சென்னை,நவ.20- மாணவர் பேரவை தேர்தலை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. தமிழ்நாட்டில் மாணவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க கால் நூற்றாண்டு காலமாக நிறுத்தி வைத்துள்ள மாணவர் பேரவை தேர்தலை அனைத்து கல்வி நிலையங்களிலும் நடத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் 10 லட்சம் மாணவர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நவம்பர் 20 புதனன்று துவங்கியது. இந்த இயக்கம் டிசம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாநிலத்தலைவர் தௌ.சம்சீர் அகமது துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் மாநிலச் செயலாளர் ஜி. அரவிந்தசாமி கலந்து கொண்டார். சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் சி.மிருதுளா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு கல்வி நிலையங்களில் பங்கெடுத்து கையெழுத்து இயக்கத்தை துவங்கிவைத்தனர்.