திருச்சிராப்பள்ளி, ஜன.2 - திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உறையூர் காவல்கார தெருவில் அம்மிக்கல் கொத்தும் தொழில் செய்யும் 25 குடும்பத்தினர் கடந்த இரண்டு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் உறையூரில் ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இங்குள்ள வீடுகளுக்கு பட்டா மற்றும் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் இருந்த குடிநீர் குழாய் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
இதனால் இவர்கள் அடிப்படை வசதியின்றி மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறையூர் பகுதிக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளால் இவர்களது வீடுகளுக்கு தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் 25 குடும்பத்தினரும் கட்சிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் சிபிஎம் உறையூர் பகுதி செயலாளர் சந்திர பிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை திருச்சி மாநகர் மாவட்ட மாநாட்டில் மத்தியகுழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாதர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி, உறையூர் பகுதி குழு செயலாளர் லலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.