நீதிநாயகம் மாயூரம் வேதநாயகர்
தமிழில் முதல் நாவலாம் பிரதாப முதலியார் சரித்திரம் படைத்தவர் நீதிநாயகம் மாயூரம் வேதநாயகர். அவர் தனது நாவலில் தமிழ் மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்தாத நிலை கண்டு உளம் கொதித்தார். மகாகவி பாரதிக்கு முன்பே பெண்கல்வி, பெண்ணுரிமை பேசியவர் அவர், அதனால் அவரது நாவலின் நாயகி ஞானாம்பாள் மூலம் தமிழர்களுக்குச் சொல்கிறார். அது இப்போதும் பொருந்துவதாகவே இருப்பதுதான் சோகம்.
ஞானாம்பாள், வக்கீல்களைப் பார்த்துச் சொல்லுகிறாள். இன்று அரசாட்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற தமிழ்க் கோர்ட்டுகளில் சில தமிழ் நியாயவாதிகள் தமிழில் வாதிக்காமல் இங்கிலீசில் வாதிக்கிறார்களென்று கேள்விப்படுகிறோம். தேசபாஷை தமிழ்கோர்ட்டில் வழங்கா நின்ற பாஷையுந்தமிழ். நியாயாதிபதியுந் தமிழர்! வாதிக்கிற வக்கீலுந் தமிழர். வக்கீல்கள் கட்சிக்காரர் முதலானவர்களுந் தமிழர்கள். இப்படியாக எல்லாந் தமிழ் மயமாயிருக்க அந்த வக்கீல்கள் யாருக்குப் பிரீதி யார்த்தமாக இங்கிலீஷில் வாதிக்கிறார்கள் தெரிய வில்லை! அப்படி வாதிக்கிறதினால் அவர்களுக்கும் என்ன சிலாக்கியம்? மற்றவர்களுக்குத்தான் என்ன பாக்கியம். நியாயாதிபதியாவது தமிழ் அல்லது இங்கிலீஷ்காரராயிருக்கிற பட்சத்தில், இங்கிலீஷில் வாதிப்பது நியாயமாயிருக்கலாம். தமிழ் நியாயாதிபதி முன்பாக தமிழ் வக்கீல்கள் இங்கிலீஷில் வாதிப்பது ஆச்சரியர்யமல்லவா? ஜனங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதாகையால் ஐரோப்பாவில் கூட இத்தேச பாஷையில் பரீட்சைக்கொடுக்க வேண்டு மென்றும் அவர்கள் தேசபாஷையில் சம்பாஷிக்க வேண்டுமென்றும் சட்டம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அந்தப்படி பரீட்சைக் கொடுத்து வருவது மட்டுமின்றி கட்சிக்காரர்களிடம் தேசபாஷையில் சம்பாஷிக்கப் பிரியப் படுகிறார்கள். அப்படியிருக்கச் சுதேசிகளான வக்கீல்கள் சொந்த பாஷையைத் தள்ளிவிட்டு அந்நிய பாஷையில் விவாதிப்பது அசந்தர்ப்பமல்லவா? தங்களுக்குத் தமிழில் பேசத்தெரியாமையினால் இங்கிலீஷில் தங்களுக்குக் கௌரவம் போலச் சொல்லிக்கொள்ளுகிற சுய பாஷை பேசத்தெரியாமலிருப்பதுபோல இழிவான வேறொன்றி ருக்கக் கூடுமா? ஒரு ஐரோப்பியர் தம்முடைய பாஷையில் தமக்குப் பேசத் தெரியாதென்று சொன்னால் இந்த வக்கீல்களே அவரைப் பழிக்கமாட்டார்களா? அப்படியே அவர்களுடைய சுயபாஷையில் தங்களுக்கு வாதிக்கத் தெரியாதென்று சொல்வது அவர்களுக்கு அவமானம் அல்லவா?
பதங்கள் தமிழில் இல்லையா?
நியாய சாஸ்திரங்களெல்லாம் இங்கிலீஷ் பாஷை யிலிருப்பதாலும் இங்கிலீஷிலிருக்கிற நீதிவாக்கியங் களுக்குச் சரியான பிரதி பதங்கள் தமிழில் இல்லாமை யாலும் தாங்கள் இங்கிலீஷ் பாஷையை உபயோகிப்ப தாகச் சில வக்கீல்கள் சொல்லுகிறார்கள். இங்கிலீஷ் வார்த்தைகளுக்குச் சரியான பிரதிபதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்வது அவர்களுடைய தெரியாமையேயல்லாமல் உண்மையல்ல. தமிழ் நூல் களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால், பிரதிபதங்கள் அகப்படுவது பிரயாசமா? அப்படித்தான் இரண்டொரு சங்கேத வார்த்தைகளுக்குத் தமிழிலாவது சமஸ்கிருதத்திலாவது பிரதிபதங்கள் அகப்படாத பட்சத்தில், அந்த வார்த்தைகளை மட்டும் இங்கிலீஷிலே பிரயோகித்தால் அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்? தமிழிலே வாதித்தல் இங்கிலீஷ் மறதியாய்ப்போகுமென்ற பயத்தினால் சிலர் இங்கிலீஷிலேயே வாதிக்கிறார்கள். அவ்வளவு சொற் பத்தில் மறந்து போகிற இங்கிலீஷ் இந்த வக்கீல்களு டன் எத்தனை நாள் கூடி வாழப்போகிறது? வக்கீல்கள் இங்கிலீஷில் வாதிப்பது அக்கிரமமென்று சில தமிழ் நியாயாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தும், அதைக் கண்டித் தால் தங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதென்று வக்கீல் களும் மற்றவர்களும் நினைப்பார்களென்று எண்ணி, இங்கிலீஷ் வாதத்துக்கு இடங்கொடுத்து வருகிறார்கள். பின்னும் அந்த நியாயாதிபதிகளும் கோர்ட்டுகளில் எப்போதும் இங்கிலீஷையே உபயோகப்படுத்தி, அநேக நடவடிக்கைகளை இங்கிலீஷிலேயே நடத்துகிறார்கள்.
சில சமயங்களில் வக்கீலும் நியாயாதிபதிகளும் இங்கி லீஷை நன்கு படியாதவர்களானதால் ஒருவர் சொல்வது ஒருவருக்குத் தெரியாமல் கைச்சாடை செய்துகொண்டு சங்கடப்படுகிறார்கள். அந்தக் கோர்ட்டுகள் நாடகசாலை போல தோன்றுகின்றனவே யல்லாமல் நியாயச் சாலை யாக தோன்றவில்லை. ஒவ்வொரு வழக்கிலும் உண்மை களைக் கண்டுபிடித்து நீதிசெலுத்த வேண்டியது கோர்ட்டார் கடமையாயிருக்கிறது. ஜனங்களுக்குத் தெரிந்த பாஷையில் வக்கீலினுடைய வாதமும் மற்ற நடபடிகளும் நடந்தால் உண்மை வெளியாகுமே தவிர, அவர்களுக்குத் தெரியாத பாஷையில் நடந்தால் எப்படி உண்மை வெளியாகும். இங்கிலீஷ் தெரிந்த சுதேச நியாயாதிபதிகள் சித்தாந்தம் இங்கிலீஷில் எழுதலா மென்று சிவில் புரோசிடியூர் (Civil procedure Code) சொல்லுகிறதேயல்லாமல் மற்ற நடவடிக்கைகளையும் இங்கிலீஷில் நடத்தும்படி சொல்லவில்லை. பிரதேசக் கோர்ட்டுகளில் சுதேச பாஷைகளையே உபயோகிக்க வேண்டு மென்றும், அந்நிய பாஷைகளை உபயோகிக்கக் கூடாதென்றும், இங்கிலீஷ் துரைத்தினரே உத்தரவு செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கச் சில தமிழ் நியாயாதிபதிகளும் சில வக்கீல்களும் இங்கிலீஷ் பாஷையை மறந்து போகாமலிருக்க வேண்டியதற்காக இங்கிலீ ஷைக் காத்து நியாயபரிபாலனத்தைக் குளறுபடி செய்வது கிரமமா?
முகத்தில் கரியைப் பூசுவது போல
கோர்ட்டில் நடக்கிற விசாரணைகளும், தீர்மா மானங்களும் அபராதங்களும், ஆக்கினை களுஞ் சகல ஜனங்களுக்குப் பிரசித்தமாய்த் தெரிந்திருந்த தால் அவர்கள் தங்கள் தங்களுடைய காரியங்களில் ஜாக்கிரதையாயிருக்கவும் துன்மார்க்கங்களில் பிர வேசிக்காமலிருக்கவும் எல்லாருக்கும். அநுபோகம் உண்டாகும் அல்லவா? கோர்ட்டில் நடக்கும் விவகாரங் களைக் கேட்டு விவேகம் அடைவதற்காகவே ஜனங்கள் கூட்டம் கூட்டமாய்க் கோர்ட்டுகளுக்குப் போய்க் காத்திருக் கிறார்கள். அவர்களுடைய முகத்திலே கரியைத் பூசுவது போல அவர்களுக்குத் தெரியாத பாஷையில் விவகாரம் நடந்தால் அவர்களுக்கு என்ன ஞானம் உண்டாகக்கூடும்? குருடன் கூத்துப்பார்க்கப் போனதுபோலவும், செவிடன் பாட்டுக் கேட்கப்போனது போலவும், யாதொரு பிரயோ ஜனமுமில்லாமல் அவர்கள் வீட்டுக்குத் திரும்பு கிறார்கள். தமிழக கோர்ட்டுகளில் இரண்டொரு வக்கீல்களுக்கு மட்டும் இங்கிலீஷ் தெரியுமேயன்றி, மற்ற வக்கீல் களெல்லாரும் இங்கிலீஷ் தெரியாதவர்களாயிருக்கிறார் கள். ஒரு வக்கீல் இங்கிலீஷில் வாதிப்பது இங்கிலீஷ் தெரியாத மற்ற வக்கீல்களுக்கு அவமானம் அல்லவா? அவர்களுடைய வருமானத்துக்கு குறைவு அல்லவா? தமிழ் நியாயாதிபதி முன்பாக இங்கிலீஷில் வாதிக்கிற தமிழ் வக்கீல்கள் இந்தத் தமிழ் நாட்டையும், தமிழ் பாஷையையும், மற்ற வக்கீல்களையும், கட்சிக்காரர் களையும், சகல ஜனங்களையும் மெய்யாகவே அவமானப்படுத்துகிறார். அவருடைய வாதம் யாவருக்குங்கர்ண கடோரமாயிருப்பதால் அவர் எப்போது நிறுத்துவாரோவென்று எல்லாருங் கடுகடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் முகமிருக்கிற கோரத்தை இந்த வக்கீலே திரும்பிப் பார்ப்பாரானால் அப்பால் ஒரு வார்த்தைகூடப் பேச அவருக்குத் தைரியம் கண்டாகாது. இப்படியாக அந்த வக்கீல்களுடைய வாதம் அபவாதமாக முடிகிறபடியால் நீங்களும் அவர்களைப்போல அந்நிய பாஷைகளில் வாதிக்காமல் தமிழிலே வாதிப்பீர்களென்று நம்புகிறோம்.
தோல்வியை வெற்றியென்று புரிந்து
புலியைப் பார்த்து நரி சூடிட்டுக்கொண்டதுபோல, இங்கிலீஷில் வாதிக்கிற வக்கீல்களைப் பார்த்து இங்கிலீஷ் நன்றாகத் தெரியாத சில வக்கீல்களும், அரைப்படிப்பைக் கொண்டு அம்பலமேறுவது போல இங்கிலீஷில் வாதிக்கத்துணிகிறார்கள். அவர்கள் சொல்வது கோட்டாருக்குத் தெரியாமலும் கோர்ட்டார் சொல்வது அவர்களுக்குத் தெரியாமலும் அவஸ்தைப்படுகிறார்கள். அப்படிப் பட்ட ஒரு வக்கீல் ஒரு பெரிய வழக்கில் ஒரு ஜமீன்தாருக்கு வக்கீலா யிருந்தார். அந்த வக்கீலினுடைய இங்கிலீஷ் வாதத்தினாலேயே அந்த வழக்கு அபஜெயமாய்ப் போய் ஜமீன்தாருக்கு விரோதமாய் கோர்ட்டார் இங்கிலீஷில் ஒரு பெரிய சித்தாந்தம் எழுதிப் படித்தார். அந்தச் சித்தாந்தம் ஜமீன்தாருக்கு அனுகூலமென்று வக்கீல் பிசகாக எண்ணிக்கொண்டு ஜமீன்தாருடைய ஊருக்குப் போய் அவர்பக்ஷம் தீர்ப்பானதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டவுடன் ஜமீன்தாருக்கு ஆனந்தம் உண்டாகி, வக்கீலுக்கு அளவற்ற வெகுமானஞ் செய்ததுமன்றி, கோயிலுக்குக் கோயில் அபிஷேகங்களும் தான தர்மங்களும் ஏழைகளுக்குக் கல்யாணங்களும் விருந்துகளும் வேடிக்கைகளும் செய்தார். கோர்ட்டார் தீர்மானஞ் சொன்ன அன்றையதினமே கோடைக் காலத்துக்காக இரண்டு மாசக்காலம் கோர்ட்டு நிறுத்தப்பட்டு எல்லோரும் அவர்களுடய ஊர்களுக்குப் போய்விட்டதால் ஜமீன்தாருக்கு உண்மை தெரிய இடமில்லாமல் போய்விட்டது. அவர் வரப்போகிற வியாஜ்ஜியச்சொத்தை நம்பி, கையிலிருந்த சொத்துக்களையெல்லாம் மேற்கூறியபடி விருதாவிரயஞ் செய்துவிட்டார். கோர்ட்டுக்குத் திறந்து உண்மை தெரிந்த உடனே, ஜமீன்தாருக்கும் வக்கீலுக்கும் என்ன பிரமாதம் நடந்திருக்குமென்பதை நான் சொல்ல வேண்டுவதில்லையே! இங்கிலீஷ் அரசாட்சியில் வக்கீல்களைப் போலவே மற்ற உத்தியோகஸ்தர்களும் வித்தியார்த்திகளும் சுதேச பாஷைகளை நிகிர்ஷ்டம் செய்கிறார்கள்.
‘ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியைத் துரத்தினது’ போல இங்கிலீஷ், பிரான்சு முதலிய அன்னிய பாஷைகள் மேலிட்டு தேசபாஷைகளின் பெயரைக் குலைத்துவிட்டன. அந்த ராஜ பாஷைகள் ஜீவனத்துக்கு தர்க்கமாயிருக்கிறபடியால், அநேகர் வயிறே பெரியதென்றெண்ணி அந்தப் பாஷைகளை மட்டும் அதிக சிரத்தையாகப் படிக்கிறார்கள். ராஜாங்கத்தாருடைய சகாயம் இல்லாமலிருக்குமானால் சில வருஷங்களுக்கு முன்னமே சுதேச பாஷைகள் இருந்த இடந்தெரியாமல் அப்பிரசித்தமாய்ப் போயிருக்கும். ‘ராஜாங்கத்தார் சுதேச பாஷைகளைச் சில பரீஷைகளுடன் சேர்த்து, அவைகள் இந்நாளளவும் ஜீவித்திருக்கும்படி ஆதரித்து வந்தார்கள். இப்போது அவர்களே உபேஷையாயிருப்பதால் சுதேசபாஷைகளுக்கு நாளுக்கு நாள் ஜீவதாது குறைந்து வருகின்றது. வித்தியார்த்திகளுடைய இஷ்டப்படி சுதேச பாஷைகளையாவது அல்லது லத்தீன் (latin), சமஸ்கிருதம் (Sanskrit) முதலிய பாஷைகளையாவது படிக்கலா மென்று துரைத்தனத்தாரே நியமனஞ் செய்திருப்பதால், சுதேச பாஷைகளுக்கு ஜீவாந்த காலஞ் சமீபித்திருக்கின்றது. சென்னைப் பட்டணம் செனட் (Senate) என்னும் ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்த அநேக பிரபுக்கள், சுதேச பாஷைகளை ஆதரிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனால் அந்தச் சங்கத்தில் இரண்டொரு சுதேச கனவான்கள் அத்தியாவஸ்தையிலிருக்கிற சுதேச பாஷைகளுக்குப் பிராணதாரகங் கொடுத்துக் காப்பாற்றி வருகிறார்கள். இங்கிலீஷ்காரர்கள் தங்களுடைய சுதேசங்களில் இங்கிலீஷை யாவது அல்லது வேறெந்தப் பாஷையையாவது இங்கிலீஷ் பிள்ளைகள் படிக்காமென்று உத்தரவு செய்வார்களா? அப்படி ராஜாங்கத்தார் உத்தரவு செய்தாலும் ஜனங்கள் இங்கிலீஷ் பாஷையை விட்டுவிட்டு அந்நிய பாஷைகளை அப்பியசிப்பார்களா? அப்படியிருக்க இந்தத் தேசத்தார் சொந்தப் பாஷைகளையாவது அல்லது ராஜ பாஷைகளையாவது படிக்கலாமென்று இங்கிலீஷ் துரைத்தனத்தார் உத்தரவு செய்திருப்பதும், அந்த உத்தரவை சுதேச கனவான்கள் ஆட்சேபிக்காமல் சும்மா இருப்பதும் நியாயமா? நம்முடைய தேசாசாரங்களையும் சம்பிரதாயங்களையும் அதிகாரிகள் விட்டுவிடச் சொன்னால் விட்டுவிடுவோமா? மத்தியில் உண்டான தேசாசாரங்களைப் பார்க்கிலும் ஆதிகாலமுதல் உண்டாயிருக்கிற தேசபாஷை உத்கிருஷ்டமல்லவா?
பெற்றதும் தமிழ் வளர்த்ததும் தமிழ்
எண்ணிறந்த தேவாலயங்களும், பிரமாலயங்களும், சத்திரங்களும் நீர்வளமும் நிலவளமும், நாகரிகமும் நியமங்களும் நிறைந்த இந்தத் தமிழ்நாடு, மற்றைய நாடுகளிலும் விசேஷமென்றும், அப்படியே தமிழ் பாஷையும் சர்வோத்கிருஷ்டமான பாஷை யென்றுஞ் சகலமும் அங்கீகரிக்கிறார்கள். அகஸ்தியர் நாவிலே பிறந்து. ஆரியர் மடியிலே வளர்ந்து. ஆந்திரம் முதலிய பாஷைகளின் தோழமை பெற்று, சங்கப் புலவர்களுடைய நாவிலே சஞ்சரித்து வித்வான்களுடைய வாக்கிலே விளையாடி, திராவிட தேசம் முழுவதும் ஏக சக்ராதிபத்தியஞ் செலுத்தி வந்த தமிழ் அரசியலை இப்போது இகழலாமா? நம்மைப் பெற்றதும் தமிழ், வளர்த்தது தமிழ், நம்மை தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ், நம்முடைய மழலைச் சொல்லால் நமது தாய் தந்தையரைச் சந்தோஷிப்பதுந் தமிழ். நாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்தபோது முந்தி உச்சரித்ததும் தமிழ், நம்முடைய அன்னையும் தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டினதும் தமிழ், தாய், தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததும் தமிழ். ஆதிகாரம் முதல் நம்முடைய முன்னோர்களெல்லோரும் பேசின பாஷையும் எழுதி வைத்த பாஷையும் தமிழ். இப்போது நம்முடைய மாதா பிதாக்களும் ஜனங்களும் இஷ்டமித்திரர்களும் இதரர்களும் பேசுகிற மொழியும் தமிழ். நம்முடைய வீட்டுப் பாஷையும் தமிழ், நாட்டுப் பாஷையும் தமிழ், இப்படிப்பட்ட அருமையான பாஷையை விட்டுவிட்டுச் சமஸ்கிருதம் லத்தீன் முதலிய அந்நிய பாஷைகளைப் படிக்கிற வர்கள், சுற்றத்தார்களை விட்டுவிட்டு அந்நியர்களிடத்தில் நேசஞ் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள்.
ஆபத்துக் காலத்தில் சுற்றத்தார் உதவுவார்களேயல்லாது அந்நியர்கள் எப்படி உதவமாட்டார்களோ அப்படியே எந்தக் காலத்திலும் நமக்குச் சுதேச பாஷை உதவுமேயல்லாமல், அந்நிய பாஷைகள் உதவுமா? லத்தீனுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சொந்தக்காரர்கள் அல்லாமையால் அவைகள் இறந்துபோன பாஷைகளாயும் தமிழ் முதலிய தேசபாஷைகள் ஜீவிக்கிற பாஷைகளாயும் இருக்கின்றன. பல பாஷைக்காரர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசுவதும் ஒருவருடைய கருத்தை ஒருவருக்கு வெளிப்படுத்துவதுமே பாஷாந்திரங்களைப் படிப்பதினால் உண்டாகிற முக்கிய பிரயோஜனாமாயிருக்கிறது. ஒரு பாஷைக்குச் சொந்தக்காரர்களே இல்லாமலிருப்பார்களானால், அந்தப் பாஷையை நாம் படித்து யாரிடத்திலே போஷிக்கப் போகிறோம்! சமஸ்கிருதம், லத்தீன் முதலிய பாஷைகள் அதிகக் கடினமும் வருத்தமுமான பாஷை களாயும் இருக்கின்றன. அவைகளின் இலக்கணம், இலக்கியம், தர்க்கம் முதலிய பல பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவைப் படிப்பதற்கு ஒரு புருஷ ஆயுசு போதாதென்று, அந்தப் பாஷைகளை உணர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். சம்பாஷணைக்கும் உலக லியாபாரங்களுக்கும் உபயோகமில்லாத அந்தப் பாஷைகளை அவ்வளவு பிரயாசைப்பட்டுப் படித்தும் பிரயோஜனமென்ன? ஆனால் சமஸ்கிருதமும், லத்தீனும் அதிக சிறப்பும் அழகும் அலங்காரமும் பொருந்திய பாஷைகளென்பதில் சந்தேகமில்லை. அவகாச முள்ளவர்கள் சொந்தப் பாஷைகளோடு கூட அந்தப் பாஷைகளை யும். நன்றாகப் படிக்காமல் அந்த அந்நிய பாஷைகளிலே காலத்தைப் போக்குவது அகாரியமென்றுதான் நாம் ஆட்சேபிக்கிறோம்.
மாதா வயிறெரிய மகேசுர பூஜைசெய்வதுபோல்
இங்கிலீஷ், பிரான்சு முதலிய ராஜபாஷைகளை படிப்பிக்க வேண்டாமென்று நாம் விலக்கவில்லை, ஏனென்றால் நாம் நடக்க வேண்டிய சட்டங்களும், ஒழுங்கு நியாயப்பிரமாணங்களும் ராஜபாஷைகளிலேயிருக்கிறபடியால் அந்தப் பாஷைகள் நமக்குத் தெரியாவிட்டால் ராஜாங்கத்தில் நாம் எப்படி நிர்வகிக்கக்கூடும் அந்நிய சன்மார்க்கங்களைப் பற்றியும் உலகத்துக்கு உபயோகமான பல விஷயங்களைப் பற்றியும் அந்த ராஜபாஷைகளில் அநேக அருமையான சிரந்தங்கள் இருக்கிறபடியால் அவைகளைப் படிக்கப் படிக்க அறிவு விசாலிக்குமென்பது திண்ணமே! ஆனால் மாதா வயிறெரிய மகேசுர பூஜை செய்வதுபோல், சொந்த பாஷைகளைச் சுத்தமாக விட்டுவிட்டு ராஜபாஷைகளை மட்டும் படிப்பது அநுசிதமல்லவா? அநேகர் தங்கள் சுயபாஷைகளில் தங்களுடைய கையெழுத்துக்களைக் கூடப் பிழையில்லாமல் எழுத அசக்தர்களாயிருக்கிறார்கள். சிலர் தமிழ்ப் பாஷையைத் தெரியாமலிருப்பது தங்களுக்கு கௌரவமாகவும் அந்த பாஷையை அறிந்திருப்பது தங்களுக்கு அகௌரவமாகவும் எண்ணு கிறார்கள். சுயபாஷா ஞானம் தங்களுக்கு எவ்வளவு குறைவாயிருக் கிறதோ அவ்வளவுக்கு ராஜபாஷைகளில் தங்களைச் சமர்த்தர்க ளென்று சகலரும் எண்ணுவார்களென்று நினைத்து சுயபாஷைகளை முழுதும் அலட்சியம் செய்கிறார்கள்.
அவர்கள் தமிழ்ப் புத்தகங்களைக் கையிலே தொடுகிறதாயிருந்தால், பாம்பின் புற்றுக்குள்ளே கையை விட்டது போலிருக்கும். அவர்களுக்குத் தமிழ்ப்பாஷை வேப்பிலை கஷாயங் குடிப்பது போலிருக்கும் தமிழ் வார்த்தைகளைக் கேட்பதும் அவர்களுக்கு கர்ண கடோபரமாயிருக்கும். அவர்கள் தமிழ்ப்பாஷையை பேசினாலும் முக்காற்பங்கு இங்கிலீசும் காற்பங்கு தமிழும் கலந்து பேசுவார்கள். அவர்களுக்கு தேசாபிமானமுமில்லை பாஷாபிமானமுமில்லை. யானை முதல் எறும்புக்கடையாக உள்ள சக ஜீவஜந்துக்களுக்கும், தனித்தனியே ஒவ்வொரு பாஷை சொந்தமாயிருக்கின்றது. அந்தந்த ஜந்துக்களுக்குரிய பாஷைகளை அவைகள் ஒரு காலத்திலும் மறவாமல் எப்போதும் உபயோகித்துக் கொண்டு வருகின்றன. இங்கிலீஷ்காரர் முதலிய ஐரோப்பியர்கள், தங்கள் தங்களுடைய சொந்தப் பாஷைகளை எவ்வளவோ கௌரவமாகப் போற்றி வருகிறார்களென்பதை இந்த நித்நியார்த்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும் தங்கள் ஜன்ம பாஷையாகிய தமிழையும், தமிழ் வித்துவான்களையும் அவமதிக்கலாமா, தமிழ் நூல்களையே பாராத இவர்கள் அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திருவள்ளு வருடைய குறளை அவர்கள் ஜன்மாந்திரத்திலும் பார்த்திருப்பார்களா? கம்பருடைய கற்பனையைக் கனவிலுங் கேட்டிருப்பார்களா? நாலடி யார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப்பார்களா? ஔவையாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? இன்னும் எண்ணிக்கையில்லாத தமிழ்ப்புலவர்களுடைய பிரபந்தங்களை இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்.
அந்நிய தேசத்தார் போல்...
‘இங்கிலீஷ், பிரான்சு முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசனகாவியங்கள் இல்லாமலிருப்பது, பெருங்குறைவென்பதை நாம் ஒப்புக்கொள்ளுகிறோம். அந்தக் குறைவைப் பரிகரிப்பதற்காகத்தான் எல்லா ராஜபாஷைகளுந் தமிழுங் கலந்து படிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ராஜபாஷைகளும் சுதேச பாஷைகளும் நன்றாக உணர்ந்தவர்கள் மட்டும் வசனகாவியங்களை எழுத கூடுமேயல்லாது இதரர்கள் எழுதக்கூடுமா? வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது செய்யுட்களைப் படித்து திருந்துவது அசாத்தியம் அல்லவா? ஐரோப்பிய பாஷைகள் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால் அந்த தேசத்தில் நாகரீகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படி நம்முடைய சுயபாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமிருக்கும் வரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம். சுதேச பாஷைகளைப் படிக்காமல் ராஜபாஷைகளை மட்டும் படிக்கிறவர்கள் மற்ற ஜனங்களை கலவாமல் தாங்கள் ஒரு அந்நிய தேசத்தார்போல் ஜீவித்திருக்கிறார்கள்.
ராஜபாஷைகள் தெரியாத தங்களுடைய மாதா பிதாக்கள் மனைவி மைந்தர் முதலியோர் களிடத்தில் பேசுவதுகூட அவர்களுக்கு அருவருப்பாயிருக்கிறது. தாங்களும் சுயபாஷைகளை நன்றாகப் படிக்காமலும் மற்றவர் களுக்குப் போதிக்காமலிருப்பதும் அவர்களுடைய பிசகேயல்லாமல் அவர்களுடைய பந்து ஜனங்களின் பிசகேல்லவே ராஜபாஷைகளைப் படித்து கல்வியின் அருமை அறிந்தவர்களே சுய பாஷைகளைக் கவனிக்காமலிருப்பார்களானால் இதர ஜனங்கள் எப்படி கவனிக்கக்கூடும். ஸ்திரிகளும் மற்ற ஜனங்களும் சுய பாஷை களைப் படித்துத் திருந்த வேண்டுமேயல்லாது, அவர்கள் எல்லோரும் ராஜபாஷைகளைக் கற்றுணர்வது சாத்தியமான காரியமா? சுயபாஷை யைக் கல்லாமல் ராஜபாஷையை மட்டும் படிக்கிறவர்கள் தாங்கள் மட்டும் பிழைக்க அறிவார்களேயன்றி மற்றவர்களுக்கு அவர்களால் என்ன சாதகம்? சுயபாஷைகளைப் படிக்காதவர்கள் தாங்கள் கெடுவது மன்றி, ஐரோப்பியர்களையும் கெடுக்கிறார்கள். முன்வந்த ஐரோப்பியர்கள் இத்தேசபாஷைகளை எவ்வளவோ சரளமாகப் படித்தார்கள். இப்போது சுதேசிகளே பாஷைகளைக் கைவிட்டபடி யால் ஐரோப்பியர்களும் அந்தப் பாஷைகளை அபார்த்தமாக எண்ணுகிறார்கள். அவ்வாறு நம்முடைய பாஷைகளை அந்நியர்கள் அவமதிக்கும்படி செய்வது அபத்தம் அல்லவா?
ஞானதீபம் ஏற்றுவார்கள்
இந்தத் தேசத்துப் பெரிய பிரபுக்கள், தனவான்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தார்கள், பாரி வர்த்தகர்கள் முதலானவர்களுடைய அறியா மையை நினைக்கும் போது நமக்குப்பிரவாகமும், பெருமூச்சும் உண்டாகின்றன. அவர்களில் அநேகர் சுத்த நிரக்ஷரகுக்ஷிகளாயிருக்கிறார்கள். சிலர் தங்களுடைய கையெழுத்துக்களைமட்டும் எழுதக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். “சுப்பிரமணியன்” என்பதற்கு “சுக்கிரமணியன்” என்றும், “சிதம்பரம்” என்பதற்கு செலம்பரம்” என்றும், “துரைசாமி” என்பதற்கு “தொரைசாமி” “பொன்னம்பலம்” என்பதற்கு “பொண்ணம்பளம்” என்றும், “வைத்திலிங்கம் என்பதற்கு “வயித்துலிங்கம்” என்றும் கையெழுத்து வைக்கிறார்கள். இந்த வித்துவசிரோ மணிகளே, ஜூரிகளாகவும் (Juries) முனிசிப்பல் கமிஷனர்களாகவும் (Municipal Commissioners) லோக்கல் போர்டு மெம்பர்களாகவும் (Local Board Members) பெஞ்சு ‘மாஜிஸ்திரேட்டுக்களாகவும் (Bench Magistrates) தேவாலய தர்மாலய விசாரணைக் கர்த்தாக்களாகவும் (Trustees of temples and charitable insititution) நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய அதிகார ஸ்தானங்களுக்குப் போகும்போது, பிரதிமைகளைப்போல் நாற்காலிகளில் வீற்றிருக்கிறார்களேயல்லாது அவர்களுடைய வேலை இன்னதென்பதைப் பரிச்சேதம் அறியார்கள். பிரதிமைகளுக்கும் இவர்களுக்கும் பேதம் என்னவென்றால் பிரதிமைகள் அசையாமலிருக்கின்றன. இவர்கள் நாற்காலிகளில் தூங்கிவிழுந்து அசைந்து கொண்டிருக்கிறார்கள். தேசபாஷைகளில் தகுந்த வசன காவியங்களிருக்குமானால், இவ்வளவு நிர்ப்பாக்கியமான ஸ்திதியிலிருப்பார்களா? ஆதலால் இங்கிலீஷ், பிரான்சு முதலிய ராஜபாஷைகளைப் படிக்கிறவர்கள், தேசபாஷைகளையுத் தீர்க்கமாக உணர்ந்து இந்தத் தேசத்தைச் சூழ்ந் திருக்கிற அறியாமை என்னும் அந்தகாரம் நீங்கும்படி காவியங்க ளென்னும் ஞான தீபங்களை ஏற்றுவார்களென்று நம்புகிறோம். தமிழ் படிக்காதவர்கள் தமிழ் நாட்டில் வசிக்கயோக்கியர்கள் அல்ல. அவர்கள் எந்த பாஷைகளைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்க ளுக்குத் தகுந்த இடமாகையால் சுயபாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பி விடுவோம். பிரான்சு மட்டும் படிக்கிறவர்களை பாரீசுப் (Paris) பட்டணத் துக்கு அனுப்புவோம். லத்தீனுக்கும் (Latin) சமஸ்கிருதத்துக்குஞ் சொந்த ஊர் இல்லாதபடியால் அந்த பாஷைகளைப் படிக்கிறவர் களை அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம்” என்றாள்.
தகவல்: சி.இராமகிருஷ்ணன், மதுரை