சிகரமாகவும் அமைந்திருந்தது. புதிய மத்தியக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அரசியல் தலைமைக்குழு அறிவிப்புடன் ஞாயிறன்று (ஏப்.10) மதியம் மாநாட்டின் நிறைவு அமர்வு நடைபெற்றது. பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட சீத்தாராம் யெச்சூரி கட்சி மாநாட்டில் பேசினார். அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்திய குழுவில் இருந்து விடுபட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட பாராட்டு உணர்ச்சிகரமாக இருந்தது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக கம்யூனிச அரசியலிலும் தலைமைத்துவத்திலும் வலுவான அனுபவத்தைப் பெற்ற எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிமன் பாசு, ஹன்னன் முல்லா ஆகியோருக்கு சீத்தாராம் யெச்சூரி சால்வை அணிவித்து சிறப்பித்தார். அரசியல் தலைமைக்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்ட மூவரும் அரங்கம் அதிர இன்குலாப் முழக்கங்களுடன் வழி அனுப்பப்பட்டனர்.

கம்யூனிஸ்டுகளுக்கு ஓய்வு இல்லை, இவர்கள் கம்யூனிஸ்ட் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என யெச்சூரி குறிப்பிட்டார். முழுமையான ஒற்றுமையுடனும் தெளிவான பார்வையுடனும் கட்சியின் மாநாடு நிறைவடைந்தது. சங்பரிவார் சக்திகளின் சவாலை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளது என்ற பிரகடனமே கட்சி மாநாட்டின் அறைகூவல் என்றும் யெச்சூரி கூறினார். மாநாட்டுக்கு தலைமை வகித்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் கூறுகையில், கட்சி காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அனுபவம் கண்ணூரில் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன், கட்சியின் மாநிலச் செயலர் கோடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஏற்பாடுகளுக்கு தலைமை தாங்கினர். கட்சி காங்கிரஸால் தனது அட்டவணையை துல்லியமாக முடிக்க உதவியது இந்த வரவேற்புக் குழு. செந்தொண்டர்கள் ஆற்றிய சேவையும் குறிப்பிடத்தக்கது என்றார். மேற்குவங்க தோழர்கள் இசைத்த சர்வதேச கீதத்துடன் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாடு நிறைவடைந்தது.