எப்போதுமே போராட்டக் களங்களில் உயிர்ப்பான கவிதை பூக்கும். இந்திய விடுதலைப் போராட்டமோ, ரஷ்யப் புரட்சியோ, சீனப்புரட்சியோ, வீரவியட்நாம் எழுச்சியோ எதுவும் விதிவிலக்கல்ல. 381 நாள் இந்திய நாட்டையே உலுக்கிய விவசாயிகளின் உறுதியான போராட்டம் இலக்கியத்திலும் வேர்விட்டது. நா. வே. அருளின் “பச்சை ரத்தம்” கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கிய போராட்ட தளபதிகளில் ஒருவரான தோழர் ஹன்னன் முல்லா தன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார். “பஞ்சாபில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயக்கத்தின் வெவ்வேறு அத்தியாயங்களைச் சித்தரிக்கும் வகையில் இயற்றப்பட்டதாக அறிகிறேன். பல இளைஞர்கள் பாடல்கள் எழுதினார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் மிகுந்த ஆர்வமுடன் பாடி வருகிறார்கள். ஹரியானாவில் பல நாட்டுப்புறப் பாடல்கள் இயற்றப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மட்டும் இல்லை; பல மொழிகளில் பல இலக்கியங்கள் கிளர்ந்து வந்தன. ”என்கிறார். தமிழிலும் பலர் பாடல் எழுதினர்; கவிதை புனைந்தனர். அவற்றை தொகுக்க வேண்டும். இந்த போராட்டக் களத்தில் உயிரோவியமாய் உதித்ததுதான் நா. வே. அருளின் “பச்சை ரத்தம்” இரத்தமும், சதையும், கோபமும், அறமும் கொப்பளிக்கும் கவிதைகள்.
“உதிரமும் உழவர்களும் ஒன்று உயிரணுக்களை வாழவைக்கும் உதிரத்தைப் போலவே உலகத்தை வாழவைக்கும் உழவர்கள். ” என மிகச் சரியாய் குறிக்கிறார். “ஒரு கட்டளையில் பசியின் குறைந்தபட்ச உத்திரவாதம் நீக்கப்படுகிறது. மறு கட்டளையில் வயல் வெளிகள் முழுவதும் பணத்தாள்கள் நடப்படுகின்றன. மூன்றாம் கட்டளையில் வயல் வெளிகளே சொந்தமில்லாமல் போய்விடுகின்றன.”
மோடியின் கொடூர வேளாண் சட்டங்களை இதைவிட எளிதாய் அழகாய்ச் சொல்ல சொற்கள் ஏது? “போராட்டத்தில் மரித்துப் போனவர்களின் எலும்புகள் மந்திரத் தன்மையாக மாறிவிடுகின்றன. அவ்வெலும்பு மஜ்ஜைகளில்தாம் கல் இதய மனிதர்களுக்கான வாய்க்கரிசி தயாராகின்றன.” வெறும் கோபம் மட்டுமல்ல; அறச்சீற்றம்; தொலை நோக்கு. “விவசாயிகளுக்காக எழுதப்படும் ஒவ்வொரு கவிதையும் ஆன்மாவில் எழுதி தோலில் மிளிர்கிறது” என நா. வே. அருளின் கவிதை வரிகள் அவரின் இந்நூல் முழுமைக்கும் அப்படியே பொருந்திப் போகிறது.
“கவிதைக்கு உவமை அழகு. அந்த உவமையால்தான் கவிதைகள் உயிர் பெறும். இந்தக் கவிதைத் தொகுப்பில் “ருத்திர தாண்டவம்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதை ஒரு புதிய கவிப்பார்வையைத் தருகிறது” என த.உதயச்சந்திரன் தன் அணிந்துரையில் சொல்லியிருப்பது மிகையன்று. விவசாயிகளுக்கு நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் நூல் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பெ. சண்முகம். “வெளியே தெரிவதில்லை எனினும் விதைக்குள் புதைந்து கிடக்கும் விருட்சத்தைப் போல அவன் ரெளத்திரம் பிரமாண்டமானது.” அவற்றை கவிதையாய் யாத்திருக்கும் நா. வெ. அருளின் பச்சை ரத்தமும் பிரமாண்டமானதே! இப்போதும் பலர் சொல்லுகின்றனர் கவிதை நூல் விற்பதில்லை. மெய்தான். ஆயின் இது கவிதை நூலல்ல; அதற்கும் மேல் “ஓர் நல்ல கவிதை எங்கே பிறக்கும்; எப்படிப் பிறக்கும்” என்பதன் நேரடி சாட்சியான - இலக்கணமான நூல். இந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வெளிவந்திருப்பது மகிழ்வான செய்தி. இதனை வாங்கி வாசிப்பது நம் கடமை. வாழ்த்துகள் அருள்! தொடர்க உம் கவிதைப் பயணம்!
- சு.பொ.அகத்தியலிங்கம்.